சட்னி அரைத்தல், 10 லிட்டர் இலவச மது, ரூ.1கோடி பரிசு, வெளிநாடு ட்ரிப்: வாக்குறுதிகளை அள்ளி வீசும் வேட்பாளர்கள்!
அட...! இப்படியுமா ஓட்டு கேட்கலாம்!? புதுமுறைகளைக் கையாளும் வேட்பாளர்கள்...
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் துவங்கிவிட்டது, ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கு வாக்கு சேகரிக்க பல முறைகளை கையாளுகின்றனர். “போடுகம்மா ஓட்டு எங்க சின்னத்த பாத்துனு” கத்திய காலம் மாறி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளம், ஆயிரக்கணக்கான வாக்குறுதிகள் என காலத்திற்கு ஏற்ப ஓட்டு கேட்கும் தன்மையும் மாறிவிட்டது. அப்படி நம்மை திரும்பிப் பார்க்கச் செய்த விசித்திரமான, சுவாரசியமான மற்றும் வேடிக்கையான சில பிரச்சாரத்தை பார்ப்போம்.
வியாபாரம் செய்து, வீட்டு வேலை செய்து ஓட்டு வாங்கும் மன்சூர் அலி கான்
நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் நிற்கும் மன்சூர் அலி கான் மக்களோடு மக்களாக இறங்கி அனைத்து வேலைகளையும் செய்து வாக்குகளை சேமிக்கிறார். ஒரு நடிகராக இருந்தாலும் கூட எந்தவித பந்தாவுமின்றி மக்களுக்காக எப்பொழுதும் குரல்கொடுப்பவர் இவர்.
இப்பொழுது இவர் தன் பிரச்சாரத்தை வித்தியாசமாக தொடங்கியுள்ளார்;
சட்னி அரைக்கிறார், ரோட்டில் உள்ள குப்பைகளை அள்ளிப் போடுகிறார், கீரை காய்கறி விற்கும் பெண்கள் பாட்டிகளிடம் பேசுகிறார். மேலும் மிதிவண்டியிலே சென்று வோட்டு கேட்கிறார். கையில் கிளவுஸ் கூட இல்லாமல் குப்பைகளை அள்ளிப்போட்டு குப்பை வண்டியை ஒட்டி செல்கிறார். கடைகளுக்கு சென்று சட்னி அரைத்து, பஜ்ஜிகள் சுட்டு ஓட்டு கேட்கிறார், அதுமட்டுமின்றி ஊசி பாசி மணி விற்பவர்களுக்கு உதவ தானே ரோட்டில் இறங்கி, ‘ஊசி மணி பாசி மணி’ என விற்று அசத்துகிறார்.
மக்களோடு மக்களாக இவர் பழகும் இயல்பை பார்த்து மக்கள் இவரை ரசிக்கின்றனர்; ஆனால் ஓட்டு போடுவார்களா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மாதம் 10 லிட்டர் மதுவும்... ரூ. 25000 பணமும்....
அரசியல் கட்சி வேட்பாளகர்களுக்கு இணையாக வாக்குறுதிகளை அள்ளி வீசும் சுயேட்சை வேட்பாளர்கள்; அதிலும் இவர் வாக்குறுதியைக் கேட்டு தலையேச் சுற்றி விட்டது. திருப்பூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நிற்கும் ஈரோட்டைச் சேர்ந்த ஷேக் தாவுத் வேட்புமனுவை தாக்கல் செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது,
“நான் 15 தேர்தல் வாக்குறுதிகள் வைத்துள்ளேன். முதலில் எனது தொகுதியில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.25 ஆயிரம் உதவித் தொகையை அரசிடமிருந்து பெற்றுத்தருவேன். பின்னர் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு மாதம் 10 லிட்டர் சுத்தமானதாக பிராந்தியை பெற்றுத்தருவேன்,” எனக் கூறி அனைவரையும் அலற வைத்துவிட்டார்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் எந்தச் சூழலிலும் பூரண மதுவிலக்கு வரக் கூடாது என டெல்லியில் போராடுவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்து மத பெண்களுக்கும் திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் சமூக வலைதளத்தில் மீம் ஆக மாறியுள்ளார் இவர். ஓட்டு கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனால் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் இவர்.
வாக்காளர்களுக்கு இலவசம் வழங்குவது வழக்கம், ஆனால் வேட்பாளர்களுக்கு இலவசம் என்பது புதுமை!
பல முன்னணி காட்சிகள் நீயா? நானா? என தேர்தல் களத்தில் நேரடியாக மோதிக் கொள்கின்றனர். பல வியூகங்களில் ஓட்டுகளை சேகரிக்க போராடி வருகின்றனர் கட்சியினர், சில தொகுதிகளில் கோடீஸ்வர வேட்பாளர்களையும் கட்சிகள் நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பூத் ஏஜென்ட்கள், நிர்வாகிகளை கவர, பரிசுத் திட்டங்களை, கோடீஸ்வர வேட்பாளர்கள், வெளிப்படையாக அறிவிக்க துவங்கி உள்ளனர்.
அரக்கோணத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்,
லோக்சபா தொகுதியில் இடம்பெற்றுள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில், எங்கு அதிக ஓட்டுகள் கிடைக்கிறதோ, அந்த தொகுதி பொறுப்பாளர்களுக்கு, 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, அறிவித்து உள்ளார்.
இதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தனக்கு அதிக ஓட்டுகளை பெற்றுத் தரும் கூட்டணி கட்சியினருக்கு, 'புல்லட் பைக்' வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பணம், புல்லட் பைக் மட்டுமின்றி வெளிநாடு பயணம், தனிப்பட்ட சுற்றுலா என கட்சியினருக்கு வாரி வழங்குகிறது கட்சிகள். தங்க சங்கிலி, மோதிரம் என பரிசுகளின் பட்டியில் எகிறுகிறது, தேர்தல் ஆணையம் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை வரையறை செய்துள்ளது இருந்தும் பரிசு பட்டியல் நீண்டு கொண்டுதான் இருக்கிறது.
’நோட்டா’ வுக்கு ஓட்டு!
எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வது வழக்கம், ஆனால் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்கள் என பிரச்சாரம் செய்கிறார் பொதுமக்களில் ஒருவர். புதுக்கோட்டையை சேர்ந்த தினகரன், நோட்டாவுக்கு ஒட்டு போடுங்கள் என தெருவில் நின்று நோட்டீஸ் கொடுத்து வருகிறார். இது குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் அளித்தப் பேட்டியில்,
“புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கு. ஆனாலும் அரசியல் சுயநலத்தால், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியோடும், விராலிமலை சட்டமன்ற தொகுதியை கரூர் பாராளுமன்ற தொகுதியோடும், ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகளை சிவகங்கை பாராளுமன்ற தொகுதியோடும் இணைத்து 4 பாராளுமன்ற தொகுதிகளாக பிரித்துள்ளனர். இதனால் எங்கள் மாவட்டம், தனக்கென்று தனி பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. அதனால்தான் நோட்டாவிற்கு வாக்கு கேட்கிறேன்.”
பொதுநலத்துடன் பேசும் இவர், முதலில் தொகுதியை மீட்டெடுக்கவேண்டும், மாவட்ட அந்தஸ்து பறிபோகாமல் இருக்க வேண்டும் என்பதே இவரது குரலாக இருக்கிறது.
இந்த பிரச்சாரம் மற்றும் வாக்குறுதிகள் பற்றி உங்களது கருத்துக்கள் என்ன...?