Budget 2023: மாதச் சம்பளம் பெறுவோருக்கு நல்ல செய்தி - ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை!
வருமான வரி உச்சவரம்பில் புதிய மாற்றங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். வரி உச்சவரம்பானது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாதச்சம்பளம் பெறுவோருக்கு வருமான வரி உச்சவரம்பில் விலக்கு அளிக்கப்படுமா என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. பட்ஜெட் முடிவில் தனிநபர் வருமானவரி உச்சவரம்பு குறித்த அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
கஷ்டப்பட்டு ஊதியம் பெறும் மத்திய வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் வருமானவரி உச்சவரம்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, என்றார்.
- மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கான வருமானத்திற்கான புதிய வரி உச்சவரம்பு ரூ.7லட்சமாக உயர்த்தப்படுகிறது. புதிய வரிமுறையை பின்பற்றுவோருக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இந்த உச்சவரம்பானது ரூ.5 லட்சமாக இருந்தது இப்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
- 2020ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட 6 விலக்குகள் தற்போது மாற்றி அமைக்கப்படுகின்றன.
- இதன்படி, வருமான வரி உச்சவரம்பானது ரூ.2.50லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 0-ரூ.3லட்சம் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.
- ரூ.3,00,001ல் இருந்து ரூ.6 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 5% வருமான வரி செலுத்த வேண்டும்.
- ரூ.6,00,001ல் இருந்து ரூ. 9 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 10% வருமான வரி செலுத்த வேண்டும்.
- ரூ.9,00,001ல் இருந்து ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 15% வரி செலுத்த வேண்டும்.
- ரூ.12,00,001ல் இருந்து ரூ. 15,00,000 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 20 % வரி கட்ட வேண்டும்.
- ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 30 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும்.
- புதிய வரிமுறையில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நிம்மதியாக இருக்கும்.
- ரூ.9 லட்சம் ஆண்டு வருமானம் பெறும் தனிநபர் ரூ.45,000 மட்டுமே வரியாக செலுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த விதிமுறையின்படி அந்த நபர் ரூ.60,000 வரியாக செலுத்த வேண்டிய நிலையில் தற்போதைய புதிய வரிவிலக்கின் படி ரூ.45,000 மட்டுமே செலுத்தினால் போதும். இதனால் அவருக்கு ரூ.25,000 வரிப்பணம் மிச்சமாகிறது.
- இதே போன்று ரூ.15 லட்சம் ஆண்டு வருமானம் பெறும் தனி நபர் ரூ.1.5லட்சம் மட்டுமே வரியாக செலுத்தினால் போதும். பழைய வரிவிகிதத்தின்படி அந்த நபர் ரூ.1.87,500 வரியாக செலுத்த வேண்டி இருந்தது.
- தனிநபர்க்கான உச்சபட்ச வரியானது 42 சதவிகிதமாக இருந்தது அதற்கும் சலுகை அளிக்கப்பட்டு தனிநபர் உச்சபட்ச வரி 40 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
- பான் கார்டு இனி அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். ஆதார், ஓட்டுநர் உரிமம் போல பான்கார்டையும் இனி அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டிற்காக பிரபலப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
புதிய வரிமுறைகள் என்ன சொல்கிறது?
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. அதுவே, ரூ. 3 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சம் வரை புதிய விதிகளின் படி வரி கணக்கிடப்படும், அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது வரிக்கட்டணம் 0% என்று வரும் அதனால் வரிப்பணமானது அவர்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படாது. அதுவே வருமானமானது ரூ.7 லட்சத்தைத் தாண்டும் பட்சத்தில் 6 லட்சம் வரை 5 சதவிகித வரி அதற்கு மேல் இருக்கும் தொகைக்கு 10 சதவிகித வரி என்கிற அளவில் கணக்கிடப்பட்டு வரியானது வசூலிக்கப்படும்.