ஏழை நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள்!
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான ஹரீஷ் கருவச்சேரி, மயில் ரத்தீஷ் இருவரும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டதால் கொரோனா நோயாளிகளை ஆட்டோவில் அழைத்து சென்று உதவி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கி இத்தனை மாதங்கள் கடந்த நிலையிலும் சக மனிதர்களை அச்சம் நிறைந்த கண்களுடன் பார்க்கும் நிலை இன்னமும் மாறவில்லை. நமக்கு தொற்று பரவிவிடுமோ என்கிற பயமே இதற்குக் காரணம்.
ஆனால் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் இத்தகைய அச்சத்தை ஒதுக்கிவிட்டு தன்னலமின்றி நோய் பரவலைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் பொதுமக்கள் பலரும் நேரடியாக களமிறங்கியும் தொலைவிலிருந்தும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அப்படித்தான் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருப்பதைக் கண்டு கொரோனா நோயாளிகளுக்கு உதவி வருகின்றனர்.
காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹரீஷ் கருவச்சேரி, மயில் ரத்தீஷ் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். கொரோனா நோய்தொற்று பாதித்தவர்களும் அறிகுறிகள் இல்லாதவர்களும் பரிசோதனை மையங்களுக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்று திரும்ப உதவும் வகையில் தங்கள் ஆட்டோக்களை தற்காலிக ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளனர்.
“நாங்கள் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கவில்லை. அறிகுறிகளற்ற நோயாளிகள் பரிசோதனை மையங்களுக்கும் ஆரம்ப சிகிச்சை மையங்களுக்கும் சென்று திரும்ப உதவுகிறோம். நீலேஸ்வரம் பகுதியில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருப்பதால் இந்த சேவையில் ஈடுபடத் தொடங்கினோம்,” என்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் இவர்கள் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவியுள்ளனர். இவர்களுக்கு இருமுறை கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறையும் பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்யப்பட்டன.
நீலேஸ்வரம் தாலுகா மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இவர்களுக்கு சேவையளிக்க போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் போன காரணத்தால் மருத்துவமனை ஓட்டுநர்களை நியமித்தது.
மாவட்ட கோவிட் கண்காணிப்பு நோடல் அதிகாரியான டாக்டர் வி சுரேஷன் ஹரீஷின் மனிதாபிமானமிக்க குணத்தை நன்கறிவார். இவர் நிலேஷ்வர் மாவட்ட தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜமால் அஹ்மத், ஹெல்த் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தீர்த்தங்கரா ஆகியோரிடம் ஹரீஷின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் யோசனையை முன்வைத்தார்.
ஹரீஷ், மயில் இருவரும் விரைவில் வேலையைத் தொடங்கினார்கள். இவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், ஸ்ப்ரே கன், கையுறைகள், ஷாம்பூ போன்றவை வழங்கப்பட்டது.
இவர்களது ஆட்டோவில் பயணிகள் இருக்கை மற்றும் ஓட்டுநர் இருக்கைக்கு இடையே டிரான்ஸ்பரண்ட் ஷீட் போடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் பிபிஈ கிட் வாங்க மறுத்துவிட்டதாக ‘தி லாஜிக்கல் இந்தியன்’ குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ட்ரிப் முடிந்த பின்னரும் இவர்கள் தங்கள் ஆட்டோவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்கின்றனர். இருக்கைகளைத் துடைக்கப் பயன்படுத்தும் காட்டன் துணிகளை காற்று புகாதவாறு பத்திரமாக சேமித்து வீட்டிற்கு எடுத்து சென்று முறையாக எரித்து விடுகின்றனர்.
“எங்கள் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் கொரோனா நோயாளிகள் அல்லது தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள். அதனால் நாங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்,” என்றார் மயில்.
பயணிகள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் வழக்கமான கட்டணங்களையே இவர்கள் வசூலிக்கின்றனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA