முகம் தெரியாத மூவரின் கடனை வங்கியில் செலுத்திய தொழிலதிபர்!
இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்பது போல், உதவி செய்த இந்த தொழிலதிபர் யாரென உதவி பெற்றவர்களுக்குக் கூட தெரியாது.
மனிதநேயம் இன்னும் மறைந்துவிடவில்லை என்பதை அடிக்கடி ஏதோ ஒரு வகையில் காலம் நமக்கு உணர்த்தி வருகிறது. ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டவேண்டிய சூழல் ஏற்படும்போது அது தெளிவாகத் தெரிகிறது.
மிசோரமின் அய்ஸ்வால் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் எஸ்பிஐ வங்கியில் நான்கு பேரின் கடன் தொகையைக் கட்டி உதவியுள்ளார்.
இந்தப் பயனாளிகள் நான்கு பேரில் மூன்று பேர் பெண்கள். இவர்களுக்காக 9,96,365 ரூபாய் தொகையை அவர் செலுத்தியுள்ளார்.
எஸ்பிஐ அய்ஸ்வால் கிளையில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களுக்கு மட்டுமே இந்த தொழிலதிபர் யார் என்பது தெரியும். மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பது மட்டுமே நோக்கம் என்பதால் தான் செய்யவிருக்கும் உதவியைப் பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்கிற நிபந்தனையுடனேயே இந்தச் செயலை இவர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“எங்கள் வங்கிக் கிளையில் பணிபுரியும் மூன்று பேருக்கு அந்தத் தொழிலதிபர் சில காலமாக பரிச்சயமானவர். அவர் ஒரு நாள் எங்களை அணுகி தனது விருப்பத்தைத் தெரிவித்தார். தொழில் தொடங்க விரும்பி சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நபர்களைத் தேர்வு செய்து தன்னிடம் சொல்ல கேட்டுக் கொண்டார். அந்தத் தொகையை தான் செலுத்துவதாகத் தெரிவித்தார். 10 லட்ச ரூபாய் வரை செலுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்,” என்று எஸ்பிஐ உதவி பொது மேலாளர் ஷெரில் வன்சாங் `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.
“இந்தத் தொழிலதிபர் எஸ்பிஐ வங்கியின் முக்கிய வாடிக்கையாளர். இதற்கு முன்பும் பலருக்கு உதவியுள்ளார். ஆனால் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் உதவுவது இதுவே முதல் முறை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறு வணிகம் மூலம் இவர்கள் ஈட்டும் வருவாய், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள மோசமான சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வங்கியே பயனர்களைத் தேர்வுசெய்துள்ளது. இவர்களைத் தேர்வு செய்த பிறகு அந்தத் தொழிலதிபர் தொகையை வங்கிக் கணக்கிற்கு ஆன்லைனில் மாற்றியுள்ளார்.
மறுநாள் அந்தப் பயனர்களை அழைத்து வங்கியின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சொத்து ஆவணங்கள் அவர்களிடம் திருப்பியளிக்கப்பட்டது. முகம் தெரியாத அந்த நபருக்கு அவர்கள் மனதார நன்றி தெரிவித்தனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA