எல்பிஜி பயன்பாட்டை அளவிட்டு, கண்காணித்து, சேமிக்க வழி செய்யும் ட்ராக்கர் வடிவமைத்த ஐஐடி குழு!
ஐஐடி புவனேஷ்வர் குழு உருவாக்கிய எல்பிஜி ட்ராக்கர் மற்றும் இதர மூன்று வடிவமைப்புகள் ஐஓடி இன்னொவேஷன் சேலஞ்சில் வென்றுள்ளது!
டிஜிட்டல் கட்டமைப்பு வழங்கும் முன்னணி நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸ் இந்திய தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து ஏற்பாடு செய்த ‘தி கிராண்ட் இண்டியா IoT இன்னொவேஷன் சேலஞ்ச்’ (The Grand India IoT Innovation Challenge) முதல் பதிப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 27 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
“சிறப்பான சமூகத்தை உருவாக்க உதவும் தீர்வுகள்” என்பதை மையமாகக் கொண்டு நான்கு மாதங்கள் நடைபெற்ற போட்டியை அடுத்து இறுதிச் சுற்றிற்கு 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதிலிருந்து நான்கு குழுக்கள் IoT இன்னொவேஷன் சேலஞ்சின் முதல் பதிப்பின் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் அறிவித்தது. அந்த நான்கு வெற்றியாளர்கள் பற்றிய குறிப்புகள் இதோ:
ஐஐடி புவனேஷ்வர் - ப்ரஜ்ஜாவாலா (Prajjawala)
ஐஐடி புவனேஷ்வரின் ப்ரஜ்ஜாவாலா உருவாக்கியது நுகர்வோரின் எல்பிஜி பயன்பாட்டை அளவிட்டு, கண்காணித்து, சேமித்து, ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஐஓடி சார்ந்த தீர்வாகும். இதுவே போட்டியில் முதலிடத்தைப் பிடித்தது. இவர்களது புதுமையான எல்பிஜி ட்ராக்கர் இவர்களை சவாலில் வெற்றிபெறச் செய்ததுடன் 5 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசையும் பெற்றுத்தந்தது.
ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – டாமினேட்டர்ஸ்
ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த டாமினேட்டர்ஸ் குழு ஐஓடி இன்னொவேஷன் சேலஞ்சில் இரண்டாவது இடத்தைப் பிடித்து (முதல் ரன்னர் அப்) மூன்று லட்ச ரூபாய் ரொக்கப்பரிசையும் வென்றுள்ளது. இவர்களது வடிவமைப்பில் உருவான ஐஓடி சாதனம் சாலை விளக்குகளுடன் பொருத்தக்கூடியதாகும். இது கொசுக்கள் பற்றிய தகவல்களை வழங்கி நகராட்சி அதிகாரிகள் அவற்றை கட்டுப்படுத்த திட்டமிடுவதற்கு உதவக்கூடியதாகும்.
சன்ரக்ஷக் (Sanrakshak - விஐடி) மற்றும் ஷார்ட் சர்க்யூட் (பிட்ஸ் பிலானி)
சென்னையின் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி குழுவான சன்ரக்ஷக் மற்றும் பிட்ஸ் பிலானி ராஜஸ்தானைச் சேர்ந்த குழுவான ஷார்ட் சர்க்யூட் இரண்டும் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டது. இந்த இரண்டு குழுக்களும் தொடர்ந்து நாம் சந்தித்து வரும் சில பொதுவான பிரச்சனைகளுக்கு ஐஓடி சார்ந்த தீர்வை முன்வைத்துள்ளனர்.
ரயில்வே லைன்களில் ஏற்படும் கோளாறுகள் குறித்த நிகழ்நேர தகவலை வழங்கும் உணர்கருவிகளை சன்ரக்ஷக் குழு உருவாக்கியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அதில் சேமிக்கப்பட்டிருக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தீர்வினை உருவாக்கியுள்ளனர் பிட்ஸ் பிலானி குழுவினர். இதன் மூலம் மின் தட்டுப்பாடு பிரச்சனைக்கு தீர்வுகாண முற்படுகின்றனர் ஷார்ட் சர்க்யூட் குழுவினர். இரண்டு குழுக்களுக்கும் தலா 1.5 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற குழுக்கள் தங்களது திட்டத்தை வணிக மாதிரியாக மாற்ற ஐஓடி சேவை வழங்கும் முக்கிய நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆதரவளிக்க உள்ளது.
”இந்தியாவில் நிலவும் சிக்கல்களில் கவனம் செலுத்தி அதற்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வு காண உதவும் வகையில் ஒரு முழுமையான ஐஓடி சுற்றுச்சூழலை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நகரங்களை வளர்ச்சியடையச் செய்வதிலும் பங்களிக்கும் என திடமாக நம்புகிறோம்,”
என டாடா கம்யூனிகேஷன்ஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் இண்டர்னெட் ஆஃப் திங்க்ஸ் தலைவர் விஎஸ் ஸ்ரீதர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த சுற்றுச்சூழலில் சிறப்பாக செயல்பட இளைஞர்கள், குறிப்பாக பொறியியல் மாணவர்களின் சிந்தனைகளை ஊக்குவிக்க விரும்புகிறோம். அவர்களது பங்களிப்பு மக்களுக்கு பலனளிக்கும் விதத்தில் பெரியளவிலான புதுமையான தீர்வுகளை உருவாக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA