'பணம் இல்லாமல் பணம் ஈட்ட முடியாதவர்கள் பணத்தைக் கொண்டும் பணம் ஈட்ட முடியாது’
ஊரடங்கு முடிந்த பிறகு வணிக செயல்பாடுகளில் தீவிரம் காட்ட உள்ளது குறித்த திட்டமிடலை விவரித்தார் Suxus பைசல் அஹமத்!
“பணம் இல்லாமல் பணத்தை ஈட்ட முடியாதவர்களால் பணத்தைக் கொண்டும் பணம் ஈட்ட முடியாது.”
கடும் தோல்வியைத் தழுவியபோதும் அதிலிருந்து மீண்டெழுந்து வெற்றியை வசப்படுத்திய ஒரு தொழில்முனைவரின் வரிகள் இது.
உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில் Suxus Menswear நிறுவனர் ஃபைசல் அஹமத் நிலைமை சீரானதும் முழுவீச்சுடன் களமிறங்குவதற்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்வதில் இந்த ஊரடங்கு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
ஃபைசல்; ஊரடங்கு முடிந்த பிறகு வணிக செயல்பாடுகளில் தீவிரம் காட்ட உள்ளது குறித்த திட்டமிடலை விவரித்தார். பணத்தை ரொக்கமாக கையிருப்பு வைத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்தும் மார்க்கெட்டிங் மற்றும் இதர செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் ஊரடங்கு நேரத்தை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை தடைபட்டதால் ஆஃப்லைன் சில்லறை வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம் பசுமை மண்டலங்களில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு சில்லறை வர்த்தம் குறைந்தபட்சம் 40 சதவீத இழப்பை சந்திக்கும் என்றும் சுமார் 20 முதல் 25 சதவீத வணிகங்கள் மூடப்படலாம் என்றும் சில்லறை வர்த்தக துறைசார் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்தச் சூழலில் புதுமையாக செயல்படும் வணிகங்களே நிலைத்திருக்கும் என்கிறார் ஃபைசல்.
“எங்கள் செலவுகளை முறையாக திட்டமிடுகிறோம். நாங்கள் தற்போது செய்யும் முதலீடு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பலனளிக்கும் வகையில் திட்டமிடப்படுகிறது,” என்றார்.
குறைந்தபட்சமாக மூன்று மாத தேவைக்கான பணம் கையிருப்பு கட்டாயம் இருக்கவேண்டும் என்பதே இவரது நீண்டநாள் நம்பிக்கை. இந்த நெருக்கடியான சூழல் அதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
“பணப் பற்றாக்குறை காரணமாக வணிகங்கள் தோல்வியை சந்திக்காது. நிதியை முறையாக நிர்வகிக்காமல் போவதாலேயே வணிகங்கள் தோல்வியடையும்,” என்கிறார் இவர்.
ஊரடங்கு காலத்தை வணிக இருப்பை கணக்கெடுக்க சரியான வாய்ப்பாக பார்க்கிறார் ஃபைசல்.
“இந்த நேரத்தை செலுத்த வேண்டியவற்றை ஆராயவும், வரவேண்டியவற்றில் கவனம் செலுத்தவும் எங்களது நிலையான செலவுகளை மாற்றியமைத்து செலவீனங்களைக் குறைக்கவும் பயன்படுத்திக் கொள்கிறோம்,” என்றார்.
இவர் 2011-ம் ஆண்டு கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளார். குடும்பத்தினர், நண்பர்கள், குழுவினர் என ஒட்டுமொத்த சமூகத்துடனும் நேரம் செலவிடுவது உள்ளிட்ட சிறு விஷயங்களையும் கொண்டாட இந்த பெருந்தொற்று கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் ஃபைசல்.
இவர் 2006-ம் ஆண்டு 5 லட்ச ரூபாய் மூலதன கடன் பெற்று Suxus என்கிற ஆடவர்களுக்கான ஆடை பிராண்ட் நிறுவினார். இன்று தமிழகம் முழுவதும் ஒன்பது ஷோரூம் உள்ளன. 2030ம் ஆண்டிற்ற்குள் மேலும் 420 ஷோரூம் திறக்க திட்டமிட்டுள்ளார்.
ஃபைசல் மதுரையைச் சேர்ந்தவர். மூன்றாம் தலைமுறை தொழில்முனைவர். இவரது அப்பா நடத்தி வந்த வணிகம் தொடர்புடைய கடனை மீட்பதற்காக வேறு வழியின்று பி.காம் படித்துக்கொண்டிருந்தபோதே வணிகம் தொடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஷர்ட், பேண்ட், டி-ஷர்ட், டெனிம் உள்ளிட்ட ஆடவர் ஆடைகளில் மட்டுமே கவனம் செலுத்து இந்நிறுவனம், பி2பி மற்றும் பி2சி வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. விலை 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது.
இவர்கள் புதிய ஸ்டோர் திறக்கும் நாளில் கிட்டத்தட்ட 3,000 வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். அந்த அளவிற்கு Suxus வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களுக்கு கூட்டம் சேர்வது இயல்பு. ஆனால் அதற்கு இணையாக Suxus அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதால் சாலைகளில் உள்ள கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸ் வரவழைக்கப்படுகிரது.
முதல் முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஃபைசல் ஒரு சில தொழில்முனைவர்களுடன் இணைந்து அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்: ஸ்ரீவித்யா