உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 19 வயது ராதிகா!
இந்த இளம் வயதில் இவர் ஏன் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வுத் திட்டத்தை தொடங்கியுள்ளார் என தெரிந்து கொள்ளுங்கள்.
மாற்றத்தை ஏற்படுத்த உதவவேண்டும். இதுவே ராதிகா ஜோஷியின் விருப்பம். சிறுநீரக செயலிழப்புக் காரணமாக இவருக்கு மிகவும் நெருக்கமான நபர் உயிரிழந்துள்ளார். அப்போது இவரது வயது 17.
இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்து இவர் ஆய்வு செய்தபோது ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் உடல் உறுப்பு கிடைக்காத காரணத்தால் உயிரிழக்கின்றனர் என்பதை உணர்ந்தார். ஒரு மில்லியன் பேரில் வெறும் 0.86 சதவீதம் பேர் மட்டுமே உடல் உறுப்புகளை தானம் செய்கின்றனர். இது தொடர்பான தவறான நம்பிக்கைகளும் போதுமான விழிப்புணர்வு இல்லாமையுமே இதற்குக் காரணம்
ராதிகாவிற்கு 18 வயதிருக்கையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் நோக்கத்துடன் ’தி செகண்ட் சான்ஸ் பிராஜெக்ட்’ நிறுவினார்.
உடல் உறுப்பு தானம்
மோசமான நிலையில், உயிர் காக்கும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் 1.5 லட்சம் பேர் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதில் 5,000 நோயாளிகள் உடல் உறுப்பு தானம் பெறுகின்றனர். மூளைச்சாவு அடைந்தோரிடமிருந்து பெறப்படும் எண்ணிக்கை 200. பல நேரங்களில் உடல் உறுப்பிற்காக ஒரு நோயாளி மூன்று முதல் நான்காண்டுகள் காத்திருந்து பலனில்லாமல் போய்விடுகிறது. 1997-ம் ஆண்டிற்கு முன்பு இந்தியாவில் வெற்றிகரமாக ஒரே ஒரு உடல் உறுப்பு தானம் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக குறைந்த எண்ணிக்கையிலேயே உடல் உறுப்பு தானம் வழங்கப்படுகிறது. முதலில் உடல் உறுப்பு தானத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள், நோயாளிகள், மருத்துவர்கள் போன்றோரிடையே இல்லை. இது சரியான விதத்தில் மக்களிடையே எடுத்துரைக்கப்படாததால் வெகு சிலரே உடல் உறுப்பு தானம் வழங்க முன்வருகின்றனர்.
இரண்டாவதாக இந்தியாவில் உள்ள சில மருத்துவமனைகளே உடல் உறுப்புகளை பிரித்தெடுக்கத் தேவையான தகுதி பெற்றுள்ளது. வெகு சில மருத்துவமனைகளிலேயே உறுப்பு மாற்று சிகிச்சையளிக்கும் திறனும் மருத்துவ உபகரணங்களும் உள்ளது.
ராதிகா தனது தளத்தில் இணைந்துள்ள ஆறு உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் சேர்ந்து தகவல் பரிமாற்ற அமர்வுகள், வீதி நாடகங்கள், கலை என புதுமையான முறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
’தி செகண்ட் சான்ஸ் பிராஜெக்ட்’ சமீபத்தில் உடல் உறுப்பு தான ஏப்ரான்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த ஏப்ரான்களில் தானம் செய்யக்கூடிய பல்வேறு உறுப்புகளின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தக் குழு பல பள்ளிகளுக்குச் செல்கிறது. கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாத பள்ளிகளில் இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இத்தகைய பிரச்சனைகளை இளைஞர்கள் திறந்த மனதுடன் விவாதிப்பதாகவும் அவர்களிடமும் அவர்களது நண்பர்களிடமும் எளிதாக தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்றும் ராதிகா நம்புகிறார். இந்தத் தளம் மூன்று பள்ளிகளிலும் ஐந்து கல்லூரிகளிலும் ஒரு கஃபே-விலும் மாதந்தோறும் அமர்வுகள் ஏற்பாடு செய்கிறது.
