தமிழகம் உட்பட 14 மாநிலங்களுக்கு கோவாக்சின் நேரடி விநியோகத்தை தொடங்கிய பாரத் பயோடெக்!
மத்திய அரசு பெற்ற ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கல்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தற்போது சீரம் நிறுவனம் தயாரிப்பான கோவிஷீல்ட், மற்றும் பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரிப்பான கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் அதிகரித்து வரும் பரவல் காரணமாக 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்திருக்கிறது.
இதற்கிடையே, 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. அப்போதே தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டது. புதிய விதிமுறைகளின்படி, தடுப்பூசி தயாரிப்பாளர்களே தடுப்பூசிக்கு விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் மீதமுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும் பொதுச் சந்தை விற்பனைக்கும் வழங்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
அந்த அறிவிப்பின்படி, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையை மாநில அரசுகளுக்கு ரூ.600 என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என்றும் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த விலையானது மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் விலையை விட மூன்று மடங்கு அதிகம் என்பதால் விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி விலையை ரூ.400 ஆக குறைத்தது.
இதற்கிடையே, மத்திய அரசின் அறிவிப்பின்படியே, மே 1-ம் தேதி முதல் தமிழகம், ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசியை நேரடியாக அனுப்பி வருவதாக தற்போது கூறியிருக்கிறது.
”தடுப்பூசியை மாநிலங்களுக்கு மத்திய அரசு பெற்ற ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கத் தொடங்கியுள்ளது. பிற மாநிலங்களிலிருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து கோரிக்கைகள் விடும் பட்சத்தில் இந்த 14 மாநிலங்களுக்கும் மீண்டும் தடுப்பூசி வழங்கப்படும்," என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எலா தெரிவித்துள்ளார்.