‘எங்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியம் வேண்டும்’ - வழுக்கைத் தலை சங்க ஆண்கள் கோரிக்கை!
மாற்றுத்திறனாளிகள் போன்று வழுக்கை தலை உள்ளவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இல்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என வழுக்கை தலை உடையவர்களின் சங்கம் தெலுங்கானா அரசுக்கு வினோதமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மனிதர்கள் எல்லோருக்குமே தலைக்கு மேல் இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் முக்கியமானது முடி உதிர்வதுதான். நம்முடைய சமீபத்திய உணவு, உறக்க மற்றும் பழக்கவழக்க மாற்றங்களால் வர வர இள வயதினருக்கே முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் பிரச்சினை ஆரம்பமாகி விடுகிறது. ஆண்கள், பெண்கள் என இந்தப் பிரச்சினைக்கு பேதமேயில்லை.
அதிலும் முடி கொட்டி தலை வழுக்கை ஆகிறதென்றால், கவலையின் அளவும் சிலருக்கு அதிகமாகி விடும். முடி கொட்டுகிறதே எனக் கவலைப்பட்டு, கவலைப்பட்டே மன அழுத்தத்தில் மேலும் வேகமாக முடி கொட்டும். மக்கள் இப்படி முடியைப் பற்றி கூடுதலாகக் கவலைப்படக் காரணமே, ‘வழுக்கை’ எனத் தலையை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்வார்களே என்றுதான்.
இந்நிலையில்தான், இப்படி தலையில் முடி இல்லாததால், மற்றவர்களின் கிண்டலுக்கு ஏற்கனவே ஆளாகி, அதிக மன அழுத்தத்தில் இருக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த சிலர், தங்களது வேதனைக்கு தீர்வாக அரசின் உதவியை நாடியுள்ளனர்.
அதாவது, வழுக்கைத் தலையால் சங்கடப்படும் தங்களுக்கு, அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற புதுமையான கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இப்படி தினமும் பல கேலிகளை எதிர்கொள்வதால், தங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும் என வழுக்கைத் தலைக்குழு ஒன்று, தெலங்கானா முதல்வருக்கு கோரிக்கை வைத்த சம்பவம், தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
வழுக்கைத்தலைச் சங்கம்
இதற்காக தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டம் தங்கலபள்ளி கிராமத்தில் புதிதாக சங்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு 'வழுக்கைத் தலைச் சங்கக்குழு' என அவர்கள் பெயரிட்டுள்ளனர். அந்தக் குழுவின் தலைவராக 50 வயதான வெல்டி பாலய்யா என்பவர் உள்ளார். இந்தக் குழுவில் வழுக்கைத் தலை உள்ளவர்கள் ஒன்றுகூடி, அடிக்கடி கூட்டம் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அப்படி கடந்த வாரம் தலையில் முடியில்லாதவர்கள் 30 பேர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்,
‘தலையில் அடர்த்தியான முடி இல்லாமல் தினமும் சங்கடத்தை அனுபவிப்பதாலும், தங்களது தலையைப் பார்த்து செய்யப்படும் சிலரது கேலியால் மன வேதனையுற்று வருவதாலும், தங்களது பாதிப்பிற்கு உதவியாக அரசிடமிருந்து உதவித்தொகை கோருவது’ என்றும் தீர்மானித்தனர்.
தங்களது இந்த வித்தியாசமான கோரிக்கை தீர்மானத்தை கடிதமாகவும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எழுதி அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில்,
“வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் நாள்தோறும் பல பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள். சிறு வயதிலேயே பலருக்கும் வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் அதிகளவில் அடையும் வேதனைகள் சொல்லி மாளாது.
பொதுவெளியில் நான்கு பேருடன் சேர்ந்து வெளியே செல்லவே அவர்கள் தயங்குகின்றனர். வழுக்கைத் தலை இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது. பலர் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
ஊனமுற்றவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், நெடுநாள் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் அரசாங்கம் உதவித்தொகை வழங்குகிறது.
’அதுபோல் வழுக்கைத் தலை உடையவர்களுக்கும் மாதம் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உதவித்தொகை கொடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என அதிரடியாக அரசுக்கு தங்களது கோரிக்கையை அவர்கள் அனுப்பியுள்ளனர்.
மற்ற ஓய்வூதியங்கள் சரி, தலையில் முடி இல்லாததற்கு எதற்காக உங்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டும் என்ற எதிர்ப்புக்குரல் எழும் என்பதால், முன்கூட்டியே அதற்கான விளக்கத்தையும் அந்தச் சங்கம் அளித்துள்ளது. அதில்,
‘சிகிச்சை மூலம் மீண்டும் தலையில் முடி வளர வாய்ப்புள்ளவர்களுக்கு, சிகிச்சைக்கு இந்தத் தொகை உதவியாக இருக்கும் என்பதாலேயே ஓய்வூதியம் கேட்கிறோம்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழுக்கைத் தலைச் சங்கத்தில் 22 வயது இளைஞர்கூட இருக்கிறார் என்பதுதான் வேதனைக்குரிய விசயம். இளம் வயதில் தலையில் முடி எல்லாம் உதிர்ந்து விட்டதால், தான் பல்வேறு கிண்டலுக்கு ஆளாவதாக அவர் வேதனையுடன் கூறுகிறார்.
சர்வதேச பிரச்சினை
வழுக்கைத் தலை பிரச்சினை என்பது சர்வதேச அளவில் பெரியது என்பதை நிரூபிப்பது போல், கடந்தாண்டு பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் ஒரு முக்கிய தீர்ப்பை அளித்தது. அதில், ‘பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும்’ என நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்திருந்தனர். பிரிட்டன் நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
தற்போதும் அதுபோல், தெலுங்கானா வழுக்கைத் தலைச் சங்கத்தின் இந்த ஓய்வூதியக் கோரிக்கை கடித விவகாரம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது. தெலுங்கானா அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.