இறந்துபோன கணவரின் நினைவாக சுமார் 73 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டுள்ள பெங்களூரு பெண்மணி!
68 வயதான ஜெனத் யக்னேஷ்வரன் இதுவரை சுமார் 73,000 மரக்கன்றுகளை நட்டுள்ளார். கூர்க் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் தலா 1,000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார்.
நமக்கு மிகவும் பிடித்த நபரின் நினைவாக ஒரு மரம் நடுவது அவர் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக அமையும். ஜெனத் யக்னேஷ்வரன் தனது கணவரை இழந்த பிறகு 2006-ம் ஆண்டு அவரது நினைவாக தனது வீட்டின் அருகே புங்கை மரம் ஒன்றை நட்டார். பெங்களூருவைச் சேர்ந்த இவர் நகரில் பசுமை போர்வை அதிகரிக்க இந்த முயற்சி உதவும் என நம்பினார்.
விரைவிலேயே மரம் நடுவது ஜெனத்தின் வாழ்நாள் நோக்கமாகவே மாறியது. இதுவரை 73,000-க்கும் அதிகமான மரங்களை நட்டு பலருக்கு ஊக்கமளித்து வருகிறார்.
பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீராவா அரங்கத்தின் முன்னாள் நிலத்தோற்றக்கலை வடிவமைப்பாளரான ஜெனத் நிலத்தின் தன்மையைப் பொறுத்து குறிப்பிட்ட பகுதியில் நடப்படவேண்டிய மரக்கன்றுகளின் வகையைப் புரிந்துகொள்ள தனது அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
68 வயதான இந்த சுற்றுச்சூழலியலாளர் இறந்துபோன தனது கணவரின் நினைவாக ரஜானத் யக்னேஷ்வரன் அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது,
“எங்களது தென்கஜா திட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் டெல்டா விவசாயிகளுக்காக 1,000 தென்னை மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டமாகும். இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்களுடன் இணைந்து செயல்படுகிறோம். அவர்கள் 100 ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்துள்ளனர். நாங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 தென்னை மரக்கன்றுகளை நட உள்ளோம்,” என்று தெரிவித்ததாக ’ஸ்டோரிபிக்’ குறிப்பிடுகிறது.
நோக்கியா, சோனி, சாம்சங் போன்ற பிராண்டுகள் இந்த அறக்கட்டளைக்கு ஆதரவளிக்கிறது. அவர்களது வளாகத்தினுள்ளோ அல்லது குறிப்பிட்ட இடங்களிலோ மரக்கன்றுகள் நடுவதற்கான நிதியுதவியை வழங்குகிறது. ஆனால் விவசாயிகள் மற்றும் குடியிருப்போருக்கு இந்த அறக்கட்டளை இலவசமாகவே வழங்குகிறது.
இந்த முயற்சி குறித்து அவர் மேலும் கூறுகையில்,
”மாநிலம் முழுவதும் உள்ள எந்த ஒரு பகுதியிலும் மரக்கன்றுகளை நடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்ததாக ’ஸ்டோரிபிக்’ குறிப்பிடுகிறது.
ஜெனத் இதுவரை கிருஷ்ணராஜபுரம், கோரமங்கலா, கேம்பிரிட்ஜ் லேஅவுட், எலக்ட்ரானிக் சிட்டி என பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் மரங்களை நடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் புங்கை மரம், வேப்ப மரம் போன்ற பல்வேறு மரங்கள் நடப்பட்டன. அத்துடன் பெங்களூருவின் தோம்லூரில் உள்ள பிடிஏ காம்ப்ளெக்ஸ் அருகே ஒரு நர்சரியும் நடத்தி வருகிறார் என ’வாட்ஷாட்’ தெரிவிக்கிறது.
இவரது உன்னத முயற்சியைக் கண்ட பலர் பிறந்தநாள் போன்ற சிறப்பு தினங்களில் மரம் நடுவதற்காக ஜெனத்தை தொடர்புகொள்ளத் துவங்கினர்.
செடிகளை பராமரிக்க குடியிருப்புவாசிகள் பொறுப்பேற்கவேண்டும் என்கிறார் ஜெனத். செடிகளை பராமரிப்பதாக குடியிருப்புவாசிகள் உத்தரவாதம் அளித்த பிறகே செடிகள் நடும் முயற்சியை அறக்கட்டளை மேற்கொள்ளும் என்கிறார் ஜெனத்.
வருங்காலத்தில் கூர்க் பகுதியில் 1,000 மரக்கன்றுகள் நடவும் தஞ்சாவூரில் 1,000 மரங்கள் நடவும் திட்டமிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA