இந்தியாவின் முதல் 'ப்ளாக் செயின்' திருமணம்; புனே ஜோடியின் கனவு சாத்தியமானது எப்படி?
இந்தியாவிலேயே முதன் முறையாக பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புனேவை சேர்ந்த புதுமண தம்பதி திருமண பந்தத்தில் இணைந்துள்ளது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புனேவைச் சேர்ந்த புதுமண தம்பதி திருமண பந்தத்தில் இணைந்துள்ளது சோசியல் மீடியாவில் ட்ரென்டாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று கிருமிகள் அடுத்தடுத்து புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை மட்டுமல்ல, திருமணத்திற்குத் தயாரான பல இளம் ஜோடிகளையும் வாட்டி வதைத்தது. ‘என்ன மீறி கல்யாணம் பண்ணிடுவியா?’ என கொரோனா குறுக்கே நிற்க, நொந்து போன 90’ஸ் கிட்ஸ் “ஏற்கனவே பொண்ணு கிடைக்குறது கஷ்டம் நடுவில் இதுவேறயா?” என மாத்தி யோசிக்க ஆரம்பித்தனர். அதனால் தான் இப்போது நாம் விதவிதமான டிஜிட்டல் திருமணங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
லாக்டவுன் நேரத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதால் திருமணங்களில் பங்கேற்க குறைவான நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, கூகுள் மீட்டில் தொடங்கி லேட்டஸ்ட் மெட்டாவர்ஸ் நிகர் உலகம் வரை விதவிதமான டிஜிட்டல் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
கூகுள் பே, பேடிஎம்-இல் மொய், அமேசானில் ஆன்லைன் கிப்ட், ஜொமாட்டோ, ஸ்விக்கியில் கல்யாண சாப்பாடு டெலிவரி என மற்ற சம்பிரதாயங்களும் டிஜிட்டலுக்கு வந்துவிட்டது. இதுக்கு மேல என்ன புதுமையாக கல்யாணம் செய்துவிடப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், புனேவைச் சேர்ந்த ஜோடி ஒன்று பிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருமணம் செய்துள்ளனர்.
புனே ஜோடியின் பிளாக் செயின் திருமணம்:
இந்தியாவிலேயே முதன் முறையாக புனேவைச் சேர்ந்த அனில் நரசிபுரம், ஸ்ருதி நாயர் ஜோடி பிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருமணம் செய்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக நவம்பர் 2021ம் ஆண்டு சொந்த ஊரில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டதோடு, அதனை பதிவும் செய்துள்ளனர்.
ஆனால், மணமகன் அனில் நரசிபுரத்திற்கு தங்களது திருமணத்தை அழிக்க முடியாத நியாபகமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தொடங்கியது. எனவே, பிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை ஒரு மறக்க முடியாத தருமணமாக மாற்ற நினைத்தார்.
அனூப் பாக்கி என்ற டிஜிட்டல் பாதிரியார் முன்னிலையில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Ethereum ஸ்மார்ட் ஒப்பந்தத்துடன் ஒருவருக்கு ஒருவர் NFT டோக்கன்களை பறிமாறிக்கொண்டு கணவன், மனைவியாக தங்களை உலகிற்கு அறிவித்துக் கொண்டுள்ளனர்.
15 நிமிடங்கள் நடந்த ஸ்ருதி நாயர் - அனில் நரசிபுரம் பிளாக் செயின் திருமணத்தில் கூகுள் மீட் மூலமாக அவரது பெற்றோர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றுள்ளனர்.
என்.எஃப்.டி-யை உருவாக்க அவர்கள் ஸ்ருதியின் நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் திருமண உறுதிமொழிகளுடன் கூடிய ஒரு படத்தையும் தயார் செய்து வைத்திருந்தனர். மேலும், இருவரும் பரிமாறிக்கொண்ட NFT டோக்கனுக்கு ‘ஏகத்வம்’ என பெயர் சூட்டப்பட்டது, அதற்கு சமஸ்கிருதத்தில் ‘ஒற்றுமை’ என அர்த்தம்.
"நாங்கள் பெரிய வாக்குறுதிகளை வழங்க மாட்டோம், ஆனால் இந்த வேலையைச் செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். எங்கள் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் மூலம், ஒருவரையொருவர் மற்றும் நம்மைப் பற்றிய நமது புரிதலை வளர்ப்போம் என்று நம்புகிறோம். ஒருவருக்கொருவர் முழு உலகமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் பக்கத்தில் இருப்போம், கைகோர்த்து, இந்த சாகசத்தின் மூலம் ஒன்றாக நடப்போம்,” என டிஜிட்டல் வாக்குறுதிகள் வாசிப்பட்டு, இருவரும் கணவன் மனைவியாக அறிவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து டிஜிட்டல் பாதிரியார், "Ethereum மூலம் எனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தால், உங்களுடைய திருமணத்தை அங்கீகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என அறிவித்தார்.
தங்களது பிளாக் செயின் திருமணம் குறித்து அனில் ட்விட்டர் மற்றும் லிங்கிடு இன் தளத்தில் விரிவாக புகைப்படத்துடன் பதிவிட, தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தகவல் உதவி: லின்க்ட் இன் மற்றும் ட்விட்டர்