முயற்சிக்கான ஆதரவு
’தி செகண்ட் சான்ஸ் பிராஜெக்டில்’ ராதிகா உட்பட ஆறு முக்கிய உறுப்பினர்கள் உள்ளனர். குழு உறுப்பினர்கள் நாடு முழுவதும் உள்ளனர். ஒவ்வொரு தனிநபருடன் அழிந்துவிடக் கூடிய உடல் உறுப்புகளுக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கவேண்டும் என இக்குழுவினர் விரும்புகின்றனர். எனவே இந்த நோக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். இவர்கள் தன்னார்வலப் பணிகளுடன் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் வலைதளம் தொடர்பான அம்சங்கள், சமூக ஊடகங்கள், நிகழ்ச்சி ஏற்பாடு போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர்.
தற்சமயம் மகாராஷ்டிரா மற்றும் உத்தார்கண்ட் பகுதிகளில் செயல்படுகின்றனர். அதிக இளைஞர்களை இணைத்துக்கொண்டு நாடு முழுவதும் விரிவடைய திட்டமிட்டுள்ளனர்.
ராதிகாவின் முயற்சிக்கு அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்து ஆதரவளித்தனர். இருப்பினும் உடல் உறுப்புகள் தொடர்பாக நடக்கும் முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாவதைக் கண்டு அவரது குடும்பத்தினர் சற்று தயக்கம் காட்டினர். பின்னர் இத்தகைய திட்டத்திற்கான தேவை இருப்பதை உணர்ந்து ராதிகாவின் குழு உறுப்பினர்களுடன் இணைந்து அவரது முயற்சிக்கு ஆதரவளிக்கத் தொடங்கினார்கள்.
ராதிகாவின் அக்கா மாதவிடாய் சுகாதாரம் தொடர்பாக செயல்படும் ’மிஷன் சன்ஸ்கார்’ நிறுவனர். ராதிகா இத்தகைய திட்டத்தைத் தொடங்க அவரது அக்கா உந்துதலாக இருந்துள்ளார்.
ராதிகாவின் பச்சாதாப குணமும் அவரது தொழில்முனைவு ஆர்வமும் சமீபத்தில் அசோகா சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இவர் தற்போது ’அசோகா மாற்றத்தை ஏற்படுத்தும் இளம் நபர்’ என்கிற அந்தஸ்துடன் உலகின் மிகப்பெரிய சமூக தொழில்முனைவோர் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவோர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக உள்ளார்.
விழிப்புணர்வு
ஒவ்வொரு அமர்வைத் தொடங்குவதற்கு முன்பும் அமர்வு முடிந்த பிறகும் பங்கேற்பாளர்களிடம் கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் எந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது புரிந்துகொள்ளப்படுகிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை, உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை, தன்னார்வலர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குழு மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் அளவிடப்படுகிறது.
மோகன் அறக்கட்டளை உதவியுடன் பதிவு செய்யப்படுகிறது. பின்னர் இந்த அறக்கட்டளை பதிவு செய்த நபருக்கு இ-மெயில் அனுப்புகிறது. அடையாள அட்டையான டோனர் கார்டையும் அனுப்புகிறது. இந்தப் பதிவு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனத்தால் (NOTTO) அங்கீகரிக்கப்பட்டதாகும். இருப்பினும் உறுப்பு தானம் வழங்குவதாக பதிவு செய்வதுடன் இந்த செயல்முறை முடிந்துவிடுவதில்லை. பதிவு செய்தவரது குடும்பத்தினரின் சம்மதத்தை சட்டப்பூர்வமாக வாங்கும் செயல்முறையும் இதில் அடங்கும்.
தி செகண்ட் சான்ஸ் பிராஜெக்ட் அதன் முயற்சிகள் மூலம் 900-க்கும் அதிகமானோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 பேர் உறுப்பு தானம் செய்ய முன்வந்து பதிவு செய்துள்ளனர். மேலும் மக்கள் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துகொள்ள உதவும் மோகன் அறக்கட்டளை, NSS, Rotaract போன்ற 10 நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: அஷ்வினி எஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா