முதல் அலையில் சேமித்து; தற்போது தெருவோர மக்களின் பசிதீர்க்கும் தம்பதி!
உணவுக்கடையில் கிடைத்த வருமானத்தில் உதவி!
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் 56 வயதான கல்யாணசுந்தரம். தெருவோர உணவுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். தற்போதுள்ள கொரோனா லாக் டவுனால் அவரின் கடை திறக்கப்படவில்லை என்றாலும், தன்னிடம் இருந்து பணத்தை கொண்டு தெருவோரத்தில் பசியால் தவித்து வருபவர்களுக்கு இலவச உணவை வழங்கி வருகிறார்.
இதற்காக கடந்த ஆண்டே பணம் சேமிக்கத் தொடங்கியிருக்கிறார் கல்யாணசுந்தரம். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போதே இரண்டாம் அலை எழும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது அலை பற்றிய பேச்சு வெளிவந்ததில் இருந்து கல்யாணசுந்தரம், தனது கணக்கில் சிறிய அளவு பணத்தை டெபாசிட் செய்யத் தொடங்கினார். இந்த ஆண்டு மே மாதத்திற்குள், அவர் கிட்டத்தட்ட, 80,000 ரூபாய் சேமித்திருக்கிறார். இதையடுத்து,
லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும், வங்கியில் இருந்து பணத்தை திரும்பப் பெற்று அதைக்கொண்டு பசித்தவர்களுக்கு தினமும் இரண்டு முறை உணவளித்து வருகிறார். கொரோனா முதல் அலையின்போதும் இதுபோல் தன்னால் முடித்தவர்களுக்கு உணவு கொடுத்து சேவையாற்றினார்.
இப்போது 10 நாட்களாக, மேற்கு மம்பலத்தில் உள்ள பக்தவத்சலம் தெருவில் வீடற்றவர்களுக்கும் பசியுடனும் இலவச மதிய உணவு மற்றும் இரவு உணவை வழங்கி வருகிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர்,
“எனது மனைவி பத்மாவதியுடன் சேர்ந்து நான் தினமும் உணவு தயாரிக்க எனது நாளை ஆரம்பிக்கிறேன். மதிய உணவிற்கு, சாம்பார் சாதம் அல்லது புளியோதரை சாதம் போன்ற பலவகையான சாதங்களை நாங்கள் தயார் செய்கிறோம். ”
இரவு உணவிற்கு பொங்கல், உப்மா அல்லது காய்கறி உப்மா ஆகியவை தயார் செய்துகொடுக்கிறோம், என்று கூறும் கல்யாணசுந்தரம் உணவு வழங்க ஆரம்பித்த முதல் நாளில் சுமார் 70 பேர் அவரிடம் உணவு வாங்கி அருந்தியுள்ளனர். போகப்போக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
கல்யாணசுந்தரத்தின் பூர்வீகம் சென்னை கிடையாது. ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், கல்யாணசுந்தரம் குடும்பம் மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு வாழ்க்கை தேடி வந்துள்ளது.
ஆரம்பத்தில், அவர் தான் சமைத்த உணவை வழங்குவதற்காக உணவுப் பொட்டலங்களைக் கட்டிக்கொண்டு வீதிகளில் சென்று விற்று வந்தார். பின்னர் படிப்படியாக, அவர் ஒரு சிறிய தள்ளுவண்டி ஒன்றை வாங்கி, அந்த பகுதியில் சுண்டல், வடை, பஜ்ஜிகள் மற்றும் சமோசாக்களை விற்பனை செய்யத் தொடங்கினார். அப்படி தொடங்கியவர், தற்போது சென்னை தெருக்களில் பசியோடு இருப்பவர்களுக்கு உதவி வருகிறார்.
”ஊரடங்கின் போது ஏழைகளுக்கு உதவும் வகையில் நிறைய விஷயங்களைச் செய்கிறவர்கள் பலர் உள்ளனர். ஆனால் என்னால் முடிந்தது இது தான். நான் செய்வதை பார்த்த பிறகு, சில நலம் விரும்பிகளும் தங்களால் முடிந்த உதவியை செய்யத் தொடங்கியுள்ளனர். எனது சேமிப்பு தீரும் வரை தொடர்ந்து செய்வேன். இந்த நகரமும் அதன் மக்களும் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார்கள். நான் ஒருவிதத்தில் சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய நேரம் இது," என்று நெகிழ்கிறார் கல்யாணசுந்தரம்.