Budget 2023: ஸ்டார்ட்-அப்'கள் தேவையை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்ததா? புதிய அறிவிப்புகள் என்ன?
விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே நடப்பு ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
“ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவு இன்றியமையாதது. ஸ்டார்ட்-அப்'களுக்காக நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், அவை பலனைத் தந்துள்ளன. இப்போது உலகில் ஸ்டார்ட்-அப்களுக்கான மூன்றாவது பெரிய இடமாக இந்தியா இருப்பதாகவும், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் புத்தாக்கத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும்,” தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, வரி விலக்கு என சாமானிய மக்கள் எதிர்பார்த்திருந்ததைப் போலவே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கட்டமைப்பு, கடன் வசதி குறித்து புதிய திட்டங்கள் ஏதாவது அறிவிக்கப்படுமா? என ஆவலுடன் காத்திருந்தன.
அந்த வகையில் மத்திய அரசு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு என்னென்ன மாதிரியான திட்டங்களை அறிவித்துள்ளது என பார்க்கலாம்...
பட்ஜெட்டில் ஸ்டார்ட்-அப்’களுக்கு என்ன?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் ஸ்டார்ட்-அப்களுக்கு வருமான வரிச் சலுகைகளை இணைக்கும் தேதியை 31.03.23 முதல் 31.3.24 வரை நீட்டிக்க அரசு முன்மொழித்துள்ளதாக அறிவித்தார். ஸ்டார்ட்-அப்களின் பங்குகளை ஏழு ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக மாற்றுவதன் மூலம் இழப்புகளை சமாளிப்பதற்கான பலனை வழங்கவும் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்துள்ளார்.
“ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகைகளை இணைக்கும் தேதியை மார்ச் 31, 2023 முதல் மார்ச் 31, 2024 வரை நீட்டிக்க நான் முன்மொழிகிறேன். ஸ்டார்ட்-அப்களின் பங்குகளை மாற்றியமைப்பதில் ஏற்படும் நஷ்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இழப்புகளை சமாளிப்பதற்கான பலனை ஏழு ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக வழங்கவும் நான் முன்மொழிகிறேன்,” எனக்கூறினார்.
முதலீட்டாளர்கள் 2022 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்-அப்களில் சுமார் $25 பில்லியன் மட்டுமே முதலீடு செய்துள்ளனர். இது 2021ம் ஆண்டு 1,500க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் மூலமாக திரட்டப்பட்ட $42 பில்லியனில் இருந்து 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
2022-23 பட்ஜெட்டில், ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டத்திற்கு (Startup India Seed Fund Scheme) அரசாங்கம் ரூ.283.5 கோடியை ஒதுக்கியது, இது முந்தைய பட்ஜெட்டில் இருந்த திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ரூ.100 கோடியை விட அதிகமாகும்.
"ஸ்டார்ட்-அப்கள் மற்றும் கல்வியாளர்களால் புதுமை மற்றும் ஆராய்ச்சியை கட்டவிழ்த்துவிட, தேசிய தரவு ஆளுமைக் கொள்கை கொண்டு வரப்படும். இது அநாமதேய தரவுகளை அணுக உதவும். மேலும், கிராமப்புறங்களில் உள்ள இளம் தொழில் முனைவோர்களால் அக்ரி ஸ்டார்ட்-அப்’களை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் ஸ்டார்ட் அப் தொடங்க தனி நிதி ஒதுக்கப்படும். விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான மற்றும் மலிவு தீர்வுகளை கொண்டு வருவதை இந்த நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார் நிதி அமைச்சர்.
நாட்டில் ஸ்டார்ட்-அப்’களை ஊக்குவிக்க அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸ்டார்ட்-அப் இந்தியா முன்முயற்சியின் கீழ், ஸ்டார்ட்-அப்களுக்கான நிதிக்கான நிதி (எஃப்எஃப்எஸ்) திட்டம், ஸ்டார்ட்-அப் இந்தியா விதை நிதித் திட்டம் (எஸ்ஐஎஸ்எஃப்எஸ்) மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (சிஜிஎஸ்எஸ்) ஆகியவை ஒரு ஸ்டார்ட்-அப்பின் வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களில் மூலதனத்தை வழங்க செயல்படுத்தப்படுகின்றன.
புதிய கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கும், ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதையும், வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகல் கொண்டு ஜனவரி 2016ல் ஸ்டார்ட்-அப் இந்தியா முயற்சியை அரசாங்கம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.