சென்னைவாசிகளே இங்கே வந்து ருசித்துக் கொண்டே ‘புட் கடலை’
குழந்தைகள், கர்பிணிகள் முதல் பெரியோர்கள் வரை எல்லாருக்கும் ஆரோக்கியத்தை அள்ளித் தரும், நம் பாரம்பரிய வேர்கடலையின் மகிமையை மக்களிடையே கொண்டு செல்ல அறிமுகமாகியிருக்கும் ப்ராண்ட் தான் 'Put kadalai'
பொழுது போகவில்லை என்றால் தெரியாத இருவர் கூட சேர்ந்து உரையாடி கடலை போடுவது என்பது இங்கே பல ஆண்டுகளாக இருந்துவரும் பழக்கம். அதென்ன கடலை போடுவது? சும்மா உட்கார்ந்து அரட்டை அடிப்பதைக் கூட அப்படிச் சொல்லும் வழக்கம் சிறிசுகளிடையே பிரபலம். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில் கடலை போடுவது கூட சாட்டிங் வழியே மாறிவிட்டது. நேரே சந்தித்து பேசி, மகிழும் காலம் மெல்ல மறைந்து வருகிறது. ஆனால் கடலை சாப்பிட்டுக்கொண்டே கடலை போட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு புதிய அனுபவத்தை வழங்க வந்துள்ளது ஒரு கஃபே.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் பல்லேடியம் மாலின் உணவு விடுதியில், 'Put Kadalai' கஃபேவை பிக்பாஸ் புகழ் தர்ஷன் திறந்து வைத்தார். கோயம்புத்தூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் புட்கடலை கஃபே, சென்னையில் தனது முதல் கிளையை தொடங்கியுள்ளது.
வாரத்தின் 7 நாட்களிலும், காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த கஃபே, வேர்க்கடலையில் நிபுணத்துவம் பெற்றது. மேலும், பல சுவையான மற்றும் தனித்துவமான வகைகளில் வேர்க்கடலை உணவுகளை தயாரித்து விற்பனை செய்கிறது. இதில் பிக் பாப், பன்னி சோவ், வேர்க்கடலை வெண்ணெய், ஜெல்லி சாண்ட்விச்கள், வேர்க்கடலை வெண்ணெய் ஷேக்ஸ் மற்றும் இயற்கை ஐஸ் கிரீம்கள் ஆகியவை அடங்கும்.
’புட் கடலை’ எனும் ப்ராண்டை நிறுவிய ஹரிஷ், செந்தில் மற்றும் நிஷா, 6 மாதங்களுக்கு முன்பு கோவையில் இந்த புதிய வர்த்தகத்தை தொடங்கினர். இது பற்றி மேலும் பேசிய ‘புட் கடலை’ இணை நிறுவனர் நிஷா,
“நம் தென்னிந்தியர்களின் உணவில் முக்கியமான மற்றும் ஆரோக்கியமான பண்டமாக உள்ள வேர்கடலையை இக்காலத்து இளைஞர்களுக்கு புதிய வடிவில் வழங்கிடும் எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. இதன் முதல் படியாக ‘Put kadalai' என்ற பெயரில் கஃபே ஒன்றை கோவையில் தொடங்கினோம். இங்கு 30க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான, சுவையான உணவுவகைகளை தயாரித்து அளித்தோம். இந்த வகை ஸ்னாக்குகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை உடனடியாகப் பெற்றது,” என்றார்.
பாரம்பரிய வழியில் வேர்கடலை உற்பத்தி செய்யும் குடும்பத்தில் வந்த நிஷா மற்றும் ஹரீஷ் தம்பதியினர், கடலையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை இந்த தலைமுறைக்கு எடுத்தச் செல்ல முடிவெடுத்து தொடங்கிய இந்த ப்ராண்டை நாடெங்கும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கோவை இளம் தொழில்முனைவோர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் சி.கே.குமாரவேல், இவர்களுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தார். அதன் அடுத்தக்கட்டமே, இந்த சென்னையில் தொடங்கப்பட்ட ‘புட் கடலை’-ன் கிளை கஃபே. இது பற்றி பேசிய குமாரவேல்,
“புதிய உணவுவகைகள் மற்றும் புதிய அனுபவத்தை மக்கள் தேடுவதால் இந்த கஃபேவிற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக உணர்ந்தேன். அதனால் இதை ஃப்ரான்சைஸ் மாடலில் கொண்டு சென்று பல நூறு கிளைகளை நாடெங்கும் தொடங்கி ‘புட் கடலை’ எனும் ப்ராண்டை பெரிய அளவில் கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, பிக் பாஸ் நட்சத்திரம் தர்ஷனுடன் வேடிக்கையான உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய தர்ஷன்,
“புட் கடலை என்ற பெயரே நன்றாக இருப்பதாகவும், இந்த கடலை மரபு மாற்றம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுவதால் உடலுக்கு மிகவும் நல்லது, என்றார்.
சென்னையில் முதல் கிளையை தொடங்கியுள்ள ‘புட் கடலை’ அடுத்து பல இடங்களில் ஃப்ரான்சைஸ் முறையில் கஃபேக்கள் திறக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 15 லட்ச ரூபாய் முதலீட்டில் இருந்து இந்த ப்ராண்டை ப்ரான்சைஸ் முறையில் எடுத்து நடத்தமுடியும் என நிஷா தெரிவித்தார்.
நீங்களும் தொழில்முனைவர் ஆகனும்னு விருப்பமா? இந்த நிறுவனர்களை சந்தித்து கொஞ்சம் கடலை போடுங்க... தொழில தொடங்குங்க...