ஓர் பொறியாளன் விவசாயி ஆன கதை!
”சொகுசானா வாழ்க்கை, உயர்ந்த சம்பளம் தராத நிம்மதி, விவசாயம் தருகிறது” - கடலூரை சேர்ந்த விவசாயி சிவக்குமார்.
தற்பொழுது விவசாயத்தின் தேவையையும் அதனுடைய நிலைமையையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்ததே. விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நாம் தற்பொழுது இயற்கை விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு பெற்று வருகிறோம். அதனால் ஆர்கானிக் பொருட்கள் மீது ஒரு மோகம் ஏற்பட்டுள்ளது என்றுக் கூட கூறலாம்.
மேலோட்டமாக இயற்கை விவசாயம் என்று நாம் அதிகம் பேச, இங்கு ஒருவர் அதன் முக்கியத்துவத்தை அறிந்து தன் வசதியான வாழ்கையை துறந்து இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலிருக்கும் கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் பொறியாளர் சிவக்குமார். சொகுசானா வாழ்க்கை, சிங்கப்பூரில் 2 லட்சத்திற்கு மேலான சம்பளம் என இருந்த சிவக்குமார் தற்பொழுது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
“நான் ஒரு விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். கல்லூரி படிப்பிற்கு பின் படிப்பிற்கு ஏற்ற வேலை என தடம் மாறியது; எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் குடும்பச் சூழலுக்காக்தான் சிங்கப்பூர் சென்றேன்,” என பேச துவங்குகிறார் சிவக்குமார்.
சேலம் கல்லூரியில் 2005 பொறியியல் பட்டபடிப்பை முடித்த சிவக்குமார், ஒரு வருடம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணிபுரிந்தார். அதன் பின் ஒரு சென்னை பொறியியல் கல்லூரியில் ஒரு வருடம் பேராசிரியராய் பணிப்புரிந்தார் ஆனால் கற்பித்தலில் பெரும் ஈடுபாடு இல்லாததால் அதை கைவிட்டார். சுயதொழில் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்த சிவக்குமார் வேறு வழியின்றி ஓர் கட்டாயத்தினால் அரை மனதுடன் 2008-ல் சிங்கபூர் சென்றார்.
“சிங்கப்பூரில் நல்ல சம்பளம் தான் ஆனால் அதுவும் ஓர் போராட்டமான வாழ்க்கை தான். நம்மால் அங்கு தாக்கு பிடிக்க முடிந்தால் கூட அந்த வாழ்க்கை நம்மை எங்கேயும் நகற்றிச் செல்லாது. முன்னேற்றம் என்றால் நிதி ரீதியாக மாற்றம் வருமே தவிரே வேறு எதுவும் இல்லை...”
தான் சிங்கப்பூரில் வாங்கிய சம்பளத் தொகை பெரியது என்றாலும் கூட அதற்கு ஏற்ப வாழ்வாதாரமும் அதிகம் என்கிறார் சிவக்குமார்.
அவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே இயற்கை வேலாண்மை மீது ஆர்வம் இருந்ததாக தெரிவிக்கிறார். இருப்பினும் அதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அப்பொழுது இல்லை என்கிறார். ஆனால் தற்பொழுது உள்ள சூழலில் விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் பற்றி வரும் செய்திகள் மற்றும் முக நூல் பதிவுகளை பார்த்த சிவக்குமாருக்கு இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் வலுப்பெற்றது.
“முகநூலில் நம்மாழ்வார் பற்றிய பதிவுகளை அதிகம் கவனித்தேன்; அதன் மூலம் நாம் உண்ணும் உணவு சிலவற்றில் நச்சுத்தன்மை உள்ளது என புரிந்தது. குறிப்பாக எங்கள் ஊர் விருதாச்சலம் அருகில் சில ஆலைகள் இயங்கி வருகிறது இதனால் நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாடு அதிக அளவில் ஏற்படுகிறது...”
இதனால் நீர் மட்டமும் மிக அழமாக சென்றுள்ளது, மேலும் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடும் மிக அதிகம். இதை எல்லாம் மனதில் கொண்டு நிலத்திற்கு தனது பங்களிப்பை ஏதேனும் அளிக்க வேண்டும் என விரும்பி விவசாயத்தில் ஈடுப்பட முடிவு செய்துள்ளார் சிவக்குமார்.
பெரும்பாலானோர் நல்ல படிப்பு மற்றும் சட்டையில் கறைப்படியாத பெருநிறுவன வேலை வேண்டும் என்று தான் ஆசைப்படுவர். அதைப் பொறுத்தவரை என் வீடு ஒன்றும் விதிவிலக்கல்ல, என் குடும்பமும் அப்படி தான் ஆசைப்பட்டது என்கிறார்.
