சிறுதுளி பெரு வெள்ளம்: இளைஞர்கள் பணத்தை முதலீடு செய்து சேமிக்க வழிகாட்டும் ஆப்!
தாய் நிறுவனமான டிரக்கர் அண்டு குரோவ் கீழ் இயங்கும் சென்னையைச்சேர்ந்த குறும் முதலீடு செயலி, இளம் தலைமுறைக்கு சேமிப்பின் அருமையை சொல்லித்தருகிறது.
இரவு நேரத்தில் நீங்கள் ஸ்விக்கியில் உணவுப்பொருட்களை ஆர்டர் செய்யும் பழக்கம், பசியை போக்குவதோடு, உங்களுக்கு கொஞ்சம் வருமானத்தையும் தேடித்தந்தால் எப்படி இருக்கும்? அதே போல அமேசானில் ஏதேனும் ஆர்டர் செய்யும் போதும், மியூச்சுவல் பண்டிலும் முதலீடு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்?
எல்லாவற்றையும் விட சேமிப்பது ஒரு தவிர்க்க இயலாத பழக்கமாக மாறி மாதந்தோறும் முதலீடு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்?
செலவு செய்யும் ஒவ்வொரு முறையும் மக்கள் சேமிக்க வழி செய்யும் நோக்கத்துடன் 2020ல் விக்ரம் ஹிராவத் செயலில் இறங்கினார்.
“நான் ஆய்வில் ஈடுபட்ட போது, பெரும்பாலானோருக்கு சேமிக்கும் பழக்கம் இருக்கவில்லை எனத்தெரிந்தது. முதலீடு என்பது வேறு வகையான செயலாகும். மக்கள் எதைச் செய்தாலும், சேமித்து கொஞ்சம் முதலீடு செய்ய உதவ விரும்பினேன்,” என்கிறார் விக்ரம்.
இதன் பயனாக உருவானது தான், ரவுண்டப்ஸ் (Roundups) எனும் குறும் முதலீடு செயலியாகும். இது பயனாளிகள் செலவு செய்யும் ஒவ்வொரு முறையும் சிறு தொகையை முதலீடு செய்ய வைக்கிறது.
இந்த ஆப் வடிவிலான மேடை, பயனர்கள் செலவிடும் தொகையை நூறுகளில் முழுமையாக்கி, எஞ்சிய தொகையை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறது. அதாவது அமேசானில் ரூ.180 க்கு புத்தகம் வாங்கினால், ரூ.200 என முழுமையாக்கி, எஞ்சிய 20 ரூபாயை முதலீடு செய்கிறது.
ஒவ்வொரு முறை ரவுண்டப்ஸ் செயலியில் மக்கள் செலவு செய்யும் போதும், அவர்கள் கொஞ்சம் முதலீடும் செய்கின்றனர். இது மக்களின் குறிப்பாக இளைஞர்களின் சேமிப்பு பழக்கத்தை மாற்றும் என விக்ரம் கருதுகிறார்.
பணம் என்பது வாங்குவதற்கானது மட்டும் அல்ல, மேலும் பணத்தை வளர்ப்பதற்கான சாதனமும் என்பதை உணர்வார்கள் என்கிறார். அண்மையில் தான் அறிமுகமான ரவுண்டப்ஸ் ஏற்கனவே 2,000 முறைக்கு மேல் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் மற்றும் நிறுவன சி.டி.ஓ அதிஷே சோர்டியா மற்றும் ஆலோசகரான பாபு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது மைய சேவையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
சிறு துளி பெருவெள்ளம்
சேமிப்பு மற்றும் தனிநபர் நிதி மிகுந்த பழக்க வழக்க மாற்றத்தை கோருவது. மக்கள் சேமிப்பில் ஈடுபட்டால் கூட, இந்திய மனநிலை, வைப்பு நிதி அல்லது சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யும் பழக்கம் கொண்டிருக்கிறது.
"முதலீடு செய்ய உதவும் நிதி செயலிகள் மியூச்சுவல் பண்ட்கள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்து பலன் அடைய வழி செய்கின்றன. இவை எல்லாம் நிதி ஒழுக்கம் கொண்ட, எஸ்.ஐ.பி அல்லது மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய பணம் சேமிப்பவர்களுக்கானவை.”
ஆனால் ரவுண்டப்ஸ் செயலி வேறுபட்டது. இது மக்களின் பணம் தொடர்பான பழக்கத்தை மாற்ற முயல்கிறது. பணி வாழ்க்கையை துவங்கியிருக்கும் இளைஞர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. மிச்சமாகும் தொகையை முதலீடு செய்வது, சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வது போல அல்லாமல், எதையும் இழப்பதாக உணராமலேயே சேமிக்க வழி செய்கிறது.
ஆனால் சிறுக சிறுக சேரும் போது, நீண்ட கால நோக்கில் கணிசமான தொகையை சேமித்து முதலீடு செய்து பலன் பெறலாம்.
இந்த செயலியை பயன்படுத்தத் துவங்குவது எளிதானது. நிதி செயலிகளுக்கான வழக்கமான கேஒய்சி நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். வங்கி பரிவர்த்தனை தகவல்களை அணுக அனுமதி அளிக்க வேண்டும். பின்னர் இந்த செயலி, மிச்சமாகும் சில்லறை தொகையை பிடித்தம் செய்து முதலீட்டிற்கான தொகையை உருவாக்குகிறது.
தற்போது இந்த ஆப் ஒரு மியூச்சுவல் பண்ட் முதலீட்டை மட்டுமே வழங்குகிறது. விரைவில் மேலும் பல பண்ட்களை சேர்க்க இருப்பதாக விக்ரம் கூறுகிறார். மியூச்சுவல் பண்ட் நிறுவனத்திடம் இருந்து கமிஷனாக வருமானம் பெறுகிறது. சிறிது காலத்திற்கு பின், நிதி தொடர்பான கல்வி வழிகாட்டுதல், முதலீடு ஆலோசனைக்கான சந்தா சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
பாட் ஆலோசகர் சேவையையும் நிறுவனம் உருவாக்க உள்ளது. நிறுவனம், 2022 ஜனவரி வரை தாக்குப்பிடிப்பதற்கான நிதி ஆதாரத்தை கொண்டுள்ளதாகவும் அதன் பிறகு நிறுவனம், முதலீட்டாளர்களை அணுகும் என்றும் தெரிவிக்கிறது. இணை நிறுவனர்களில் ஒருவரான அதிஷே, சி.இ.ஓவாக இருக்கும் டிஜிட்டல் ஆலோசனை நிறுவனமான டூடுல்புளுவில் இந்த ஸ்டார்ட் அப் இன்குபேட் செய்யப்பட்டது.
இந்த பிரிவில், இந்தியாவில் ஸ்பென்னி உள்ளிட்ட செயலி போட்டியாக உள்ளது. Zerodha, Upstox, Groww, Paytm Money ஆகிய செயலிகளும் தாமாக முதலீடு செய்ய உதவுகின்றன.
ஆங்கிலத்தில்: அபராஜிதா சக்ஸேனா | தமிழில்: சைபர் சிம்மன்