பிளாக்செயின் நுட்பத்தில் தகவல்களை பாதுக்காக நடவடிக்கை; தமிழக அரசு அறிவிப்பு!
Blockchain நுட்பம் எல்லாத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு பிளாக்செயின் நுட்பத்திற்கான கட்டமைப்பு வசதி உருவாக்கப்படும் என்றும், அரசு தரவுகள் பிளாக்செயின் மூலம் பாதுக்காக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110 கீழ் தாக்கல் செய்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தாக்கல் செய்த முதல்வர், கவர்னர் உரைக்கு பதில் அளித்து பேசிய போது,
“நான்காவது தொழில் புரட்சிக்கான தகவல் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தமிழகத்தில் மின் ஆளுகை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் அடிப்படையில் தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான பிளாக்செயின் எனப்படும் நம்பிக்கை இணையத்திற்கான கட்டமைப்பு தமிழ்நாடு மின் ஆளுகை முகமையால் ரூ.40.80 கோடி செலவில் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் மூலம் சேகரிகக்ப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் அரசுத் தரவுகளை பாதுகாப்பாக வைத்திட முடியும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும், அரசு சேவைகளை மக்கள் எளிதாக பெறும் வகையில் ரூ.90 கோடி செலவில், ’மக்களைத் தேடி அரசு’ எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் மேலும் கூறியதாவது:
அரசுத் துறையின் பல்வேறு சேவைகளை மக்கள் அத்துறைகள் மூலம் பெறுவதோடு, இ-சேவை மையங்கள் மற்றும் செயலி மூலமும் விண்ணப்பிக்கின்றனர். தற்போது, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால், மக்கள் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொருவருக்கும் பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் வரை சட்டப்படியான ஆவணங்கள், குடிமக்கள் பெட்டகத்தில் இருந்து, விண்ணப்பிக்காமலேயே குறிப்பறிந்து தானாகவே வழங்கப்படும். இதை பெற பயனாளிகள் தங்கள் செல்பேசி எண்ணை பயனர் குறியீடாகவும், ஒரு முறை கடவுச்சொல்லையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் தெரிவித்தார்.
மேலும், பொதுத்துறை நிறுவனங்களான பவர்கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு பங்களிப்புடன் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் மற்றும் நாகை மாவட்டம் செம்போடை ஆகிய இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.26 கோடியில் துவக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
அதே போல, இளைஞர்கள் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற ஏற்ற வகையில், அம்பத்தூர், செங்கல்பட்டு, கடலூர், கோவை, திருச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 11 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நீண்ட மற்றும் குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகள் ரூ.44.19 கோடியில் துவக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
செய்தித் தொகுப்பு :சைபர்சிம்மன்