லேட்டா? லேட்டஸ்டா? தேர்தலில் தான் தெரியும்- ரஜினி அரசியல் வருகைக்கு பிரபலங்கள் ரியாக்ஷன்!
ரஜினி அரசியல் வருகைக்கு பிரபலங்கள் ரியாக்ஷன் இதோ...
ரஜினியின் அரசியல் என்ட்ரி தான் இன்றைய ஹாட் நியூஸ். நீண்ட காலமாக அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி வந்தவர், மக்களிடையே எழுச்சி வந்ததும் அரசியலுக்குள் நுழைவேன் எனத் தெரிவித்திருந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினி கூறியுள்ள நிலையில், அவரது அரசியல் நிலைபாடு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
”என் இனிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்; உங்கள் உடல்நலம் முக்கியம்!” ரஜினிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
”அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமையலாம்," என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
பா.ஜ.கவின் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற கேள்வி முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ரஜினி- சசிகலா இடையேதான் போட்டி நிலவும், பாஜக குழப்பமான நிலைக்குச் செல்லும்,” என்று தெரிவித்துள்ளார்.
”ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பு இல்லை. ஊழல் என ரஜினி கூறுவது திமுகவை தான். கட்சி ஆரம்பிப்பது அவரவர் உரிமை,” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன்,
“ஆன்மிகத்திற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆன்மிகம் ஜாதி, மதத்துடன் தொடர்புடையது. ஆன்மிகம் வேறு அரசியல் வேறு; இரண்டையும் ஒன்றிணைப்பது குழப்பமான முயற்சி. ரஜினியின் திட்டம் என்ன என தெரியவில்லை,” எனக் கூறியுள்ளார்.
”தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது சரியான நேரம் இது,” என ஆடிட்டர் குருமூர்த்தி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறுகையில்,
“நாட்டின் குடிமகன் என்ற முறையில் கட்சி துவங்குவது, அவரவர் உரிமை. இதை தவறு என சொல்லக்கூடாது. அவர் நடித்த ஸ்டண்ட் படங்களுக்கு உள்ள வரவேற்பு, தெய்வீக படங்களுக்கு இல்லை. தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகளில் இல்லாத புதிய கொள்கையாக அவர் எதைச் சொல்லப் போகிறார் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். அரசியலில் நுழைந்திருப்பதை வரவேற்கிறேன்,” என்றார்.
நடிகை குஷ்பு, ரஜினியின் அரசியல் அறிவிப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில்,
“தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருத்தியாக அவர் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சேன், இப்போது அவர் அறிவிச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு, ரஜினி சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்திருக்கிறார்.
நடிகர் ஆனந்த்ராஜ், ”வெல்கம்! ரஜினி ரசிகர்களுக்கு அட்வான்ஸ் ஹெப்பி நியூ இயர்,” என்று வாழ்த்தியுள்ளார்.
”ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில்தான் தெரியும்,” என்று கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் - “இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்...” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - “Wow.. Thalaivaaaaa வா தலைவா...”
இயக்குநர் லிங்கு சாமி - ”புலி வருது .. புலி வருதுனு சொன்னாங்க .. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார்.”
இப்படி இன்றைய பொழுது சமூக ஊடகங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றியே இருந்தது.