ஆன்லைன் கேமில் விளையாட ரூ.90,000 செலவழித்த தமிழக சிறுவன்!
தாயின் வங்கிக் கணக்கிலிருந்த 90,000 ரூபாயை ஆன்லைன் கேமில் பயன்படுத்திய 12வயது சிறுவனுக்கு, அவனுடைய அப்பா வழங்கிய தண்டனை என்ன தெரியுமா?
கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்திருந்த சூழலில், நாள் முழுவதும் வீட்டுக்குள்ளே முடங்கியிருக்க முடியாமல் தவித்தனர் பலர். அதிலும், ஓடியாடி விளையாடும் குழந்தைகளை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு வைப்பது பெற்றோர்களுக்கு மிகபெரிய சவாலாகவே இருந்தது. அதற்கு தீர்வாய் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டுகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்து குடும்பத்துடன் தாயம், பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்தனர். அதுவும், குறுகியகால தீர்வாகி போக, டெக் யுக குட்டிகளை வீட்டில் அடைத்து வைக்க, ஆன்லைன் கேம்களே தீர்வாகிப் போனது.
ஆன்லைன் கேம் விளையாடி அதற்கு அடிமையாகிபோன 12வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்த 90,000 ரூபாயை செலவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கிராமத்திலே இ-சேவா மையத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி ஏஎடிஎம்-ல் பணம் எடுக்க சென்றுள்ளார். வங்கி கணக்கில் 97,000 ரூபாய் இருப்பு தொகை வைத்திருந்த நிலையில், வெறும் 7,000ரூபாய் மட்டுமே அக்கவுன்டில் இருந்துள்ளது. மிச்ச பணம் என்னவாகியது என்று புரியாமல் குழப்பத்திலே வீட்டுக்கு வந்துள்ளார்.
இத்தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான். எந்நேரமும் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் மகனிடன் பணம் குறித்து விசாரித்துள்ளார் செந்தில்குமார்.
‘‘அக்கவுன்டில் 97,000 ரூபாய் பணம் இருந்தது. அதில் பணம் செலுத்தும் அந்த கேமை விளையாட அவன் 90,000 ரூபாயை செலவழித்து விட்டான். நாங்கள் திட்டுவோம் என முதலில் அஞ்சினாலும், பின்னர் அவன் தான் செய்ததை ஒப்புக்கொண்டான். வெளியே சென்று தொற்றுக்கு ஆளாவதற்கு பதிலாக வீட்டிலிருந்தே கேம் விளையாடுவது சிறந்தது என எண்ணினோம்,'' என்று சிறுவனின் தந்தை செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
சிறுவனின் உதவியுடன் ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார் செந்திகுமாரின் மனைவி. அதன்மூலம், ஏழாம் வகுப்பு முடித்த சிறுவன், ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி என்று கற்றுக்கொண்டுள்ளான்.
ஏடிஎம் கார்டை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்று கொண்ட சிறுவனுக்கு கேமிற்காக காசு செலுத்துவது வசதியாகி போயுள்ளது. ஒவ்வொரு முறை கேமிற்கு பணம் கட்டியவுடன், வங்கியிலிருந்து அனுப்பபடும் மெசேஜ்களையும் வீட்டில் யாருக்கும் தெரியாமலிருக்க டெலிட் செய்து வந்துள்ளான்.
அதனால், வீட்டார் அறியாதிருக்கும் வரை அக்கவுன்டிலிருந்த பணத்தை கணக்கின்றி செலவழித்துள்ளான். விளைவாய், வங்கிகணக்கிலிருந்த 90,000ரூபாய் வீணாகியுள்ளது. ஒரு பெரும்தொகையை இழந்த போதிலும் சிறுவனை தான் அடிக்கவில்லை என்று கூறுகிறார் செந்தில்குமார்.
அதற்கு மாற்றாக, ஆன்லைன் விளையாட்டுகளின் பிடியிலிருந்து அவருடைய மகனை மீட்க முயன்று உள்ளார். ஆரம்பத்தில் அவருடைய முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியாய், அவர் ஒரு சிறு டிரிக்கை முயற்சித்துள்ளார். அதன்படி,
சிறுவன் செய்த தவறுக்கு தண்டனையாக 1 முதல் 90,000 வரையிலான எண்களை எழுதுமாறு கூறியுள்ளார். சிறுவனும் எழுதத் தொடங்கினான். ஆனால், ஐந்து நாட்களில் 3,500 வரை தான் எழுத முடிந்ததால், இது அவனுக்கு மிகப்பெரிய டாஸ்க் ஆகியது. அதுக்கு அப்புறம் அவன், இதை எழுதுவதற்கு பதிலா நான் இனி மொபைல் கேம்களை விளையாடுவதை விட்டுவிடுகிறேன்,'' என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார் செந்தில்குமார்.
கொரோனா காலத்தில், குழந்தைகளையும் வெளியே விளையாட அனுமதிக்க முடியாது. அதற்காக, மொபைல் போன்களை குழந்தைகளின் கையில் பெற்றோர்கள் கொடுத்துவிடாமல் அவர்களை மற்ற விஷயங்களில் எப்படி ஈடுபட வைப்பது என்று பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். அவ்வகையில், செந்தில்குமார் வீட்டில் நடந்தது மற்ற பெற்றோர்கள் விழித்து கொள்வதற்காக ஒலிக்கப்பட்ட அலார்ட் மணியாகும்!.
தகவல் உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா | கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