பழரச பாக்கெட்களை விற்று ரூ.15 கோடி விற்றுமுதல் கண்ட சகோதரர்கள்!
வட இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 10 ரூபாய்க்கு பழரச பாக்கெட் விற்பதற்கான Groovy Juices நிறுவனத்தை மித்கரன் சிங், ரஜ்னீஷ் சர்மா துவக்கினர்.
சகோதரர்கள் மித்கரன் சிங் மற்றும் ரஜ்னீஷ் சர்மா, வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குடும்ப உறவினர்களை சந்திக்கும் போதெல்லாம், அமெரிக்கா மற்று கனடாவில் கிடைக்கும் உயர்தர பழரசங்கள் பற்றி அவர்கள் பெருமையாக பேசுவதைக் கேட்டிருக்கின்றனர்.
வெளிநாட்டு உறவினர்கள், இந்தியாவில் கிடைக்கும் பழரசங்களைக் குறிப்பாக கிராமப்புறங்களில் கிடைக்கும் பழரசங்களை பற்றி தரக்குறைவாக குறிப்பிட்டது சகோதரர்களை வருந்த வைத்தது. இது தொடர்பாக ஏதாவது செய்ய ஊக்கம் பெற்றனர்.
இதன் விளைவாக, மித்கரன் மற்றும் ரஜ்னீஷ், உயர்தர பழரசங்களுக்கான சொந்த பிராண்டை துவக்கியதோடு, அவற்றை ஏழை எளிய மக்கள் வாங்கும் வகையில் குறைந்த விலையில் அளித்தனர். இதிலிருந்து க்ரூவி ஜூசஸ் (Groovy Juices) பிராண்டையும் உருவாக்கினர்.
பத்து லட்சம் ஆரம்ப முதலீட்டில் துவங்கிய இந்நிறுனம், கொரோனா சூழலுக்கு மத்தியில் 2020 ஜூலையில், உற்பத்தியை துவக்கியது. சகோதரர்கள் தங்கள் தண்ணீரி உற்பத்தை ஆலையை மேம்படுத்தி பழரச தயாரிப்பில் ஈடுபட்டனர்.
புது தில்லியை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் இன்னமும் ஆண்டு நிதி நிலையை பதிவு செய்யவில்லை என்றாலும்,
“ரூ 10 விலை கொண்ட (150 மிலி) க்ரூவி பழரச பாக்கெட்களை, காஷ்மீர், உத்தர்காண்ட், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லட்சம் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பதன் வாயிலாக, 2020-21 ல் ரூ.9 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளோம். மொதத்தில், சில மாதங்கள் பொதுமுடக்கத்தை மீறி, 1.5 கோடி பேக் விற்றுள்ளோம். துவக்கம் முதல் ரூ.15 கோடி வருவாய் வந்துள்ளது,” என்று இணை நிறுவனர் மித்கரன் கூறுகிறார்.
பல சுவைகள்
உயர்தர பழரசங்களை அளிப்பதில் சகோதரர்கள் ஊக்கமுடன் உள்ளனர். ஆய்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் மித்கரன், ஆறு மாதங்கள் வரை நன்றாக இருக்கக் கூடிய புதிய பழரசங்களை உருவாக்குவதற்காக ஒரு வல்லுனர் குழுவை அமைத்துள்ளார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுவைத்துப்பார்த்த பிறகு, நிறுவனம் மாம்பழம், கொய்யா, மாதுளை, எலுமிச்சை, லிச்சி மற்றும் கலவை பழங்கள் ஆகிய ஆறு சுவைகளை இறுதி செய்துள்ளது.
எனினும், பாட்டில் தண்ணீரை உற்பத்தி செய்த ஆலையில் பழரசங்களை பெரிய அளவில் தயார் செய்வது எளிதாக இருக்கவில்லை.
“பழரசங்கள் தயாரிக்க சரியான இயந்திரங்கள் தேவை. சிறந்தவை மட்டுமே வேண்டும் என நினைத்தோம். உயர்தர பழரசங்கள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் சீனாவில் இருந்து இயந்திரங்களை தருவிக்கின்றன. நாங்களும் அவ்வாறே செய்தோம். 2020 ஜனவரியில் ஆர்டர் செய்து, இயந்திரங்களை அமைக்க சீன பொறியாளர்களையும் வரவேற்கக் காத்திருந்தோம்” என்கிறார் ரஜ்னீஷ்.
இந்த கட்டத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தாக்கியது.
உற்பத்தி சவால்கள்
கொரோனா சூழலில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இயந்திரங்கள் நிறுவப்படாமல் இருந்த நிலையில், மேனுவல்களும் சீன மொழியில் இருந்ததால் தவித்தனர்.
“தகவல் தொடர்பில் இருந்த வரம்புகள் காரணமாக சீன நிறுவனத்தை தொலைபேசியில் அழைப்பதும் எளிதாக இருக்கவில்லை. வீசாட் அரட்டை சேவையும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இ-மெயில் செய்ய மட்டுமே முடிந்தது,” என்கிறார் மித்கரன்.
எனினும் மனம் தளராமல் முயற்சி செய்தனர். அவர்கள் இருந்த ருத்ர்பூர், டாடா, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களைக் கொண்டிருந்தது.
இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு, இயந்திரங்களில் உள்ள வழிகாட்டுதல் மொழியை ஆங்கிலத்தில் மாற்ற முயன்றனர். நான்கு மாத அலைச்சலுக்குப்பின், மற்றும் சீன நிறுவனத்துடன் தொடர்ந்து இ-மெயிலில் தொடர்பு கொண்ட பிறகு, இயந்திரத்தில் புரோகிராம் நிறுவப்பட்டது.
2020 ஏப்ரலில், காஷ்மீரில் திரிகுடா பல்ப் அண்ட் நெக்டார்ஸ் எனும் பெயரில் இரண்டாம் ஆலை அமைத்து உற்பத்தியை துவக்கினர். முதல் அனுபவத்தின் பாடத்தால், இந்த ஆலைக்கான இயந்திரத்தை செயல்படும் நிலையில் தருவித்தனர்.
புதிய ஆலையை அடுத்து, விநாடிக்கு 700 பாக்கெட் உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகக் கூறுகின்றனர்.
சில்லறை விற்பனை
கொரோனா இரண்டாம் அலைக்கு நடுவே, பல வர்த்தகங்கள் இணைய விற்பனைக்கு மாறியுள்ளன. பெரிய நிறுவனங்களும் வாடிக்கையாளர் நேரடி விற்பனையில் கவனம் செலுத்துகின்றன. இதற்கு மாறாக க்ரூவி நிறுவனர்கள் கடைகள் மூலமான விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
“பெரிய பிராண்ட்கள் மெட்ரோ நகரங்களில் ஆன்லைன் விற்பனையை நாடுகின்றன. எங்கள் கவனம் இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகள், பெரிய பிராண்ட்களால் அணுக முடியாத பகுதிகளாக இருக்கின்றன. பெரும்பாலான விற்பனை இந்த இடங்களில் இருந்து வருகிறது. தில்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் இன்னும் செயல்படவில்லை,” என்கிறார் மித்கரன்.
தொலைவான பகுதிகளுக்கு சரக்குகளை அனுப்பி வைப்பது சவாலானது. கோக் போன்ற பெரிய பிராண்ட்களுக்கு இது சாத்தியம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், க்ரூவி நிறுவனம், போக்குவரத்துச் செலவை குறைப்பதன் மூலம் இதை சமாளிக்கிறது.
உரிய இடங்களுக்கு எங்கள் தயாரிப்பை அனுப்பி வைப்பதில் பல சவால்கள் இருக்கின்றன. எனினும் எங்களிடம் வாகனங்கள் இருப்பதால் சமாளிக்கிறோம், என்கிறார் மித்கரன்.
“சில்லறை வர்த்தகர்கள் குறைவாகவே வாங்கியதால் எங்கள் தயாரிப்புகளைக் கடைகளில் இடம்பெற வைப்பது கடினமாக இருந்தது. மேலும், தொலைவான பகுதிகளுக்கான போக்குவரத்தும் சவாலாக இருந்தது. இரண்டு மூன்று பெரிய ஸ்டாகிஸ்ட்களுக்கான சரக்கை ஒன்றாக அனுப்பி நிலைமைய கையாண்டோம்,” என்கிறார் ரஜ்னீஷ்.
எதிர்காலத் திட்டம்
இந்தியாவில் பதப்படுத்தல் இல்லாத பழரசங்களுக்கான சந்தை 2030ல் 17 சதவீதம் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களில் நல்ல தேவையும் இருக்கிறது.
பிராண்டை வளர்க்க திட்டமிட்டுள்ளதால், கடைகளில் மட்டுமே தங்கள் பாக்கெட்டை விற்கின்றனர். இருப்பினும், ரூ.30 மற்றும் ரூ.50 பாக்கெட்களை ஆன்லைனில் விற்க உள்ளனர்.
“எங்கள் பத்து ரூபாய் பாக்கெட் மூலம் பிராண்டை நிறுவ விரும்புகிறோம். இப்போது அதிக லாபம் உள்ள பிரிவுகளில் கவனம் செலுத்துகிறோம். மேலும் அதிக விலையில் தயாரிப்புகளை அறிமுகம் செய்ய மற்றும் ஆன்லைன் விற்பனையை தவறவிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் ரஜ்னீஷ்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்