“அதற்கேற்றவாறு நான் சம்பாதித்தும் விட்டேன், சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்யலாம் என இந்தியா திரும்பிவிட்டேன். வெளியில் இருந்து இயற்கை விவசாயம் பற்றி பேசி கொண்டிருந்தால் மட்டும் போதாது செயலில் வேண்டும்..” என்கிறார் அழுத்தமாக.
நாம் செய்வதை பார்த்துதான் மற்றவர்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்கிறார் சிவக்குமார். மேலும் ஆர்கானிக் பொருளை பெற்று சாப்பிடும் அளவு வசதியும் கிடையாது, நாமே இறங்கி விளைச்சல் செய்தால் மாட்டுமே இயற்கை உணவை உண்ண முடியும் என தெரிவிக்கிறார்.
ஆனால் நாம் சொல்வது போல் இயற்கை விவசாயம் எளிதல்ல அதுமட்டுமின்றி அனைத்து விவசாயிகளாலும் இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற முடியாது. குறிப்பாக இயற்கை விவசாயத்தில் ஆயிரம் சிக்கல்கள் உள்ளது, முதல் சிக்கல் நிலத்தின் வளம் குறைந்துவிட்டது என தெரிவிக்கிறார் சிவக்குமார். ஒரு நிலத்தை வளப்படுத்த குறைந்தது இரண்டு வருடம் வேண்டும் அது சராசரியான விவாசாயிகளால் காலம் கொடுத்து காத்திருக்க முடியாது. அவர்களுக்கு விளைச்சல் பொறுத்தே அவர்களின் வருமானம் அமையும் என்கிறார்.
“ஒரு மூட்டை நாத்து கம்பை அறுவடை செய்ய அறுவடை கூலி மட்டும் 1100 ரூபாய் ஆகிறது அதற்கு அரசாங்கம் நிர்ணயிக்கும் விலை 1500. ஓர் விவசாயிக்கு எப்படி இது போதுமானதாக அமையும். ஆனால் கடையில் ஒரு மூட்டை 4000 வரை விற்கப்படுகிறது..”
இதை மாற்றி அமைக்கும் முயற்சியிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் சிவக்குமார். இதை அவர் தனியாக செய்யவில்லை இதற்கான ஓர் குழுவில் இணைந்து தான் செயல்பட்டு வருகிறார்.
இயற்கை விவசாயம் மூலம் உங்கள் குடும்ப செலவுகளை பார்த்துக்கொள்ள முடிகிறதா?
“இல்லை, நாம் தான் நம் வாழ்க்கை முறையை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவையை மட்டும் பூர்த்தி செய்துக்கொள்ளலாம்; ஆடம்பர வாழ்க்கை கிடைக்காது,” என்கிறார்.
சிங்கப்பூரில் இருந்து வந்தவுடன் தன் குடும்பத்தால் அதை ஏற்க முடியவில்லை. மேலும் ஏழு வருடம் தான் சிங்கப்பூரில் உழைத்ததற்கான ஊதிய உயர்வு கிடைக்கும் நேரத்தில் விட்விட்டு வந்து விட்டார். ஒரு வேளை தான் அங்கு இருந்து அதிகம் சம்பாதித்து வந்தாலும் அந்த பணத்தை வைத்து தன்னால் என்ன செய்ய முடியும் என கேட்கிறார். பணம் இருந்தாலும் இயற்கை உணவை உண்ண முடியாமல் நச்சு பொருந்திய உணவை தான் உண்ண முடியும். தன் சந்ததியினர் இந்த ஊரில் தான் வாழப் போகின்றனர் அவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்டே தன் சொகுசு வாழ்கையை விட்டு விவசாயத்தை கையில் எடுத்துள்ளார்.
தற்பொழுது சிவக்குமார் தனது நிலத்தில் நெல், கரும்பு, வேர்கடலை, உளுந்து, கம்பு, திணை, முந்திரி மற்றும் பலாவை இயற்கை முறையில் விளைவிக்கிறார். காய்கறி விளைய சிறந்த மண் வளம் வேண்டும் என்பதால் அதை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருக்கிறார்.
“இயற்கை அங்காடி வைக்கும் அளவுக்கு என்னிடம் விளைச்சல் இல்லை. விளைவதை என் சுற்றுவட்டாரத்தில் விற்றுவிடுவேன். கூடிய விரைவில் இயற்கை அங்காடி வைக்கும் அளவு விளைச்சல் வரும் என நம்புகிறேன்,” என முடிக்கிறார் இந்த விவசாயி.