பட்ஜெட் 2021: இந்திய சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன?
2020ம் ஆண்டு கடினமாக அமைந்த நிலையில், இந்திய சிறு தொழில் துறைக்கு, வரும் பட்ஜெட் ஆறுதல் அளிக்கும் வகையில் அமையுமா? இத்துறையினர் பட்ஜெட்டில் எதிர்ப்பார்ப்பது என்ன என பார்க்கலாம்.
இன்னும் சில நாட்களில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கோவிட்- 19 பெருந்தொற்று சுகாதார நோக்கில் மட்டும் அல்ல பொருளாதார நோக்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இயல்பு நிலை திருப்பத்துவங்கியிருக்கும் சூழலில், மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்ஜெட் 2021 ஊக்கம் அளிக்கும் வகையில் அமையுமா எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா வைரஸ் புதிராக இருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, வைரஸ் பரவுவதை எதிர்கொள்ள பொதுமுடக்கமே வழி என்று கூறினார். அத்தியாவசியச் சேவைகள் தவிர மற்றவை முடங்கின.
அதற்கும் முன் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தாலும், தேசிய அளவிலான பொது முடக்கம் பெரும் பாதிப்பை உண்டாக்கிறது.
சிறுதொழில் பாதிப்பு
ஓரிரவில் வர்த்தகங்கள் முடங்கி, பலரும் வேலையிழந்தனர். எல்லோரும் மோசமாக பாதிக்கப்பட்டனர் என்றாலும் நடுத்தர, சிறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இருப்பினும் அவை ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது, கடனுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது.
பின்னர் பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும், பணியாளர்கள் இல்லாததால பல நிறுவனங்களால் உற்பத்தியை துவக்க முடியவில்லை. சிறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பதால் அவர்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இதன் விளைவாக, எல்லா வகையான தொழிலாளர்கள் பற்றாக்குறை உண்டானது.
தொழிலாளர் பற்றாக்குறை, தேவை முடக்கம் மற்றும் சப்ளை குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்தத் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. நடுத்தர, குறும் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வருவாயில் 20 முதல் 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஜிடிபிக்கு 30 சதவீத பங்களுக்கும் துறை இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இத்துறை பாதிக்கப்பட்டால் பொருளாதாரத்திலும் அது பிரதிபலிக்கும்.
நிதி பிரச்சனை
நிதி தான் இத்துறையின் முக்கியப் பிரச்சனையாக அமைகிறது. பொதுமுடக்க பாதிப்பின் போது பெரும்பாலான நிறுவனங்கள் கட்டணங்களை செலுத்த தங்களிடம் இருந்த சொற்ப வளத்தை பயன்படுத்திக்கொண்டன. இப்போது வர்த்தகச் செலவுகளுக்கு போதிய நிதி இல்லை.
அத்தியாவசியத் துறையில் செயல்பட்டு வந்த சிறு தொழில் நிறுவனங்கள் எப்படியோ தாக்குப்பிடித்தன. ஒரு சில நிறுவனங்கள், சானிடைசர், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பக்கம் திரும்பின. ஆனால், இது தற்காலிகமான ஏற்பாடு தான்.
மேலும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதும் சிக்கலாகி இருக்கிறது. செயல்பாட்டு மூலதனம் வற்றிய நிலையில், கடன் வட்டி கழுத்தை நெறிப்பதால் இத்துறை நெருக்கடியில் உள்ளது.
இந்திய அரசு அறிவித்த வட்டி தள்ளிவைப்பு உள்ளிட்ட சலுகைகள் ஆசுவாசம் அளித்தாலும், நிதி திரட்டுவதில் பிரச்சனை உள்ளது. பொதுமுடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், நிலைமை ஓரளவு மேம்பட்டு வருவதால், தற்சார்பு இந்தியா போன்ற திட்டங்கள் மேலும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் மற்றும் உள்கட்டமை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டால் இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு சிறு தொழில் நிறுவனங்களால் மீண்டு வர முடியும். ஆனால், இவற்றுக்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை.
மலிவு விலை இறக்குமதி சரக்குகள் சந்தையில் குவியலாம் என்பதும் சிறு தொழில் நிறுவனங்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.
பொதுமுடக்கக் காலத்தில் சரக்குகள் போக்குவரத்து கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. சீன எல்லை மூடப்பட்டதும், சீன சரக்குகள் குவிவதை கட்டுப்படுத்தியது. இது இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான வாய்ப்பாகவும் அமைந்தது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
மத்திய பட்ஜெட் தங்கள் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
கடன் தவணை தள்ளிவைப்பு மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், கடன் வசதி பெறுவது தொடர்ந்து சிக்கலாக உள்ளது. மாற்று கடன் பிரிவில் உள்ள நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பம் மூலம் ஈட்டுறுதி இல்லாத கடன்களை வழங்கி வருகின்றன. எனவே நிதிநுடப் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிஜிட்டல் கல்வியறிவை அரசு பரவலாக்க வேண்டும். ஏற்றுமதி துறையிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். சிறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதியை எதிர்பார்க்கின்றன. இந்த பிரிவில் பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்.
புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதி தொடர்பான RoDTEP வரி சலுகை நல்ல துவக்கமாகும். இதே போல, திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். திறன் வளர்ச்சிக்கான திட்டம் இருந்தாலும், இதில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் சீர்திருத்தங்கள் தேவை.
பெருந்தொற்றால் உண்டான பாதிப்பை சரி செய்யக்கூடிய முக்கிய பட்ஜெட்டாக இந்த ஆண்டு பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அரசு தன்னிடம் உள்ள நிதி ஆராரங்களுக்கு ஏற்படவே திட்டங்களை அறிவிக்க முடியும். இந்த பின்னணியில் சிறு தொழில்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது நீண்ட கால நோக்கில் பயன் அளிக்கும்.
ஆங்கில கட்டுரையாளர்: புஷ்கர் முகேவர் | தமிழில்: சைபர் சிம்மன்