'20 ஆண்டுகால சாதனை முறியடிப்பு' - இளம் வயது கிராண்ட் மாஸ்டர் ஆன இந்திய வம்சாவளிச் சிறுவன்!
12 வயதில் இளம் கிராண்ட் மாஸ்டர்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிமாயு மிஸ்ரா என்ற 12 வயது சிறுவன் செஸ் விளையாட்டில் இளம் வயது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு இளம் வயது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வைத்திருந்தவர் ஜி.எம். செர்ஜி கர்ஜாகின். இவர் தனது 12 வயது மற்றும் 7 மாதங்களில் இந்த சாதனையை படைத்திருந்தார்.
2002 ஆம் ஆண்டில் இந்த சாதனையை படைத்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிமாயு மிஸ்ரா கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த சாதனையை படைத்திருக்கும் அபிமாயுவுக்கு தற்போது 12 வயது, 4 மாதங்கள் மட்டுமே ஆகிறது. புடாபெஸ்டில் நடந்த வெஜெர்கெப்ஸோ ஜிஎம் மிக்ஸ் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
முன்னதாக, அபிமாயு மிஸ்ரா இந்தியாவின் ஆர் பிரக்னானந்தாவின் சாதனையை முறியடித்து இளைய சர்வதேச மாஸ்டர் ஆனார். மிஸ்ரா 2019 ஆம் ஆண்டில் 10 வயது, 9 மாதங்கள் மற்றும் 20 நாட்களாக இருந்தபோது, சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். அதே சாதனையை அதற்கு முன்பு 10 வயது, 10 மாதங்கள் மற்றும் 19 நாட்களாக இருந்தபோது பிரக்னானந்தா செய்திருந்தார்.
இந்த சாதனையை நிகழ்த்திய சிறுவன் அபிமாயு மிஸ்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன்பு இந்த சாதனையை வைத்திருந்த கர்ஜாகினும் மிஸ்ராவை வாழ்த்தியுள்ளார். செஸ்.காம் தளத்துக்கு இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அவர்,
"தனது சாதனை முறியடிக்கப்பட்டதில் தான் சற்று வருத்தப்பட்டேன். ஆனால் மிஸ்ராவுக்கு வெற்றிகரமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். ஏனென்றால் இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகிவிட்டது. உண்மையில் மிக அதிகம்! அதை உடைக்க வேண்டியிருந்தது. விரைவில் அல்லது பின்னர் அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். இந்திய தோழர்களில் ஒருவர் இதை முன்பே செய்வார் என்று எனக்கு முழுமையாகத் தெரியும். என்றாலும் இவ்வளவு வருடங்கள் அது நடக்காமல் இருந்தற்கு நான் அதிர்ஷடம் செய்திருக்கிறேன்," எனக் கூறியுள்ளார்.
நான் பட்டத்தை இழந்ததில் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறேன், நான் பொய் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அதே நேரத்தில் நான் அவரை மட்டுமே வாழ்த்த முடியும், அது எந்த பிரச்சனையும் இல்லை. அவர் முதலிடத்தில் இருப்பார் என்று நம்புகிறேன். சதுரங்க வீரராக அவரது பெரிய வாழ்க்கைக்கு ஒரு நல்ல தொடக்கமாக இது இருக்கும். அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்றுள்ளார்.
கட்டுரை: மலையரசு