3 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சென்னை டூ யாழ்பாணம்’ விமான சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னையில் இருந்து இலங்கை யாழ்பாணத்திற்கான தினசரி விமான சேவை 3 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
சென்னையில் இருந்து இலங்கை யாழ்பாணத்திற்கான தினசரி விமான சேவை 3 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
2020ம் ஆண்டு தீயாய் பரவிய கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவது லாக்டவுன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. குறிப்பாக சென்னையையும், இலங்கையையும் நேரடியாக இணைக்கக்கூடிய ’அலையன்ஸ்’ விமான நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்டது.
2019ம் ஆண்டு முதல் சென்னை டூ யாழ்பாணம் இடையிலான விமானப் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், கொரோனா காலமாக கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.
கொரோனா காலக்கட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் கட்டுப்பாடுகளால் சுற்றுலா, ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியில் தேக்கம் ஏற்பட்டு இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்தது. தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக அந்நாட்டு அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை டூ இலங்கை யாழ்பாணத்திற்கு விமான சேவையை டிசம்பர் 12ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ யாழ்பாணம் விமான சேவை:
இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும் யாழ்ப்பாணம்-சென்னை வழித்தடத்தில் இயங்கி வந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என இலங்கைக்கான விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்திருத்துள்ளார்.
“சென்னை டூ யாழ்பாணம் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவது உள்நாட்டு சுற்றுலாத்துறையை வளர்ச்சி அடையச் செய்யவும், அந்நிய செலாவணியை ஈட்டித் தரவும் முக்கிய ஆதராமாக அமையும்,” எனத் தெரிவித்திருந்தார்.
ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான துணை நிறுவனமான ’அலையன்ஸ் நிறுவனம்’ சென்னையில் இருந்து இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் பலாலிக்கு விமான சேவை அக்டோபர் 19ம் தேதி 2020ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதே ஆண்டு நவம்பம் மாதம் விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் சேவை நிறுத்தப்பட்டது.
அலையன்ஸ் ஏரின் மூத்த அதிகாரி,
“இரு நகரங்களுக்கு இடையே வாரத்திற்கு 4 முறை இயக்கப்பட உள்ளது. டிசம்பர் 12 அன்று செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.
சென்னை-யாழ்ப்பாண விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வடக்கு மாகாணங்களில் வசித்து வரும் தொழிலதிபர்கள், வணிகர்கள், சுற்றுலா பிரியர்கள், மக்கள் ஆகியோர் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நேரம், கட்டணம்:
கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக வாரத்திற்கு 3 முறை இயக்கப்பட்டு வந்த சென்னை டூ யாழ்பாணம் விமான சேவையானது, டிசம்பர் 12ம் தேதி முதல் வாரத்திற்கு 4 முறை இயக்கப்பட உள்ளது.
வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு 10.50 மணிக்கு யாழ்பாணம் சென்றடையும் என்றும், யாழ்ப்பாணத்திலிருந்து முற்பகல் 11.50 மணிக்கு திரும்பி மதியம் 1.15 மணிக்கு சென்னையை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முன்பு, சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான கட்டணம் 3,190 ரூபாயாகவும், யாழ்ப்பாணம் டூ சென்னை இடையிலான விமான கட்டணம் ரூ.3,990 ரூபாயாகவும் இருந்தது. தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார பற்றாக்குறை காரணமாக டிக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலாலி விமான நிலையம்:
யாழ்ப்பாண நகரத்திலிருந்து வடக்கே 20 கி.மீ தொலைவில் உள்ள பலாலி விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது அரச விமானப்படைக்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் முனையில் காங்கேசன்துறையில் உள்ள இலங்கை கடற்படைத் தளத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பலாலியில், அதன் பிராந்திய தலைமையகத்துடன் இலங்கை இராணுவத்தின் தளம் உள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், கடற்கரை நகரத்தை புதுச்சேரியில் காரைக்காலுடன் இணைக்கும் படகு சேவைகளையும் ஆய்வு செய்து வருகின்றன.
இந்தத் திட்டங்கள் வட இலங்கைக்கும் இந்தியாவின் தென் மாநிலங்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், போரினால் இழந்த பொருளாதாரத்தை அதிகரிக்க உதவும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொகுப்பு - கனிமொழி
பிரபலங்கள் பயணிக்கும் ‘சலூன் கோச்’ - இந்திய ரயில்வேயின் இந்த சொகுசு கோச்சின் சிறப்பம்சங்கள் என்ன?