இந்தியாவின் முதல் 3டி பிரின்டிங் ராக்கெட் இஞ்சின் தயாரிக்கும் மையம்: சென்னை Agnikul சாதனை!
சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் அக்னிகுல், ஆய்வு நிலையில் இருந்து உற்பத்தி நிலைக்கு முன்னேறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனம் 'அக்னிகுல்' (Agnikul), 3டி பிரிண்டிங் முறையில் ராக்கெட்களை உருவாக்குவதற்கான இந்தியாவின் முதல் Rocket Factory-1 மையத்தை துவக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் அமைந்துள்ள இந்த ராக்கெட் பேக்டரி-1 மையத்தை டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் இஸ்ரோ தலைவர், விண்வெளித்துறை செயலர் எச்.சோம்நாத் துவக்கி வைத்தனர்.
சென்னை ஐஐடியில் உருவான
Cosmos, 2017ம் ஆண்டு ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், மொயின் எஸ்.பி.எம், பேராசிரியர் எஸ்.ஆர்.சகர்வர்த்தி ஆகியோரால் துவக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தனியார் சிறு ராக்கெட் அக்னிபான் (Agnibaan) நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த ராக்கெட் 100 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை பூமியின் 700 கிமீ நீள்வட்ட பாதையில் செலுத்தும் திறன் கொண்டது.“இந்த மையம், ஆய்வு நிலையில் இருந்து தயாரிப்புக்கு செல்ல வழி செய்யும். ஏனெனில், இனி பெரிய அளவில் இதை உருவாக்குவதில் கவனம் செலுத்த இருக்கிறோம்,” என ஸ்ரீநாத் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.
இந்த புதிய மையத்தில் ஒரு முழு ராக்கெட் எஞ்சினை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது.
“இந்த எந்திரம் மூலம் வாரம் இரண்டு ராக்கெட்களை உருவாக்கவும், அதன் பிறகு நான்கு ராக்கெட் என விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்று ஸ்ரீநாத் தெரிவித்தார்.
“மூலப்பொருட்கள் உள்ளே சென்றால், இந்த மையத்தில் இருந்து முழுவதும் தயாரான ராக்கெட் அமைப்பு வெளியே வரும்,” என்றும் கூறினார்.
இந்த 3-டி பிரிண்டர் ஜெர்மனியின் EOS நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த இயந்திரம் தவிர, ராக்கெட் எஞ்சினை தயாரித்து ஒருங்கிணைக்கத் தேவையான இயந்திரங்களும் மையத்தில் உள்ளன.
Rocket Factory-1 சிறப்பம்சம்
ராக்கெட் பேக்டரி- 1 மையத்தில், அக்னிகுல் நிறுவனம், பகுதி கிரியோஜெனிக் ராக்கெட் எஞ்சிஞ்களை உருவாக்கும். குளிர் நிலையில் உள்ள கெரோசின் அல்லது திரவ ஆக்சிஜினை இது பயன்படுத்திக்கொள்ளும்.
“இந்த இஞ்சின்கள் ஒரே மூச்சில் 3டி பிரிண்டிங்கில் உருவானவை. இதில் பூஜ்ஜியம் அசெம்பிள் பகுதிகள் உள்ளதால் இதற்காக காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம். மொத்த இஞ்சினும் ஒரே பொருள் எனும் அளவுக்கு வடிவமைப்பு உள்ளது,” என்கிறார் ஸ்ரீநாத்.
அக்னிகுல், Agnilet மற்றும் Agnite எனும் இரு வகையான இஞ்சிகளை உருவாக்குகிறது.
2021 துவக்கத்தில் இந்நிறுவனம், உலகின் முதல் முழு 3-டி பிரிண்டிங் ராக்கெட்டான Agnilet-ஐ வெற்றிகரமாக சோதித்தது. துபாய் ஐஏசி 2021 கண்காட்சியில் இந்த இஞ்சினை காட்சிக்கு வைத்தது.
Agnite எனும் முதல் நிலை இஞ்சின் இந்த மையத்தில் உருவாகி தயாரிக்கப்படும். முதல் நிலையில் இந்த இஞ்சினின் ஏழு வடிவங்கள் இருப்பதாக ஸ்ரீநாத் சொல்கிறார். இந்த இஞ்சின் இன்னமும் சோதிக்கப்படவில்லை.
இந்த மையத்தில் நிறுவனம் எல்லா தயாரிப்புகளையும் சொந்தமாக மேற்கொள்ள வழி செய்யும். 3-டி பிரிண்டிங் உற்பத்தி காலத்தை குறைக்கும் என நிறுவனர்கள் தெரிவித்தனர்.
“குறைந்த காலத்தில் இஞ்சின் வழங்கலை செயல்படுத்த முடிகிறது. இதில் மனித தலையீடே கிடையாது. எல்லாமே ஆட்டோமாட்டிக்,” என்கிறார் ஸ்ரீநாத்.
“ராக்கெட் இஞ்சின் உற்பத்தியை துவக்கும் போது இது மிகப்பெரிய சாதகமாக அமையும். ஏனெனில், இதில் ராக்கெட்களை விரைவாக உருவாக்கலாம், செலவு குறையும். அதே நேரத்தில் உற்பத்தியை அதிகமாக்கலாம். வாடிக்கையாளர் தேவைக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்,” என்கிறார்.
Agnibaan
2020ல் அக்னிகுல் நிறுவனம் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட முதல் இந்திய ஸ்டார்ட் அப்’பாக விளங்கியது. IN-SPACe திட்டம் கீழ் கையெழுத்தான ஒப்பந்தம், அக்னிபானை உருவாக்க இஸ்ரோவின் வளங்கள் மற்றும் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியது.
Agnibaan பிளக் இன் பிளே அம்சம் கொண்டிருப்பதால் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ளலாம். இந்த மையத்தில் உருவாக்கப்படும் இஞ்சின்கள் இந்த ஆண்டு இறுதியில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டின் மையமாக இருக்கும்.
“இந்த ஆண்டின் பிற்பகுதியில் லாஞ்ச் நிகழ்வை திட்டமிட்டுள்ளோம். இஸ்ரோ உடன் பேப்பர் வொர்க்கில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணிக்கான இடைமுகத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் இலக்கு கொண்டுள்ளோம்,” என்கிறார் ஸ்ரீநாத்.
அக்னிகுல், Mayfield India, pi Ventures, Speciale Invest, மற்றும் ஆனந்த் மகிந்திரா, அமெரிக்க தொழில்முனைவோர் நவல் ரவிகாந்த் உள்ளிட்ட ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து 15 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
ஆங்கிலத்தில்: ஐஸ்வர்யா லட்சுமி | தமிழில்: சைபர் சிம்மன்