மே 23 முதல் சென்னை தவிர தமிழகம் முழுதும் ஆட்டோ, ரிக்ஷா இயங்க அனுமதி!
சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ் நாடு முழுவதும் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள், சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வைரஸ் நோய் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
பொது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் காற்றின் தன்மையை கருத்தில் கொண்டு சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ் நாடு முழுவதும் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள், ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், மே 23 முதல் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் ஓட்டுநர்கள் சானிடைசர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர்களும் பயணிகளும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
மேலும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்ட கிறார்கள்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்: டிஐபிஆர்