BigBoss சீசன் 3- ஒரே கல்லில் இரண்டல்ல, பல மாங்காய்களை அடிக்கப் போகிறாரா கமல்?
கடந்த 2 சீசன்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. முந்தைய சீசன்களைத் தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் இதையும் தொகுத்து வழங்குகிறார். தனது அரசியல் பிரவேசத்துக்குப் பின் இதில் தோன்றும் கமலிடம் இன்னும் அதிகம் அரசியலை எதிர்ப்பார்க்கலாமா?
ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ’பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சி கோலாகலமான துவக்கவிழாவுடன் ஆரம்பமாகி விட்டது. கடந்த இரண்டு சீசன்களைப் போலவே இம்முறையும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் சென்றுள்ளனர். இன்னும் இரண்டு போட்டியாளர்கள் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பிக் பாஸ் வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, நம் வாழ்க்கை’ என கமல் ஒவ்வொரு புரோமோவிலும் சொல்வது வேறு யாருக்குப் பொறுந்துகிறதோ இல்லையோ நிச்சயம் அவருக்கே கச்சிதமாகப் பொருந்தும். காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் அவர் தனது அரசியல் பயணத்திற்கு மக்களிடையே விதை போட்டார்.
கடந்த லோக்சபா தேர்தல் முடிவின் போது, கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலை பற்றி, ‘14 மாத குழந்தையை மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர்’ என்றார்.
உண்மையில் அந்தக் குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து, அதன் பேரை மக்களிடையே பிரபலப் படுத்த பிக் பாஸ் மேடையைத் தான் கமல் பெரிய கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சியோடு கூடவே அரசியல் பேசவும் அவர் மறந்ததில்லை.
சும்மாவே அசத்தலாக ஆடுவார், இப்போது கட்சி எனும் சலங்கையும் அவர் காலில் இருக்கிறது. கச்சேரி வைக்காமல் விடுவாரா?
ஏற்கனவே பிக் பாஸ் புரோமோக்களிலேயே கமலின் அரசியல் நெடி சற்று அதிகமாகவே வீசியது. ‘கேள்வி கேட்க நான் தயார், திரும்பவும் ஓட்டுப் போட நீங்க தயாரா?’ எனக் கேள்வி கேட்டு தெறிக்கவிட்டார். இதனாலேயே தீவிர அரசியலில் கமல் இறங்கிய பிறகு, தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பதால், அவரது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் இம்முறை நிகழ்ச்சியை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை துவக்கநாள் நிகழ்ச்சியிலேயே சந்து கேப்பில் அரசியல் பேசி சிந்து பாடினார் நம்மவர். எப்போதும் பிக் பாஸ் வீட்டின் அமைப்பைக் காட்டி தான் சீசனைத் தொடங்குவார்கள். ஆனால் இம்முறை வித்தியாசமாக கமலின் வீட்டை சுற்றிக் காட்டினார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும், கமலுக்கு மாலை போட்டு, ஆரத்தி எடுத்து என மக்கள் அதகளப் படுத்தினார்கள். சர்ச்சையில் சிக்காமல் இருக்க கமல் அவர்களின் செயலுக்கு, ‘அன்பு’ எனப் பேர் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். அடுத்ததாக நிஜ பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றார்.
சென்னையே தண்ணீர் தட்டுப்பாட்டில் தத்தளித்துக் கொண்டிருக்க, போட்டியாளர்கள் சொகுசாக நீச்சல்குளத்தில் குளித்தால் நன்றாக இருக்குமா? அதனால் மக்களின் மனம் அறிந்து தண்ணீர் இல்லாத குளமாக்கி இருந்தனர் அந்த நீச்சல் குளத்தை. மறக்காமல் அதை பாராட்டினார் கமல்.
வீட்டிற்குள் சென்றதும் இரண்டு பெண்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் கமல் ’நமஸ்தே’ எனக் கூறி இந்தியில் பேசினார். அதற்கு அவர்கள்,
‘நாங்கள் தமிழ் தான் சார்’ என்றதும், தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை என்பதை பாராட்டினார். இந்த இடத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், இந்தி எதிர்ப்பு மற்றும் தமிழர்களின் வேலை வாய்ப்பு பற்றி மறைமுகமாக அரசியல் பேசி அப்ளாஸ் வாங்கினார் மக்களிடம். பின் கேமராவை நோக்கி,
‘வந்தாரை வாழ வைக்கணும் தான். அதுக்கு முதல்ல நாங்களும் கொஞ்சம் வாழணும்ல. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் இப்டி ‘செண்டர்’ல தாக்குறேன்னு சொல்லாதீங்க. அதுக்குக் காரணம் சூழல் தானே தவிர வேறொன்றும் இல்ல’ என்றவர், ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம். ஒன்றே எங்கள் குலமென்போம்’ என பாடியவாறே அங்கிருந்து நகர்ந்தார்.
