தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும் ஐஓடி சாதனம் தயாரிக்கும் சென்னை நிறுவனம்!
மைக்ரோபயாலஜிஸ்ட் ரச்னா தொடங்கிய MicroGo, நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் கைகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க உதவும் சாதனத்தை நிறுவியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மைக்ரோகோ (MicroGo) ஸ்டார்ட் அப் கைகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க உதவும் ஐஓடி சார்ந்த சாதனத்தை வழங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இந்த சாதனங்கள் அதிகளவில் நிறுவப்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் பல நகரங்களில் மார்ச் 2-ம் தேதி முதல் கிட்டத்தட்ட 180 GOassure சாதனங்கள் நிறுவியுள்ளதாக இதன் நிறுவனர் ரச்னா தேவ் தெரிவிக்கிறார்.
GOassure முதலில் சென்னை விமான நிலையத்தில் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பரோடா, காலிகட், ஹைதராபாத், கௌஹாத்தி, புனே, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்களிலும் நிறுவப்பட்டன. அத்துடன் தாஜ் க்ரூப், பிக்பாஸ்கெட், டாடா கேப்பிடல், கோவிட்-19 ஆய்வகங்கள், அப்போலோ மருத்துவமனைகள், இந்தியன் ஆயில், Waycool, ஐஆர்சிடிசி போன்ற மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
மைக்ரோகோ நிறுவனர் ரச்னா மைக்ரோபயாலஜிட். இவர் கைகள் சுகாதாரமாக பராமரிப்பது குறித்து கூறும்போது,
“சுகாதாரத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் முதலில் சுத்தமாக வைத்திருக்கவேண்டியது தங்களது கைகளைத்தான். தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் கைகள் சுத்தமாக இருந்தால் பெரும்பாலான தொற்று நோய்களை கட்டுப்படுத்திவிடமுடியும்,” என்றார்.
பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலிடமிருந்து (BIRAC) மைக்ரோகோ நிறுவனம் கோவிட்-19 தீர்வுகளை உருவாக்குவதற்காக சமீபத்தில் நிதி பெற்றுள்ளது.
ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் ரச்னா தேவ் தனது ஸ்டார்ட் அப் குறித்தும் நிறுவனத்தின் அணுகுமுறை குறித்தும் தயாரிப்புகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
BARC முதல் MicroGo வரை…
ரச்னா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மைக்ரோபயாலஜியில் பிஎச்டி முடித்த பிறகு இந்தியா திரும்பினார். 2008-ம் ஆண்டு பாபா அடாமிக் ரிசர்ச் செண்டரில் விஞ்ஞானியாக சேர்ந்தார். 2016-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றிய பிறகு ஆர்&டி சார்ந்த பயோடெக் தயாரிப்பு ஸ்டார்ட் அப் தொடங்குவதற்காக பணியை விட்டு விலகினார்.
அதே ஆண்டு இந்திய அரசாங்கம் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனவே வணிக முயற்சியைத் தொடங்க அதுவே சரியான நேரம் என்று தீர்மானித்த ரச்னா, தனது சேமிப்பில் இருந்து 15 லட்ச ரூபாய் முதலீடு செய்து மைக்ரோகோ தொடங்கினார்.
அதன்பிறகு கேரட்லேன் நிறுவனத்தின் மிதுன் சசேதி, அஜ்மீரா குழுமத்தின் மனோஜ் அஜ்மீரா ஆகியோரிடம் ஏஞ்சல் முதலீடு பெற்றார். அத்துடன் பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC), பயோடெக்னாலஜி துறை, இந்திய அரசாங்கம் ஆகியவற்றிடம் இருந்து உதவித்தொகை பெற்றார். BIRAC மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிடமிருந்து கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா, ஐகேபி இடமிருந்து ஐசிஓ நிதி, ஏசிடி கிராண்ட் ஆகியவற்றையும் பெற்றார்.
தூய்மை சார்ந்த நுணுக்கமான விஷயங்களிலும் கவனம் செலுத்தி முழுமையான அணுகுமுறையுடன் எந்த நிறுவனமும் செயல்படவில்லை என்பதை ரச்னா கவனித்தார். இதுவே இந்தப் பிரிவில் இவர் செயல்படுவதற்கு முக்கியக் காரணம்.
“உலகளாவிய பயணம், பருவநிலை மாற்றம், தொற்று நோய் ஆகிய மூன்றும் உலகளவில் உணவு, தண்ணீர், சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் 39 வயது ரச்னா.
எனவேதான் மைக்ரோகோ நிறுவனத்தின் தயாரிப்புகள் உணவு, தண்ணீர், சுகாதாரம் ஆகியவை தொடர்பாக அமைந்துள்ளது.
வளங்கள் பாதுகாப்பு
மைக்ரோகோ நிறுவனம் மெட்டீரியல் சயிண்டிஸ்ட், பொறியாளர்கள், வேதியியல் வல்லுநர், மைக்ரோபயாலஜிஸ்ட், மெக்கானிக்கல் பொறியாளர்கள், கம்ப்யூடேஷனல் ஃப்ளோ டைனமிக்ஸ் நிபுணர்கள் என மிகப்பெரிய குழுவை பணியமர்த்தியுள்ளது.
“பிரச்சனை என்று நான் கற்பனை செய்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சியைத் தொடங்கினாலும் அதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தவில்லை. பெரும்பாலான நேரங்களில் நான் பிரச்சனை என்று கற்பனை செய்து பார்க்கும் விஷயங்கள் மற்ற 2,000 பேர்களுக்கு பிரச்சனையாகவே தோன்றாமலும் போகலாம்,” என்றார் ரச்னா.
இந்த காரணத்திற்காகவே இந்நிறுவனத்துடன், தொர்ந்து இணைந்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆர்&டி செயல்முறைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் நேரம், பணம் ஆகியவை சேமிக்கப்படுவதும் சிறந்த பலனும் கிடைக்கும்.
மைக்ரோகோ தயாரிப்புகள் அனைத்துமே சுகாதாரத்தில் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளிலும் கவனம் செலுத்துகிறது. இந்த ஸ்டார்ட் அப் பாதுகாப்பான, அதேசமயம் பாதுகாக்கக்கூடிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. உயிர்களை பாதுகாப்பதுடன் இந்த செயல்முறையில் முக்கிய வளங்கள் பாதுகாக்கப்படுவதையும் கருத்தில் கொண்டே தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன.
உயிர்களை பாதுகாக்கும் தீர்வுகளை உருவாக்குவதற்காகவே ரச்னா நிறுவனத்தைத் தொடங்கினார். எனினும் பருவநிலை மாற்றம் விவசாயிகளின் உற்பத்தியை பாதிப்பது, பயிர்கள் வீணாகுதல், தண்ணீர் உள்ளிட்ட முக்கிய வளங்களின் பற்றாக்குறை இருப்பினும் முறையற்ற பயன்பாடு போன்றவற்றை கவனித்த ரச்னா வளங்களை பாதுகாக்க உதவும் தயாரிப்புகளை உருவாக்கத் தீர்மானித்தார்.
இந்த அணுகுமுறையுடன் மைக்ரோகோ உருவாக்கியுள்ள ஐஓடி சார்ந்த சுகாதார சாதனங்கள் நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யலாம்.
கோவிட்-19 சமயத்தில் Goassure தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அத்துடன் இந்நிறுவனம் Gosteri என்கிற சாதனத்தையும் தயாரிக்கிறது. இது தண்ணீர் மற்றும் மின்சார பயன்பாடின்றி அறுவை சிகிச்சைக்கு பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்கப் பயன்படும்.
அத்துடன் வெளிப்பரப்பில் உள்ள கிருமிகளை நீக்குவதற்கான Goclean என்கிற ஸ்ப்ரே, Gopure என்கிற கழிவுநீர் கிருமிநீக்கி ஆகியவற்றையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த ஸ்டார்ட் அப்பின் காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்ப தளம் Tubelet. இது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ரசாயனத் துகள்கள் கொண்டு அசுத்தப்படுத்தாமல் குளோரின் டயாக்சைட் பயன்படுத்துகிறது. மைக்ரோகோ அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஏழு காப்புரிமைகள் மற்றும் எட்டு ட்ரேட்மார்க் பதிவு செய்துள்ளது. இந்த பி2பி ஸ்டார்ட் அப் கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக ரச்னா தெரிவிக்கிறார்.
வருங்காலத் திட்டம்
தற்போதைய உலகளாவிய நெருக்கடியான சூழல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இருப்பினும் ஒரு கட்டத்தில் சுகாதாரத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறையவும் வாய்ப்புள்ளது என்கிறார் ரச்னா. எனினும் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய உணவு, தண்ணீர், ஆரோக்கியம் போன்றவற்றில் இந்த ஸ்டார்ட் அப் கவனம் செலுத்துகிறது.
விவசாயிகள், ஒன்றிணைக்கும் நிறுவனங்கள், மண்டி போன்றோரிடம் GOfresh சாதனத்தைக் கொண்டு சேர்ப்பதில் ரச்னா கவனம் செலுத்தி வருகிறார். Gosteri தயாரிப்பை விரைவில் சந்தையில் அறிமுக்கப் படுத்துவதற்கான ஆயத்தங்களையும் செய்து வருகிறார்.
BIRAC மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா திட்டத்தின்கீழ் முழுமையான அணுகுமுறையுடன் பச்சிளம்குழந்தை மற்றும் கர்ப்பிணிகள் உயிரிழப்பு விகிதத்தை குறைக்கும் பணியில் இந்த ஸ்டார்ட் அப் தற்போது ஈடுபட்டுள்ளது.
ஆர்&டி-யில் கவனம் செலுத்தப்படுவதாகவும் சில சுவாரஸ்யமான, புதுமையான தயாரிப்புகளில் பணிபுரிந்து வருவதாகவும் ரச்னா தெரிவிக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா