சென்னை ஸ்டார்ட்-அப் GUVI 6 கோடி ரூபாய் நிதி உயர்த்தியது!
இவர்களின் தளத்தில் பைத்தான், இயந்திரக் கற்றல், ஜாவா போன்ற தொழில்நுட்ப திறன்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட வட்டார மொழியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தன் இருப்பை நிலைநிறுத்தி தக்கவைப்பதற்கு அதிகம் மெனக்கெடவேண்டியுள்ளது. நேற்றைய சாதனையை இன்று தம்பட்டம் அடித்துக்கொள்வதில் பயனில்லை. நாம் அதைச் செய்துகொண்டிருக்கும் சமயத்தில் உலகம் பல அடி முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்துபோகிறோம்.
எனவே அதே வேகத்தில் நாமும் பயணிக்க நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்கு நம்முடைய திறனைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு வருவதே ஒரே தீர்வு. குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வருவதால் திறன் மேம்பாடு என்பது அத்தியாவசியமானதாகிறது. பல்வேறு ஆன்லைன் தளங்கள் இவ்வாறான புதுமையான திறன்களில் பயிற்சியளித்து வருகிறது. அத்தகைய தளங்களில் ஒன்றுதான் GUVI.
ஐஐடி மெட்ராஸ் மற்றும் CIIE.CO, ஐஐஎம் அகமதாபாத் இன்குபேட் செய்துள்ள GUVI ஸ்டார்ட் அப் சமீபத்தில் CBA Capital நிறுவனத்தின் பிரத்யேக கல்வி சார்ந்த முதலீட்டு முயற்சியான எஜுகேஷன் கேட்டலிஸ்ட் ஃபண்ட் மூலம் ப்ரீ-சீரிஸ் ஏ சுற்று நிதியாக 6 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளது.
இந்த ஸ்டார்ட் அப் ஆரம்பத்தில் யூட்யூப் சானலாக தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் ஒரு மில்லியன் பேர் வீடியோக்களை பார்வையிட்டதை அடுத்து இந்நிறுவனர்கள் இந்த முயற்சியை ஒரு நிறுவனமாக மாற்ற முடிவெடுத்தனர்.
எஸ்.பி பாலமுருகன், அருண் பிரகாஷ், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து GUVI நிறுவனத்தை நிறுவியுள்ளனர். GUVI ஆன்லைன் தொழில்நுட்பக் கற்றல் தளமாகும். இதன் தொழில்நுட்ப பாடங்கள் துறைசார் நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் வீடியோ வடிவில் தொழில்நுட்ப பாடங்கள் வழங்கப்படுகிறது. இந்தத் தளத்தில் பைத்தான், இயந்திரக் கற்றல், ஜாவா போன்ற தொழில்நுட்ப திறன்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட வட்டார மொழியில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 12 நாட்களில் இந்தத் தளத்தின் பாடங்களில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.
மாணவர்கள் படிப்பை முடித்த பின்னர் பணியில் சேர உதவும் வகையில் வீட்டில் இருந்தவாறே, தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள GUVI உதவுகிறது.
இந்தப் பாடங்களை மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே கற்றுக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
ஏற்கெனவே 2.14 லட்சம் பொறியாளர்கள் பைத்தான், ஜாவா, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களில் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர்.
இந்தத் தளத்தில் தொழில்நுட்ப பாடங்களைக் கற்றுக்கொள்ள மாணவர்கள் மட்டுமின்றி பணிபுரிவோர் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிதி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து GUVI நிறுவனத்தின் சிஇஓ எஸ்.பி பாலமுருகன் கூறும்போது,
“இந்த நிதியைக் கொண்டு எங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்த உள்ளோம். மேலும் பல வட்டார மொழிகளில் கூடுதல் பாடங்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். ஆஃப்லைன், ஆன்லைன் இரண்டும் இணைந்த கற்றல் திட்டமான Zen Class மேலும் பல பகுதிகளுக்கு விரிவடையும். ஊரடங்கு சமயத்தில் அதிகமானோர் எங்களுடன் இணைவதைப் பார்க்கமுடிகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
GUVI நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கான காரணம் குறித்து CBA Capital நிறுவனத்தின் பவேஷ் ஹேமானி கூறும்போது,
“GUVI நிறுவனத்தின் வணிக மாதிரி நம் நாட்டில் 21-ம் நூற்றாண்டிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். GUVI தேவைக்கேற்றவாறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பாடங்களை வழங்குகிறது. திறன் பயிற்சிபெற்ற மாணவர்கள் பணியிலமர்த்தப்பட்டுள்ள விகிதமே இதன் வெற்றிக்கு அளவுகோலாக அமைந்துள்ளது,” என்றார்.
இன்றைய லாக்டவுன் சமயத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி பலர் அவதிப்படும் நிலையில் இந்த இடைவெளியை தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் சிலர் மாற்றிக்கொள்ள விரும்புவதையே இது போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் உணர்த்துகிறது.
கட்டுரை: ஸ்ரீவித்யா