ரூ.5281.94 கோடி மதிப்பில் ‘மெகா நீர் மின்சக்தி திட்டம்’ - எங்கு அமைகிறது தெரியுமா?
இந்தத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிஷ்ட்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது நீர் மின்சக்தி அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. செனாப் ஆற்றின் மீது 850 மெகாவாட் ‘ரேட்டல்’ நீர் மின்சக்தி திட்டத்தில் ரூ.5281.94 கோடி முதலீடு செய்வதற்கான இந்தத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில மின்சார மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நீர் மின் கழகம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக முறையே 51% மற்றும் 49% பங்களிப்புடன் புதிய கூட்டு நிறுவனம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக நிறுவப்படும் கூட்ட நிறுவனத்தில் முதலீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,
கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.776.44 கோடி நிதியுதவியை இந்திய அரசு வழங்கவுள்ளது. இதனிடையே தேசிய நீர் மின் கழகம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.808.14 கோடியை முதலீடு செய்யும்.
இந்தத் திட்டம் அறுபது மாதங்களில் நிறுவப்படும் என்று தெரிகிறது. இந்தத் திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மின் தொகுப்பை சமன் செய்வதிலும், விநியோக நிலைமையை சீர்படுத்துவதிலும் உதவும்.
மேலும் இந்தத் திட்டம் அமைவதால் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கட்டுமான நடவடிக்கைகளின் மூலம் 4,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.
இதன் மூலம் ரூ.5289 கோடி மதிப்பிலான இலவச மின்சாரமும், நீர் பயன்பாட்டுக் கட்டணமாக ரூ.9581 கோடியும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு கிடைக்கும்.
ஜம்மு காஷ்மீரில் முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மெகா நீர் மின்சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சகம் அளித்துள்ளது.