25வது ஆண்டில் 'பன் வேல்ர்ட்' பேக்கரி' 'ரியல் பொம்மி'யின் அசத்தல் சாதனை!
'ரியல் பொம்மி' ஆன கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி உழைப்பில் உருவான 'பன் வேல்ர்ட் ஐயங்கார்' பேக்கரி 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
'ரியல் பொம்மி ' ஆன கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி உழைப்பில் உருவான 'பன் வேல்ர்ட் ஐயங்கார்' பேக்கரி 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
’சூரரைப் போற்று' படத்தில் ஹீரோ சூர்யாவுக்கு இணையாகப் அதிகம் பேசப்படும் கேரக்டர் நாயகி அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கேரக்டர். பொம்மி என்ற கேரக்டராகவே வாழ்ந்துகாட்டி, மதுரை பாஷையில் கலக்கி எடுத்திருப்பார் நாயகி அபர்ணா. இந்தப் படத்துக்கு இன்ஸ்பிரேஷனும் நிஜ சூரருமான கேப்டன் கோபிநாத் கூட பொம்மி கேரக்டர் தனது மனைவியை பிரதிபலிப்பதாக வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
படத்தில் அவர் நடத்தி வரும் பொம்மி பேக்கரி போலவே, நிஜத்தில் கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி பெங்களூர் மல்லேஸ்வரத்தில் தனது ‘பன் வேல்ர்ட் ஐயங்கார்' பேக்கரியை நடத்தி வருகிறார். இந்தப் பேக்கரி தற்போது தனது 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள கேப்டன் கோபிநாத்,
“தனது கனவை ஒருபோதும் விட்டுவிடாத என் வாழ்க்கைத் துணையை நினைத்து பெருமைப்படுகிறேன்," எனக் கூறியுள்ளார் .
'பன் வேல்ர்ட் ஐயங்கார்' பேக்கரி பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் ஏக பிரபலம். 25 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அந்த பேக்கரி, தற்போது நான்கு கிளைகளைக் கொண்டுள்ளது. இதற்கு முழுமுதற்காரணம் கோபிநாத்தின் மனைவி பார்கவி மட்டுமே.
கோபிநாத் அளவுக்கு பார்கவி அவ்வளவாக வெளியில் பிரபலம் இல்லை. ஆனால் கோபிநாத் அளவுக்கு சமமான வெற்றிகரமான தொழில்முனைவோர் பார்கவி. தனது விமான நிறுவனம் ஆரம்பிக்கும் முன், ஒரு பேக்கரியை நடத்துவதற்கான திறமை பார்கவியிடம் இருந்ததை அறிந்து அதற்காக அவர் ஒரு அனுபவத்தை பெறும் வகையில் தனது உறவினர்கள் பேக்கரியில் சேர்த்துவிட்டிருக்கிறார் கோபிநாத்.
மேலும் பேக்கரி ஆரம்பிக்கும் ஐடியாவும் கோபிநாத் கொடுத்ததுதான். இந்த ஐடியாவால் உதித்த ‘பன் வேல்ர்ட் ஐயங்கார்' பேக்கரி பெங்களூரின் மல்லேஸ்வரம் சுற்றுப்புறத்தில் பிரபலமானதாகவும் மற்றும் லாபகரமானதாகவும் இயங்கி வருகிறது. நான்கு கிளைகளை கொண்டிருக்கும் பேக்கரியை மேலும் விரிவுபடுத்த பார்கவி நினைத்துள்ளார். அதற்கு அவரின் மகள்கள் இருவரும் தன் தொழிலில் ஈடுபடுவார்கள் அதன்மூலம் தொழிலை விரிவுபடுத்தலாம் என்று பார்கவி நினைத்தாலும், அவரின் மகள்கள் தங்களது தந்தையின் தொழிலைத் தேர்வு செய்துள்ளனர்.
"எனது தொழிலை விரிவுபடுத்துவது பற்றி நான் நினைத்தேன். ஆனால் என் மகள்கள் என்னுடன் சேர ஆர்வம் காட்டவில்லை, இப்போது வரை," என்று பார்கவி கூறுகிறார். ஆம், இரு மகள்களுக்கு ஏர் டெக்கான் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்கவி குறித்து வெளியில் அவ்வளவாக அறியப்படாமல் இருந்த நிலையில் ‘சூரரைப் போற்று' படம் அவரை தற்போது ஒரு ஸ்டார் ஆக்கியுள்ளது. எனினும் படத்தில் வருவது போல பார்கவியிடம் தான் எந்தக் கடனும் வாங்கவில்லை என்று பதிவிட்டுள்ளார் கேப்டன் கோபிநாத்.
”ஒரு வெற்றிக் கதை இருக்கும்போது, அதன் பின்னால் பொதுவாக ஒரு குழு அல்லது ஒரு ஆதரவு இருக்கும். என்னுடைய வெற்றிக்கு பின்னால் என் மனைவியின் ஆதரவு பெரிது. படத்தில் காண்பிக்கப்பட்டது போல நான் ஒருபோதும் எந்த நிதி உதவியையும் கேட்கவில்லை என்றாலும், அவள் எனக்கு பலமான, ஆதரவாக இருந்தாள்,'' என்று நெகிழ்ந்துள்ளார்.