பின்னர் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தினார். இடையிடையே தன் அரசியல் வசனங்களையும் மறக்காமல் மக்களிடம் அவர் பதிவு செய்தார். உதாரணமாக தமிழீழத்தைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தெனாலி பட வசனத்தை தனக்கே உரிய பாணியில் பேசினார் கமல். அப்போது ஈழத்தமிழில் உக்கிரமாக, ‘அநீதி கண்டு பொங்க வேண்டும்; அநீயை எதிர்க்கும் மையப் புள்ளியாக இருக்க வேண்டும். பாரதி சொன்னது போல ரெளத்திரம் பழகிக் கொண்டிருக்கிறேன். மக்களும் ரௌத்திரம் பழக வேண்டும்’ என மீசையை முறுக்கிக் கொண்டு பேசினார்.
பிக் பாஸ் வீட்டில் முதன்முறையாக தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப் பட்டுள்ளது. அதோடு வீடு முழுவதும் ஓவியங்களால் நிரப்பப்பட்டுள்ளது. அதில் மிகப் பெரிய அளவில் கமலின் விருமாண்டி ஓவியமும் ஒன்று. முந்தைய சீசன்களின் வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டுமே கமல் நிகழ்ச்சியில் தோன்றுவார். ஆனால், இம்முறை தினமும் நமக்கு ஓவியமாகக் காட்சி தர இருக்கிறார். அதன் மூலம் மக்கள் மனதில் கமல் இன்னமும் ஆழமாகப் பதிவார் என்பதில் சந்தேகமேயில்லை.
கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு இம்முறை தொடக்கத்திலேயே அரசியல் வசனங்களை சற்றே காட்டமாகவே வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார் கமல் என்றே சொல்ல வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து, லோக்சபா தேர்தலில் மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் கமல், நிச்சயம் மக்களோடு உரையாடக் கிடைத்த வாய்ப்பாக இம்முறையும் பிக் பாஸ் மேடையைப் பயன்படுத்திக் கொள்வார் என்பதில் சந்தேகமேயில்லை. இம்முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல தலைப்புச் செய்திகளில் அவர் உலா வரப் போவது இப்போதே உறுதியாகி விட்டது.
முதன் முறையாக கமலின் கட்சி களமிறங்கிய லோக்சபா தேர்தலில், பல தொகுதிகளில் அக்கட்சிக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. தனிச் சின்னத்துடன், யாருடனும் கூட்டணி வைக்காமலேயே, ஏறத்தாழ 16 லட்சம் ஓட்டுக்கள் பெற்று இந்த வெற்றியை அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
தீவிர அரசியல் காரணமாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 பட வேலைகளையும் கிடப்பில் போட்டுள்ளார் கமல். அடுத்தது அவரது இலக்கு தமிழக சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தான். எனவே, அதனை எப்படியெல்லாம் எதிர் கொள்வது, அதற்கான அடித்தளத்தை மக்களிடம் எப்படி ஆழமாகப் போடுவது என்றெல்லாம் அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதர்கு நிச்சயம் பிக் பாஸ் மேடையை ஒரு பிரச்சாரக் கருவியாக்கிக் கொள்வார் கமல் என்றே தெரிகிறது.
பிக் பாஸ் சீசன் 3ல் நிகழ்ச்சி வாசிப்பாளரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான ஃபாத்திமா பாபு, இயக்குநர் சேரன், நடிகைகள் ஷெரீன், மதுமிதா, வனிதா விஜயகுமார், அபிராமி, சாக்ஷி அகர்வால், ரேஷ்மா, நடிகர்கள் சரவணன், கவின், மோகன் வைத்யா, தர்ஷன் நடன இயக்குநர் சாண்டி, பாடகர் முகென் ராவ் மற்றும் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இம்முறை பிக் பாஸ் வீட்டில் இரண்டு இலங்கைத் தமிழர்கள், ஒரு மலேசியத் தமிழர், தமிழக சினிமா பிரபலங்கள் எனப் பலர் உள்ளனர். எனவே, நிச்சயம் இம்முறை கடல் கடந்தும் பிக் பாஸ் பேசப்படும்.
இப்போது புரிகிறதா கமல் ஏன் ‘பிக் பாஸ் வெறும் ஷோ அல்ல, நம் லைஃப்’ எனச் சொல்கிறார் என்று.