10+ ஆண்டுகள் பணியாற்றிய 100 ஊழியர்களுக்கு கார் பரிசு; அசத்திய சென்னை ஐ.டி. நிறுவனம்!
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, தங்களிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றிய 100 ஊழியர்களுக்கு கார் பரிசளித்து கெளரவித்துள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, தங்களிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றிய 100 ஊழியர்களுக்கு கார் பரிசளித்து கெளரவித்துள்ளது.
கொரோனா காரணமாக பல்வேறு ஐ.டி. நிறுவனங்களும் ஆட்குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன. குறிப்பாக பிரெஷ்ஷர்களுக்கு வேலை கிடைப்பது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது. என்ன தான் அனுபவமிக்கவராக இருந்தாலும் குறைந்த ஊதியத்திற்கே வேலை கிடைக்கிறது. இப்படி பல்வேறு இக்கட்டான சூழ்நிலையிலும் சில நிறுவனங்கள் மட்டுமே தங்களிடம் உண்மையாக பணியாற்றும் ஊழியர்களை போற்றி, பாதுகாத்து வருகின்றன.
சமீபத்தில் தனது ஊழியர்களின் விசுவாசத்திற்கு பரிசாக பிரபல சென்னை சாஸ் நிறுவனம் ஒன்று 5 ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்தது. உலகளாவிய மென்பொருள் சேவை நிறுவனமான கிஸ்ஃப்ளோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ், தனது ஊழியர்களுக்கு சுமார் ஒரு கோடி மதிப்பிலான BMW 530d கார்களை பரிசாக வழங்கி அசத்தினார்.
கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடன் விசுவாசத்துடன் பணியாற்றிவரும் 5 நபர்களுக்கு அவரது குடும்பத்தினர் முன்பு வைத்து இந்த கெளரவிப்பு நடைபெற்றது.
தற்போது சென்னையைச் சேர்ந்த மற்றொரு ஐ.டி.நிறுவனம் ஒரு படி மேலே போய், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய 100 ஊழியர்களுக்கு கார் பரிசளித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் Ideas 2 IT. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 2009ம் ஆண்டு முதல் தனது ஊழியர்களை ஊக்குவிக்க பல்வேறு வித்தியாசமான பரிசுகளை வழங்கி வருகிறது. ஐ-போன், தங்க நாணயம் என பல பரிசுப் பொருட்களை வழங்கி ஊழியர்களின் உண்மையான உழைப்பையும், விசுவாசத்தையும் பாராட்டியுள்ளது.
இந்த ஆண்டு தன்னிடம் விசுவாசமாக உழைத்து வரும் மூத்த பணியாளர்களைக் கவுரவிக்க விரும்பிய ஐ.டி. நிறுவனம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களிடம் அர்பணிப்புடனும், கடுமையாகவும் உழைத்து வரும் 100 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு காரை பரிசாக வழங்கி கெளரவித்துள்ளது.
இதுகுறித்து ஐடியாஸ்2ஐடி (Ideas 2 IT) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஹெட் ஹரி கூறுகையில்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களிடம் பணிபுரியும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்கினோம். 500 பணியாளர்களின் பலம் எங்களிடம் உள்ளது. இதன் மூலம் நாங்கள் பெற்ற லாபத்தின் சிறுபங்கை ஊழியர்களிடம் திருப்பித் தருவதே எங்கள் நோக்கம்,” எனத் தெரிவித்துள்ளார்.
நிறுவனம் அதன் லட்சியத்தை எட்டித்தொடும் போது அதில் கிடைக்கும் லாபத்தை ஊழியர்களுடன் பங்கிட்டுக் கொள்வோம் என எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வெற்றி கொண்டாட்டத்தின் முதல் படியாகவே 100 ஊழியர்களுக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுபோல் அடுத்தடுத்து பல முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஐடியாஸ்2ஐடி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐடியாஸ்2ஐடி நிறுவனர் மற்றும் தலைவர் முரளி விவேகானந்தன் கூறுகையில்,
“ஊழியர்கள் நிறுவனத்தை மேம்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர், நிறுவனம் அவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கவில்லை, அவர்கள் தங்கள் கடின உழைப்பால் அதனை சம்பாதித்துள்ளனர்,” என்கிறார்.
தங்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம், என மகிழ்ச்சி தெரிவிக்கும் ஊழியர்கள், ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தில் பணியாற்றுவதை பெருமையாக உணர்வதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஐடியாஸ்2ஐடி நிறுவன ஊழியர்களில் கார் பரிசு பெற்ற நபரான பிரசாத் கூறுகையில்,
"நிறுவனத்திடம் இருந்து பரிசுகள் பெறுவது எப்போதுமே மகிழ்ச்சியானது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தங்க நாணயங்கள், ஐ-போன்கள் போன்ற பரிசுகளுடன் நிறுவனம் அதன் மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த முறை கார் வழங்கப்பட்டது எங்களுக்கு மிகவும் பெரிய விஷயம்," என்கிறார்.
ஒரு மாச சம்பளத்தை போனஸாக கொடுத்தாலே பெரிய விஷயம் என்ற காலம் மாறி, தற்போது உண்மையாக உழைக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் ஐடியாஸ்2ஐடி போன்ற நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.