பட்ஜெட் 2020: மீக நீண்ட நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்திய நிர்மலா சீதாராமன்!
2020 பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், எத்தனை மணி நேரம் பட்ஜெட் உரை ஆற்றினார் தெரியுமா?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கால அளவில், மிகவும் நீளமான ஒரு பட்ஜெட் உரையை (2 மணி நேரம் 40 நிமிடங்கள்) நிகழ்த்தினார்). 2020-21 ம் ஆண்டுக்காக ஒதுக்கீடுகளை அறிவிப்பதற்கு முன், அவர் பட்ஜெட்டிற்கான மூன்று முக்கியக் கருத்தாக்கங்களைக் குறிப்பிட்டார்.
2019 ஜூலையில் அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டின் போது 2 மணி நேரம் 17 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து உரை நிகழ்த்த முடியாத நிலையில் அவர், எஞ்சிய பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டதாக கருத வேண்டும் என சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்து அமர்ந்து கொண்டார்.
தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகள் ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும் உறுப்பினர்களுடன் இணைந்து கரவொலி எழுப்பினார்.
எனினும், ஒரு சில திட்டங்கள் தொடர்பான அவரது அறிவிப்புகள் எதிர்கட்சி உறுப்பினர்களுன் அதிருப்திக்கு இலக்கானது.
தொழில்முனைவு- இந்தியாவின் ஆற்றல்
"தொழில்முனைவு எப்போதுமே இந்தியாவின் பலமாக இருந்து வருகிறது. இந்திய இளைஞர்களின் ரிஸ்க் எடுக்கும் ஆர்வத்தை மதிக்கிறோம்,” என்று நிதி அமைச்சர் இந்தியாவின் தொழில்முனைவு திறனைப் பாராட்டி கூறினார்.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகளையும் அவர் அறிவித்தார். ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களுக்கான விதை நிதி, தொழில்முனைவோருக்கான முதலீட்டு அனுமதி மற்றும் ஆலோசனை மையம் உள்ளிட்டவற்றை அவர் அறிவித்தார்.
இந்தியாவின் தொழில்முனைவோர், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக உருவாக வேண்டும் என கூறிய நிதி அமைச்சர், இன்றைய இளம் தலைமுறையினர் இந்தியாவில் புதிய வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, செழிப்பான வாய்ப்புகளை உதறித்தள்ளுவது வளர்ச்சிக்கு உதவுகிறது என தெரிவித்தார்.
தொழில்முனைவு தவிர, புதிய பொருளாதாரம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்தும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். 3டி பிரிண்டிங், டேட்டா ஸ்டேரேஜ், குவாண்டம் கம்ப்யூட்டிங், போன்றவை உலகின் முகத்தை மாற்றிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நேரடி மானியம் அளிப்பு போன்றவற்றுக்கு அரசு புதிய தொழில்நுட்பங்களை நாடுவதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். அறிவுச்சொத்து காப்புரிமை உருவாக்கம் மற்றும் காப்பு பற்றி குறிப்பிட்டவர், இதற்கான டிஜிட்டல் மேடை உருவாக்கம் பற்றியும் தெரிவித்தார்.
"இந்த மேடை சீரான செயல்பாடு கொண்டிருக்கும். அறிவுச்சொத்துரிமை தொடர்பான பணிகளுக்காக ஒரு மையம் அமைக்கப்படும். அறிவு பரிமாற்றம் பற்றிம் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் டேட்டா செண்டர் பார்க் உருவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார். குவாண்டம் தொழில்நுட்பத்திற்கான ரூ.8,000 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆங்கில கட்டுரையாளர்: திரிஷா மேதி | தமிழில்: சைபர்சிம்மன்