5 சிறந்த ஊழியர்களுக்கு BMW கார் பரிசு; சர்வதேச அளவில் விரிவாக்கம்: Kissflow சுரேஷ் சம்பந்தம் அறிவிப்பு!
சென்னையின் முக்கிய சாஸ் நிறுவனமான kissflow தனது 10 ஆண்டுகள் நிறைவையும் வளர்ச்சியையும் குறிக்கும் வகையில், தனது சிறந்த 5 ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான BMW காரை பரிசாக வழங்கியுள்ளது.
vasu karthikeyan
Saturday April 09, 2022 , 3 min Read
சென்னையின் முக்கியமான சாஸ் நிறுவனம் ‘Kissflow'. இந்த நிறுவனம் தன்னுடைய முக்கியமான ஐந்து பணியாளர்களுக்கு பிஎம்டபிள்யூ காரினை பரிசாக வழங்கி இருக்கிறது. இந்த காரின் மதிப்பு ஒரு கோடி என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் தெரிவித்தார்.
இதற்கான நிகழ்ச்சி ஓஎம்.ஆர் சாலையில் உள்ள கிஸ்ஃப்ளோ அலுவலகத்தில் நடந்தது.
நேற்று காலை வரைக்கும் பணியாளர்களுக்கு யாருக்குமே என்ன அறிவிப்பு என்பது தெரியாது. மதியம் முக்கியமான நபர்களுக்கு லஞ்ச் சாப்பிடுவதற்கான அழைப்பு என்பது மட்டுமே அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் இந்த விஷயத்தை நிறுவனர் சுரேஷ் அனைவருக்கும் தெரிவித்திக்கிறார்.
BMW கார் பரிசு பெற்ற 5 ஊழியர்கள் அனைவரும் சுரேஷ் உடன் ஆரம்பகாலத்தில் இருந்தே ஒன்றாக இருந்திருக்து கிஸ்ஃப்ளோ-வின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
”நிறுவனம் கஷ்டமான சூழலில் இருந்த போது இவர்கள் மட்டும் இல்லை என்றால் இன்று கிஸ்ஃப்ளோ என்னும் நிறுவனம் இருந்திருக்காது,” என சுரேஷ் சம்பந்தம் தெரிவித்தார்.
தினேஷ் வரதராஜன், Chief product officer, கௌசிக்ராம் – Director – Product management, விவேக் – Director – Engineering, ஆதி ராமசந்தின் Director – Engineering மற்றும் பிரசன்னா ராஜேந்திரன் – Vice president உள்ளிட்ட ஐவருக்கும் அவர்களின் குடும்பத்தின் முன்னிலையில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இது அவர்களுக்கான மிகச் சிறிய அன்பளிப்பு மட்டுமே என சுரேஷ் பணியாளர்களிடம் பேசினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிரத்யேகமாக உரையாடினார் சுரேஷ் சம்பந்தம். அதில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் சம்பந்தம், கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளை பகிர்ந்து கொண்டார்.
”கிஸ்ஃப்ளோ தொடங்கப்பட்ட சுமார் 10 ஆண்டுகள் முடியப்போகிறது. இந்த காலகட்டத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறோம். பணியாளர்கள் இல்லை என்றால் இந்த நிலையை நாங்கள் அடைந்திருக்க முடியாது. இதனை விட முக்கியமான விஷயம் கிஸ்ஃப்ளோ சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்கிடம் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டி இருந்திருந்தது. தற்போது அந்த பங்குகளை நிறுவனமே மீண்டும் வாங்கி இருக்கிறது,” என்றார்.
முதலீட்டாளர்கள் எவ்வளவு லாபத்துடன் வெளியேறினார்கள் என்பதை துல்லியமாக அறிவிக்க முடியாது என தெரிவித்த சுரேஷ், 5 முதல் 10 மடங்கு லாபத்துடன் வெளியேறி இருப்பார்கள் என்பதை மட்டும் பகிர்ந்தார்.
தற்போது நிறுவனத்தில் வெளி முதலீட்டாளர்கள் யாரும் இல்லை. நிறுவனரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பங்குகள் உள்ளன. தவிர பணியாளர்களுக்கு ESOP உள்ளன. இதுதவிர மற்ற முதலீட்டாளர்கள் யாரும் இல்லை என்னும் நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.
“கிஸ்ஃப்ளோவின் வாடிக்கையாளர்களில் 8% மட்டுமே இந்தியாவில் இருக்கிறார்கள், மீதமுள்ள 92 சதவீத வாடிக்கையாளர்கள் இந்தியாவுக்கு வெளியில், பல நாடுகளில் பரந்து விரிந்து இருக்கிறார்கள். சுமார் 160 நாடுகளில் எங்களுக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்,” என்றார்.
மேலும், Lowcode/Nocode பிரிவுகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். ஆனால், இதுவரை இந்தியாவில் இருந்து மட்டுமே கவனம் செலுத்திய நிலையில், சர்வதேச விரிவாக்கமும் செய்ய இருக்கிறோம்.
“துபாய், லத்தின் அமெரிக்கா, பிலிபைன்ஸ், தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட இடங்களில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். இதற்காக 10 மில்லியன் டாலர் அளவுக்கு விரிவாக்கப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறோம்,” என்றார் சுரேஷ்.
பணியாளர்கள் குறித்து பேசியபோது சில ஆண்டுகளுக்கு முன்பு குறைவான பணியாளர்களுடன் செயல்பட்டுவந்தோம், தற்போது 430-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். மேலும் தொடர்ந்து பணியாளர் தேர்வு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
வீட்டில் இருந்து பணி குறித்து பேசிய போது, ஒரு நிறுவனத்தில் 5 சதவீத பணியாளர்கள் எங்கிருந்தாலும் பணியாற்றுவார்காள். 15 சதவீத பணியாளர்கள் எந்த சூழல் இருந்தாலும் சரியாக செயல்பட மாட்டார்கள். ஆனால், 80 சதவீத பணியாளர்களுக்கு பணிச்சூழல் இருந்தால் சிறப்பாகச் செயல்படுவார்கள். அவர்களுக்கு ஆலோசனை, உதவி, நெட்வோர்க் என பணிச்சூழல் தேவைப்படும். அதனால் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும்போதுதான் பெரும்பாலான பணியாளர்களுக்கு ஏதுவாக இருக்கும் என சுரேஷ் தெரிவித்தார்.
நிறுவனத்தின் வருமானம் மற்றும் சந்தை மதிப்பு குறித்தான கேள்விகளுக்கு முதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கும் இந்தச் சூழலில் சந்தை மதிப்பு குறித்து பேசுவது நன்றாக இருக்காது. மேலும்,
“யூனிகார்ன் அந்தஸ்த்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நாங்கள் நிறுவனத்தை மதிப்பீடு செய்வதற்கு எங்களுக்கென பிரத்யேக காரணிகள் வைத்திருக்கிறோம். வருமானம் குறித்த கேள்விக்கு இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு பதில் அளிக்கிறேன்,” என சுரேஷ் கூறினார்.
நிறுவனத்தின் ஊழியர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதே கிஸ்ஃப்ளோ-வின் முக்கியத் தத்துவம் என்பதால், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும், சூழலும் எப்போதும் உருவாக்கித் தந்ததே தங்களின் நீண்ட கால உழைப்புக்கு ஊக்கமாக அமைந்ததாக கார் பரிசுப் பெற்ற ஐவரும் தெரிவித்தனர்.