படபடவென முளைக்கும் 2 ரூபாய் ‘விதை பட்டாசு’
பட்டாசுகள் காற்று மாசைக் குறைக்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா?
பட்டாசுகள் காற்று மாசைக் குறைக்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை, நாங்கள் பசுமை பட்டாசுகளைப் பற்றி கூறவில்லை. ஏனெனில், அவைகளும் மாசுவை ஏற்படுத்தக்கூடியவை.
முதன் முறையாக தமிழக தோட்டக்கலைத் துறை விதைபந்து பட்டாசுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சங்கு சக்கரம், லட்சுமி வெடி, ராக்கெட் பட்டாசு போன்ற வடிவில் களிமண்ணால் தயாரிக்கப்பட்டுள்ள விதை வெடியினை காற்றில் தூக்கி எறிந்தாலே படபடவென பதினைந்தே நாட்களில் துளிர் விடத்தொடங்கிவிடும்.
விதைப் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்யலாம் என்று கடந்த வாரம் தான் டிபார்ட்மென்டில் பேசி முடிவு எடுக்கப் பட்டது. உடனடியாக, விதை பட்டாசுகள் உருவாக்கப்பட்டன. பட்டாசு வடிவிலான களிமண்ணில் பலவகை பூர்வீக மரங்களின் விதைப்பந்துகளை பதிக்கப்பட்டுள்ளன. வேம்பு, பூவரசு, ஆலமரம், புங்கை, அரசமரம் மற்றும் பருத்தி விதைப்பந்துகள் பட்டாசுகளில் பதிக்கப்பட்டுள்ளன. பூர்வீக மரங்களை நடவு செய்வதன் அவசியத்தை மக்களுக்கு புரிய வைப்பதே விதை பந்து பட்டாசுகளை விற்பனை செய்வதின் நோக்கமாகும்.
சுமார் 5,000 விதைப் பட்டாசுகளை விற்பனை செய்ய தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது. ஒரு பட்டாசை உருவாக்க ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகின்றது. தற்காலிகமாக விதை பட்டாசுகள் கைகளாலே தயாரிக்கப்படுகின்றன. ஒருவேளை பட்டாசுகளின் தேவை அதிகரித்தால், விதைப் பட்டாசுகளை உருவாக்க அச்சுகளும் பயன்படுத்தப்படும். அதற்காக, பல்வேறு வகையான பட்டாசுகளின் அச்சுகளை தயார் நிலையிலே வைத்திருக்கிறோம்,” என்று தோட்டக்கலை இயக்குனர் என். சுப்பையன் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள திருவான்மியூர் மற்றும் அண்ணாநகரில் உள்ள தோட்டக்கலைத் துறையின் விற்பனை நிலையங்களிலும், மாதாவரம் மற்றும் செம்மொழி பூங்காவில் உள்ள தோட்டக்கலை அலுவலகங்களிலும், விதைப் பட்டாசுகள் பரிசு பெட்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு பெட்டியிலும் 10 பட்டாசுகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பட்டாசுக்குள்ளும் இரண்டு விதைப் பந்துகள் உள்ளன. ஒரு பட்டாசின் விலை வெறும் 2 ரூபாய் மட்டுமே.
“விதை பந்துகளில் வருடாந்திர பூச்செடிகளான கோழி கொண்டைப் பூ, சூரியகாந்தி, வாடாமல்லி, காய்கறி வகைகளில் வெண்டைக்காய், கோத்தவரங்காய், அவரைக்காய் செடிகளின் விதை கொண்டு விதை பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பட்டாசு பெட்டியிலும் குறைந்தது ஒரு வகையான பூக்கும் தாவரங்கள், காய்கறிகள் மற்றும் மரங்களின் விதைப் பந்துக்குள்ளிருக்கும். அனைத்து செடி, மரங்களுக்கும் குறைந்தளவிலான பராமரிப்பே போதுமானது.
“நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தண்ணீர் ஊற்றுவது மட்டுமே. விதைகள் 15 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கிவிடும்,” என்று இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்தார் தோட்டக்கலை அதிகாரி அவினாஷ்.
விதைப் பந்துகளை தயாரிக்க ரசாயனங்களோ அல்லது வண்ணங்களோ பயன்படுத்தவில்லை என்றும் கூறினார் அவினாஷ். களிமண், மணல் மற்றும் உரங்களின் கலவையை மட்டுமே பயன்படுத்தி பட்டாசுகளை உருவாக்கியுள்ளனர். இது போன்ற தனித்துவமான ஒன்றை தமிழகத் தோட்டக்கலைத் துறை செய்வது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு, விநாயக சதுர்த்திக்காக விதை விநாயகர் சிலைகளையும், நவராத்திரிக்கு விதை கிருஷ்ணர் சிலைகளையும் செய்தது.
அதேபோல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கும் அவர்கள் இதே போன்ற திட்டங்களைக் கொண்டுள்ளனர். புதுமையான முயற்சியின் மூலம், இந்த ஆண்டு 23,000 விதை பந்துகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது தமிழக தோட்டக்கலை துறை.
இந்த தீபாவளியில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பட்டாசுகளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதற்கு மாறாக விதைப்பந்து பட்டாசுகளை வாங்கிக் கொடுங்களேன்!
பட உதவி: http://www.newindianexpress.com