மகாத்மா காந்தியை புரிந்து கொள்ள உதவும் புத்தகங்கள்!
உலகம் முழுவதும் இன்றளவும் பல்வேறு துறையினர் மீது தாக்கம் ஏற்படுத்தி, ஊக்கம் அளிப்பவராக விளங்கும் மகாத்மா காந்தி எனும் மாமனிதரை புரிந்து கொள்ள உதவும் புத்தகங்கள் இவை:
காந்தி காலத்தை கடந்து வாழ்கிறார். அரசியலிலும், சமுக வாழ்க்கையிலும் தலைமுறைகளை கடந்து அவரது வாழ்க்கையும், கருத்துகளும் தாக்கம் செலுத்தி வருகின்றன. மார்டின் லூதர் கிங் ஜூனியர் துவங்கி நெல்சன் மண்டேலா வரை பல உலகத்தலைவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் தலைவராக இருந்துள்ள காந்தி, இன்றளவும் ஒவ்வொரு துறையினர் மீதும் தாக்கம் செலுத்தும் ஆளுமையாக திகழ்கிறார்.
அகிம்ச்சைச் சார்ந்த அவரது போராட்ட வழிமுறைகள் சுதந்திர வேட்கை கொண்டவர்களுக்கு வழிகாட்டுகின்றன என்றால், கிராம பொருளாதாரம் சார்ந்த அவரது தொலைநோக்கு கருத்துகள் சமூக பொருளாதார மாற்றத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றன.
மகாத்மாவின் வாழ்க்கை; கவிஞர்கள் முதல் திரைக்கலைஞர்கள் வரை எண்ணற்றவர்கள் மீது தாக்கம் செலுத்தியுள்ளது. பன்முக ஆளுமையான காந்தியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன.
மகாத்மாவின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில், அந்த மாமனிதரை புரிந்து கொள்ள உதவும் புத்தகங்களை பார்க்கலாம்:
சத்தியசோதனை:
மகாத்மாவை நெருக்கமாக அறிந்து கொள்ள வேறு எந்த புத்தகத்தையும் விட அதிகம் உதவக்கூடியது அவருடைய சுயசரிதை நூலான சத்தியசோதனை தான். The Story of my Experiments with Truth எனும் இந்த புத்தகத்தில் காந்தி தன் வாழ்க்கை அனுபவத்தை ஒளிவு மறைவில்லாமல் திறந்த மனதுடன் விவரித்திருப்பதை உணரலாம்.
காந்தி தனக்கு எத்தனை உண்மையானவராக இருந்திருக்கிறார் என்பதும், வாழ்க்கையின் உண்மை எனும் ஒளியை எத்தனை தீவிரமாக தேடியிருக்கிறார் என்பதையும் இதில் உணரலாம்.
மகாத்மா தனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்றே குறிப்பிட்டிருக்கிறார். சத்தியசோதனையின் ஒவ்வொரு பக்கத்திலும் அதை அவர் உணர்த்திக்கொண்டே இருக்கிறார். தனது வாழ்வின் மறக்க முடியாத பகுதிகளை சமூகத்திற்கான பாடங்கள் என்றும் மகாத்மா குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் அவரது பார்வையில் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள்.
ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த புத்தகம் கிடைக்கிறது. காந்தி பற்றிய மிகச்சிறந்த நூல் என்பது மட்டும் அல்ல, அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய சுயசரிதை புத்தகங்கள் பட்டியலில் எப்போதும் முன்னிலையில் இருக்கும் புத்தகம் இது.
இந்தியா ஆப் மை டீரிம்ஸ்
சத்தியசோதனை, காந்தியின் வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவுகிறது என்றால், ஒரு தலைவராக இந்த நாடு பற்றி அவருக்கு இருந்த கருத்துகளையும், கனவுகளையும் தெரிந்து கொள்ள ‘இந்தியா ஆப் மை டிரீம்ஸ்’ (India of my Dreams ) புத்தகம் உதவுகிறது.
காந்தி சிறந்த தலைவராக இருந்ததோடு, ஆற்றல் மிக்க பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். அவரே சொந்தமாக பத்திரிகைகளை நடத்தியதோடு, பக்கம் பக்கமாக எழுதவும் செய்திருக்கிறார். காந்தியின் தேந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் கொண்ட புத்தகங்கள் மட்டுமே ஒரு சின்ன நூலகம் போல இருக்கும். இவைத்தவிர அவர் ஆற்றில் உரைகள் வேறு இருக்கின்றன.
காந்தியின் எழுத்துக்கள் மற்றும் உரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தொகுப்பாக அமையும் இந்த புத்தகம், மகாத்மாவின் சிந்தனைகளை புரிந்து கொள்ள உதவுகிறது. காந்தியின் தொலைநோக்கு பார்வை நிச்சயம் ஊக்கம் அளிக்கும்.
இணையத்தில் வாசிக்க: https://www.mkgandhi.org/ebks/India-Dreams.pdf
காந்தி பிஃபோர் இந்தியா
காந்தியின் சுயசரிதை நூல் தவிர அவரைப்பற்றி நூற்றுக்கணக்கான வாழ்கை வரலாறு புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்தியர் அறிஞர்கள் மட்டும் அல்லாது, எண்ணற்ற வெளிநாட்டு அறிஞர்காளும் காந்தியின் வாழ்க்கையை விரிவாக எழுதியுள்ளனர்.
காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களில் ’காந்தி பிஃபோர் இந்தியா’ (Gandhi Before India) புத்தகம் முக்கியமானது. புகழ் பெற்ற வரலாற்றாசிரியரும், காந்திய அறிஞருமான ராம்சந்திர குஹா, எழுதிய இந்த புத்தகம், இந்தியாவுக்கு வருவதற்கு முன் காந்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆழமாக அலசுகிறது. லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் அவரது அனுபவங்கள் விவரிக்கப்பட்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடும் தலைவராக அவர் உருவான பயணம் இதில் வாசகர்கள் கண்முன் விரிவதை உணரலாம். காந்தியின் தனிப்பட்ட தரிசனத்தனையும் இந்த புத்தகத்தின் உணரலாம்.
காந்தி சி.இ.ஓ
மகாத்மா ஒரு மகத்தான தலைவர் என்பதும், மிக்கசிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்தவர் என்பதும் நமக்கெல்லாம் தெரியும். அவரது வாழ்க்கையில் நமக்கு எண்ணற்ற பாடங்கள் இருக்கின்றன என்பதும் தெரியும். ஆனால், காந்தி நிர்வாகவியல் நோக்கிலும் வழிகாட்டுபவர் என்பது தெரியுமா?
ஆலன் ஆக்சல்ராடு (Alan Axelrod) எழுதிய ’காந்தி சி.இ.ஓ’ (Gandhi CEO) எனும் இந்த புத்தகம், மகாத்மாவின் வாழ்கையில் இருந்து நாம் பெறக்கூடிய நிர்வாகவியல் பாடங்களை விவரிக்கிறது. காந்தி சிறந்த மனிதர் மட்டும் அல்ல, அவர் மிகச்சிறந்த நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார் என்கிறார் நூலாசிரியர். நிச்சயம் தொழில்முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
அட்லாண்டிக் காந்தி
பேராசிரியர் நளினி நடராஜன் எழுதிய ’அட்லாண்டிக் காந்தி –தி மகாத்மா ஓவர்சீஸ்’ (Atlantic Gandhi: The Mahatma Overseas) எனும் இந்த புத்தகம், காந்தியின் வாழ்க்கை பயணம் தொடர்பான சமூக- அரசியல் அலசலாக அமைகிறது. ஒரு வழங்கறிஞராக துவங்கி, தேசத்தின் விடுதலைக்கு வழிகாட்டிய மாபெரும் தலைவராகவும், உலகிற்கே அகிம்சையின் அருமையை உணர்த்திய மகாத்மாவாகவும் காந்தி உருவான விதத்தை பல கோணங்களில் இருந்து அலசும் புத்தகமாக இது அமைகிறது. காந்தி தொடர்பான பல்வேறு கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள உதவுகிறது.
மகாத்மா காந்தியை புரிந்து கொள்ள உதவும் புத்தகங்கள் பரிந்துரைக்கும் கட்டுரைகள்: தொழில்முனைவோர் படிக்க வேண்டிய காந்தி புத்தகங்கள்
· காந்தி எனும் மனிதரை புரிந்து கொள்ள உதவும் 5 புத்தகங்கள்
இவைத்தவிர, பைபுக்ஸ் தளத்திற்கு, காந்தி அறிஞர் ராமசந்திர குஹா அளித்துள்ள பேட்டியில், காந்தி தொடர்பாக படிக்க வேண்டிய ஐந்து புத்தகங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.