‘அடுத்த ஆண்டில் ஐபிஓ வெளியிட திட்டம்’ - காசா கிராண்ட் நிர்வாக இயக்குனர் அருண்!
கொரொனாவுக்கு பிறகு ரியல் எஸ்டேட் துறை சிக்கலை சந்தித்தாலும் மக்களின் வீடு வாங்கும் ஆர்வம் குறையவில்லை. ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து முதலீடுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறையில் முக்கியமான நிறுவனமாக 'காசா கிராண்ட்' (Casa Grand) ஐபிஒ குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது.
ஜூம் மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்த காசா கிராண்ட் நிர்வாக இயக்குநர் அருண் இதனை தெரிவித்தார். நிறுவனத்தின் தற்போதைய நிலை, விரிவாக்கத் திட்டங்கள், கோவிட் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என பல விஷயங்களை அருண் பகிர்ந்துகொண்டார்.
அடுத்த ஆண்டு ஐபிஓ
ரியல் எஸ்டேட் துறையில் தென் இந்தியாவில் பெரிய ஐந்து நிறுவனங்களில் ’காசா கிராண்ட்’ இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் முக்கியமான நிறுவனமாக மாற வேண்டும் என்னும் இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக அருண் தெரிவித்தார்.
“அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக மோதிலால் ஆஸ்வால் மற்றும் ஜே.எம். பைனான்ஸியல் ஆகிய வங்கியாளர்களை நியமனம் செய்திருக்கிறோம். ஐபிஓ மூலம் சுமார் 15 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். மேலும், ஐபிஓ வெளியிடும் சமயத்தில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5000 கோடி முதல் ரூ.6000 கோடி வரை இருக்கும்,” என்றார்.
மேலும், இதற்கு மேலான தொகையில் சந்தை மதிப்பு இருக்குமே தவிர குறைவான தொகையில் சந்தை மதிப்பு இருக்காது என அருண் தெரிவித்தார். அப்போலோ கேபிடல் மற்றும் கேகேஆர் உள்ளிட்ட பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள், காசா நிறுவனத்தில் புராஜக்ட் அடிப்படையில் முதலீடு செய்துள்ளன.
கடந்த நிதி ஆண்டில் 2300 கோடி மதிப்பிலான விற்பனை இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் ரூ.3750 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். மேலும், கடந்த நிதி ஆண்டில் ரூ.6000 கோடிக்கு விற்பனை சாத்தியம் உள்ள நிலங்களை வாங்கினோம். நடப்பு நிதி ஆண்டில் ரூ.10,000 கோடி விற்பனைக்கு சாத்தியம் உள்ள நிலங்களை வாங்குவதற்கு திட்டமிடுகிறோம், என்றும் அருண் கூறினார்.
அடுத்தகட்ட திட்டம்
தற்போதைக்கு நிறுவனத்தின் வருமானத்தில் சென்னை பெரும் பங்கு வகிக்கிறது. எங்களுடைய கவனம் சென்னையில் இருக்கும். இருந்தாலும் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இருக்கிறோம். தற்போது வரை நடுத்தர மக்களுகான வீடுகள், கொஞ்சம் சொகுசு வீடுகள், வில்லாகளில் கவனம் செலுத்திவருகிறோம். அடுத்த சில ஆண்டுகளில் பட்ஜெட் (affordable) வீடுகளில் கவனம் செலுத்துவோம். ரூ.25-45 லட்சம் வரையிலான வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம்.
அதேபோல காசா கிராண்ட் துறை நிறுவனங்களாக ’புராப்கேர்’ (PropCare), கோ-லிவ்ங் (Co-living) பிரிவில் செயல்படும் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி அடையும். ரிட்டயர்மெண்ட் வீடுகளுக்கான பிரிவில் களம் இறங்குவதற்கு திட்டம் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரிட்டயர்மெண்ட் என்பது ரியல் எஸ்டேட்டை தாண்டி, ஹாஸ்பிட்டாலிட்டி துறையாகவே இருப்பதால் இப்போதைக்கு அதில் கவனம் செலுத்தவில்லை என அருண் தெரிவித்தார்.
ஊழியர்கள் நலன்
காசா கிராண்ட் குழுமத்தில் சுமார் 7500 பணியாளர்கள் உள்ளனர். இதுதவிர கட்டுமானத் தளத்தில் 6000க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.
”இரண்டு லாக்டவுனில் பணியாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கினோம். கோவிட் காலத்திலும் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை வெளிநாட்டு சுற்றுலா அனுப்பி வைத்தோம். நாங்கள் பெரிய லாபம் அடைந்தோம் என எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பணியாளர்களை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கையை எடுத்தோம்,” என்றார்.
சில நூறு நபர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது, துரதிஷ்டவசமாக மூவர் உயிர் இழந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்துக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கினோம். குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளையும் நிறுவனம் பார்த்துக்கொண்டது என அருண் தெரிவித்தார்.
”ஐபிஓ கொண்டுவருவதன் மூலம் நிறுவனத்துக்கு கூடுதல் அங்கிகாரம் கிடைக்கும். இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். தவிர ரியல் எஸ்டேட் என்பது அதிக முதலீடு தேவைப்படும் தொழில் என்பதால் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதால் குறைந்த வட்டியில் நிதியை திரட்ட முடியும். ஐபிஒ வெளியிடுவதன் மூலம் பல சாதகங்கள் உள்ளது,” என்றார்.
17 ஆண்டுகளில் தென் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதல் ஐந்து இடங்களுக்குள் காசா கிராண்ட் உள்ளது. இந்தியாவில் முதல் ஐந்து நிறுவனமாக வருவதற்கான திட்டம் இருக்கிறது. இந்தியா தவிர வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்கு அமெரிக்கா மற்றும் துபையில் விற்பனை அலுவலகத்தை திறக்க இருக்கிறோம், என அருண் தெரிவித்தார்.