பட்ஜெட்டில் 2019: சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளுக்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த 2019 இடைக்கால பட்ஜெட்டின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு இதுவரை இல்லாத அளவு 7011.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துறையை வலுப்படுத்த அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் கடன் வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டினார். 59 நிமிட கடன் வழங்கும் திட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் தொழில் புரியவேண்டும் என்கிற உத்தரவு, அரசு மின் சந்தை (GeM) திட்டம் உள்ளிட்டவை குறித்து கோயல் எடுத்துரைத்தார்.
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, அமைச்சகத்தின் முக்கிய திட்டமான பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்திற்கு (PMEGP) முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகபட்ச தொகையாக 2,327 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயம் சாராத சிறு நிறுவனங்கள் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதையே இந்த முயற்சி சுட்டிக்காட்டுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தடையின்றி கடன் வழங்கப்படுவதை உறுதிசெய்ய கடன் திட்டங்களுக்கு 597 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாங்கும் கூடுதல் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும் திட்டத்திற்காக (Interest Subvention Scheme for Incremental Credit to MSMEs) கூடுதலாக 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் வரை கூடுதல் கடன் பெறும்போது தள்ளுபடி செய்யப்படும் இரண்டு சதவீத வட்டித் தொகைக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
”2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான பல்வேறு முயற்சிகளுக்காக 20 பெரிய தொழில்நுட்ப மையங்களும் 100 சிறிய தொழில்நுட்ப மையங்களும் 6,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தி மற்றும் கைவினைத் துறைக்கான தொழில் மையங்கள் (clusters) அமைக்க 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தேசிய மையத்தின் கீழ் ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய ஆற்றல் திட்டத்திற்காக (சோலார் சர்க்கா மிஷன்) புதிய பட்ஜெட்டில் 143 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உற்பத்தி மையங்கள் அமைக்க பயன்படுத்தப்படும். ஒவ்வொரு மையங்களிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 2,000 இளைஞர்கள் பணியிலமர்த்தப்படுவார்கள். இதில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்கும்.