ஆழ்துளைக் குழி மீட்புக் கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு!
ஸ்டார்ட்-அப், தனியார்கள் தங்கள் கண்டுபிடிப்போடு தன்னை அணுகவும் என்று ஐடி துறைச் செயலாளர் Dr.சந்தோஷ் பாபு தனது முகநூல் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 82 மணி நேரம் போராடியும் மீட்க முடியாமல் குழந்தை சுஜித் வில்சன் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஐந்து நாட்களாக தீபாவளி கொண்டாட்டங்களைக்கூட மறக்க வைத்து தமிழக மக்களை பிரார்த்தனையில் மூழ்க வைத்தான் சுஜித். ஆனால், எவ்வளவோ முயற்சித்தும் ஐந்து நாட்களுக்குப் பிறகு சுஜித்தை சடலமாகத்தான் மீட்க முடிந்தது.
சுஜித்தின் மரணம் கண்ணீரோடு கடந்து விட வேண்டிய விஷயமல்ல. இனி இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுத்து நிறுத்த நாம் உடனடியாக செயலில் இறங்க வேண்டிய தருணம். கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 13 குழந்தைகள் இதுபோல் ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கியுள்ளனர். அவர்களில் சிலர் உயிரோடு போராடி மீட்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
தமிழக அரசு தொடக்கம் முதல் மீட்புப் பணியில் பல உத்திகளைக் கையாண்டும், பல வல்லுனர்களின் உதவியை நாடியும், குழந்தையை லாவகமாக மீட்க பிரத்யேக கருவி ஏதும் சரியாக இல்லாததால் சுஜித் மரணமடைய நேர்ந்தது. இது பலரின் ஆதங்கமாகவும், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலத்தில் வேதனையாகவும் உள்ளது.
இந்நிலையில், தமிழக ஐடி துறைச் செயலர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் தனது முகநூல் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில்,
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்கும் கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐடி துறைச் செயலர் Dr.சந்தோஷ் பாபு, பொதுவாகவே பல புதிய விஷயங்களை அரசுத்துறையில் அறிமுகப்படுத்திய முன்னோடி ஆவார். அந்த வகையில் அவர் சுஜித் சம்பவம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கான தீர்வு காண்பவருக்கு பரிசு அளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
"அன்பு நண்பர்களே, இந்த தீபாவளி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கு இதயத்தை நொறுக்கும் நாளாக அமைந்துவிட்டது. அலட்சியத்தால் இன்னும் ஓர் பிஞ்சுயிரை இழந்திருக்கிறோம். நம் நாட்டில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் தவறிவிழுந்து இறப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும். தற்போது இதற்கு மிக அவசரமான தீர்வுகள் தேவைப்படுகிறது.
ஐடி துறை இது சம்மந்தமாக ஒரு ஹேக்கத்தான் நடத்தி, ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க நினைக்கிறேன். ஏனெனில் எங்கள் இயலாமையை நினைத்து சங்கடமாக உள்ளது.
ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் ஒரு சிறந்த கருவியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். செயல்படும் நிலையில் இருக்கும் கருவியுடன் வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனம், அல்லது தனி நபர்கள் என யார் வேண்டுமானாலும் இதனை உருவாக்கிக் கொண்டு வரவும்.
தீர்வுகள் வரவேற்பு
- ஆழ்துளைக் கிணறு தோண்டப்படும் சமயத்திலேயே அதற்கான தீர்வு வழங்கும் வழி, மற்றும் அதனை ஒரு பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்து கண்டுபிடிப்பைத் தொடங்கலாம்.
- டாவின்சி ரோபோடிக் ஆர்ம் டைப் எனப்படும் இயந்திர பாணியில் குழிக்குள் செலுத்தப்படும் இயந்திரம் குழந்தையை அடைந்தவுடன் கைகளை விரித்து குழந்தையை அப்படியே இழுத்து மேலே கொண்டு வருவதாகவும் இருக்கலாம்.
மேலே குறிப்பிட்டுள் டாவின்சி ரோபோ முறையை விளக்கிய சந்தோஷ் பாபு, உதாரணத்துக்கு ஒரு ப்ரான்கோஸ்கோப் கருவி எப்படி நுரையீரலுக்குள் செலுத்தப்பட்டு தேவையற்ற பொருட்களை நுரையீரலில் இருந்து நீக்கப்படுவது போல் நுணுக்கமானதாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
ரூ.5 லட்சம் பரிசுத் தொகை என்பது நான் தற்போது முகநூலில் அறிவித்திருக்கிறேன். இதுதொடர்பான ஆவணத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளேன். இப்போது இப்படி ஒரு கருவியைக் கண்டுபிடிக்கும் அவசியத்தில் நாம் இருக்கிறோம்," என்றார் சந்தோஷ் பாபு.
ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பே ரோபோ கைகள் போன்ற ஒரு கருவியை வடிவமைத்து வைத்திருக்கிறார். அக்கருவியும் சுஜித் மீட்புப்பணியில் கொண்டுவரப்பட்டு பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த கருவியின் அளவு, சுஜித் விழுந்த குழியின் வாயின் அளவை விட பெரிதாக இருந்ததால், அதனை குழிக்குள் செலுத்த இயலாமல் போனது. இருப்பினும் அரசின் உதவி இருந்திருந்தால் முன்பே அவரின் கருவியில் மாற்றங்களும், புதுமைகளும் செய்திருப்பார் என்று பலரும் கூறி இருந்தனர்.