தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உணவகங்களில் அரை டம்ளர் தண்ணீர் முயற்சி!
நீங்கள் புனேவில் இருக்கும் ஏதாவது ஒரு உணவகத்திற்குச் செல்லும்போது அரை டம்ளர் மட்டுமே தண்ணீர் நிரப்பி உங்கள் உணவு மேஜை மீது வைத்தால் ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் புனே உணவகங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் அசோசியேஷன் (PRAHA) தண்ணீர் வீணாவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் புனே நகராட்சி குடிமக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவிலும் கட்டுப்பாடு விதித்து பத்து சதவீதம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரை கிளாஸ் தண்ணீர் நிரப்பும் முயற்சி மட்டுமல்லாது தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் PRAHA பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளுக்கு இந்த மையக்கருத்தை விளக்கும் அட்டைகளை வழங்குகிறது. இதுவரை 400 ரெஸ்டாரண்டுகள் தண்ணீர் வீணாவதை தடுப்பதற்கான இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள 800 உணவங்களுக்கும் உறுப்பினராக அல்லாத 3,500 உணவங்களுக்கும் இந்த அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. உணவருந்த வரும் வாடிக்கையாளர்கள் தண்ணீர் வீணாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து புரிந்து கொள்வதற்காக இந்த அட்டைகள் உணவு மேஜைகளில் வைக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக என்டிடிவி தெரிவிக்கிறது.
PRAHA தலைவர் மற்றும் கலிங்கா உணவகத்தின் உரிமையாளருமான கணேஷ் ஷெட்டி பிபிசி உடனான உரையாடலில் தெரிவிக்கையில்,
"நாங்கள் அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே நிரப்புகிறோம். வாடிக்கையாளர் கேட்டால் மட்டுமே மீண்டும் தண்ணீர் நிரப்புகிறோம். டம்ளரில் மீதமாகும் தண்ணீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தி செடிகளுக்கு ஊற்றுவதற்கும் தரையை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் நிறுவியுள்ளோம். தண்ணீரை குறைவாக பயன்படுதவேண்டும் என்று ஊழியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்,” என்றார்.
இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு ஷெட்டி தனது உணவகத்தில் தினமும் 1,600 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி வந்தார். ஆனால் தற்போது இவரது அன்றாட பயன்பாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத தண்ணீரின் அளவை அவரால் சேமிக்கப்படுகிறது.
மஹாராஷ்டிராவின் மேற்கே உள்ள புனே மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்தியாவில் தீவிர தண்ணீர் பிரச்சனை நிலவி வருவதாகவும் இதன் காரணமாக இதுவரை 600 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான அரசு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 2020-ம் ஆண்டில் சுமார் 21 நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போகும் அபாயமும் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம், காடுகள் அழிக்கப்படுதல், நகர்புற மக்கள்தொகை வேகமாக அதிகரித்தல் போன்றவையே தண்ணீர் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர். புனேவில் கடக்வாஸ்லா அணையில் தூர்வாரும் பணிகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படாததால் தண்ணீர் சேமிப்புத் திறன் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA