ரூ.64 கோடி நிதி திரட்டிய சென்னை ஸ்டார்ட் அப் Pando
சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனமான பாண்டோ, விரிவாக்கத்திற்காக ரூ.64 கோடி ஏ சுற்று நிதி திரட்டியுள்ளது.
நெட்வொர்க் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக மென்பொருள் ஸ்டார்ட் அப்பான 'பாண்டோ' Pando, சிறாட்டே வென்சர்ஸ் தலைமை வகித்த ஏ சுற்று நிதி மூலம் ரூ.64 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த சுற்றில் நெக்சஸ் வென்சர்ஸ், சீமென்ஸ் ஆதரவு பெற்ற நெக்ஸ்ட் 47 ஆகியவையும் பங்கேற்றன.
தேவதை முதலீட்டாளர்களான, விஎம்வேர் இந்தியா எம்.எஸ்.டி, ராம்குமார் நாராயணன், இண்டிபி சி.இ.ஓ அலோக் மிட்டல், எக்ஸ்டு10எக்ஸ் வென்சர்ஸ் சாய்கிரண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
நெக்ஸ்ட் 47 இந்தியாவில் செய்துள்ள முதல் முதலீடு இது. இந்த சர்வதேச முதலீட்டு நிறுவனம் பெங்களூரு, லண்டன், முனிச், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் அலுலவகம் கொண்டுள்ளது.
”உலக லாஜிஸ்டிக்ஸ் சந்தை மாற்றத்திற்கு தயாராக உள்ளது. தனித்துவமான உள்கட்டமை சவால்கள் கொண்ட பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. இது உள்ளூர் ஸ்டார்ட் அப்களுக்கு பிரகாசமான வாய்ப்பாக அமைகிறது. பாண்டேவின் சேவை ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்களை ஈர்த்துள்ளது. நிறுவன வீச்சை அதிகமாக்க அவர்களுடன் இணைவதில் உற்சாகம் கொள்கிறோம்,” செய்திக்குறிப்பு ஒன்றில் நெல்ஸ்ட் 47 நிர்வாக இயக்குனர் லேக் ஆனந்த் கூறியுள்ளார்.
இந்த நிதிச் சுற்றை அடுத்து நிறுவனம் இதுவரை திரட்டியுள்ள நிதி ரூ.80 கோடியாக உள்ளது. நிறுவனம், சர்வதேச சந்தையில் மேலும் வளர திட்டமிட்டுள்ளது.
”சரக்கு வலைப்பின்னல் செயல்படும் விதத்தை மாற்றி அமைப்பது பற்றி சிந்திக்க இந்த முதலீடு எங்களுக்கு வாய்ப்பாக அமைகிறது. எங்கள் வலைப்பின்னலில் இணைந்தவர்களுக்கு ஏற்கனவே பாண்டோ நிகரில்லாத மதிப்பை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் எங்கள் சேவையை அதிகமாக்குவதோடு, சர்வதேச சந்தையிலும் கவனம் செலுத்துவோம்,” என பாண்டோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ நிதின் ஜெயகிருஷ்ணன் கூறுகிறார்.
2017ம் ஆண்டும் நிதின் ஜெயகிருஷ்ணன், அபிஜித் மனோகர் ஆகியோரால் துவக்கப்பட்ட பாண்டோ, பிலிப்ஸ்,மேரிகோ மற்றும் பிரிட்டானியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக பெற்றுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகள் தங்கள் சரக்கு நிர்வாக அமைப்பை தானியங்கிமயமாக்கி மேம்படுத்த பாண்டோ உதவுகிறது.
”உலக லாஜிஸ்டிக்ஸ் துறை பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. பெரிய நிறுவனங்கள் இந்த மாற்றத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சரியான மேடை தேவை. இந்த தேவையை நிறுவனங்கள் நிறைவேற்றிக்கொள்ள பாண்டோ உதவுகிறது. பாண்டோ சேவையை நிறைவேற்றித்தரும் விதம் நிகரில்லாததாக இருக்கிறது. இதன் காரணமாகவே நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்,” என்று சிறாட்டே வென்சர்ஸ் நிறுவனர் டி.சி.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
நிறுவனங்கள் சப்ளை செயின் செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்கி, கண்காணித்து, மேம்படுத்த பாண்டோவின் சேவை வழி செய்கிறது.
”நெட்வொர்க் விசிபிலிட்டியை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் மூலம் பாண்டே சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறது. பிளவுபட்டிருக்கும் சந்தைக்கு இதன் சேவை ஏற்றதாக இருக்கிறது. இந்தியாவில் இதன் வெற்றி மற்ற நாடுகளிலும் விரிவாக்க கூடியது,” என்று நெக்சஸ் வென்சர் பாட்னர்ஸ் இணை நிறுவனர் சந்தீப் சிங்கால் கூறியுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்