’சென்னை தண்ணீர் பஞ்சம்’- பதறிப் போன டைட்டானிக் ஹீரோ!
ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி கேப்ரியோவுக்கு தெரிந்ததுகூட நம்மூர் அமைச்சர்கள், ஆள்பவர்களுக்கு தெரியவில்லை. அவரின் அக்கறைக்கூட இங்கு பலருக்கு இல்லை என நெட்டிசன்கள் பகிரத்தொடங்கினர்..
இப்பொழுது தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக நம் முன் நிற்பது தண்ணீர் பற்றாக்குறை. அதிலும் முக்கியமாக தமிழகத்தின் தலை நகரமான சென்னை நீர்த்தேக்கங்களில் 1% க்கும் குறைவாகவே நீர் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே தண்ணீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர். இப்பிரச்சனை நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு தென்பட்டதோ இல்லையோ ஆனால் கடல் கடந்து ஹாலிவுட் நடிகரும் நம்ம டைட்டானிக் பட ஹிரோவான லியானார்டோ டி கேப்ரியோ காது வரை சென்றுவிட்டதே இங்க செய்தி.
சென்னையில் மக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் அவலத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்ட கேப்ரியோ,
“மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்...” என பிபிசி இல் வந்த பதிவை பகிர்ந்திருந்தார்.
நீர்பற்றாக்குறையால் சென்னையில் பல உணவகங்கள் மூடப்பட்டது, ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்து வேலைபார்க்கச் சொன்னது நிறுவனங்கள், பள்ளிகள் சில மூடப்பட்டது, சென்னை மெட்ரோ இரயிலில் ஏசி ஆஃப் செய்யப்பட்டது. இன்னும் பல முடக்கங்கள் நீர் பற்றாகுறையால் சென்னையில் ஏற்பட்டுள்ளது,” என பிபிசி செய்தியை பதிவிட்டு இருந்தார் கேப்ரியோ.
’பியான்ட் தி ஃபலட்’ என்னும் தனது ஆவணப்படத்தை எடுக்க 2015 இல் சென்னைக்கு வந்திருந்தார் லியானார்டோ டி கேப்ரியோ. சூற்றுச்சூழல் மீது அக்கறைக் கொண்ட இவர் அப்பொழுது சென்னை வந்த போது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுனிதா நரேன் உடன் உரையாடி இருந்தார். இதனால் இப்பொழுது சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் படும் கஷ்டத்தை கண்டு விழிப்புணர்வு அளிக்கும் நோக்கோடு பிபிசியின் கட்டுரையை பகிர்ந்திருந்தார்.
அதுமட்டுமின்றி தண்ணீர் பிரச்சனையால் மக்களுக்கிடையே அமைதி கலைந்தது, தண்ணீர் பிடிக்கும் இடத்தில் சண்டை, கொலை முயற்சி என எச்ய்திகளையும் நாம் பார்த்தோம். இன்னும் சிலர் சென்னையை விட்டு தங்கள் சொந்த ஊருக்கே திரும்பினர்.
மிகக் குறைந்த நிலத்தடி நீர், நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லை; இதற்குத் தீர்வு தான் என்ன? மழை, மழை மட்டுமே சென்னையின் நீர்பற்றாக்குறையை காப்பாற்ற முடியும் என நிபுணர்கள் பிபிசிக்கு பேட்டி அளித்துள்ளனர்.
“அழிவு துவங்கி விட்டது; இந்த ஆண்டும் மழை இல்லையென்றால் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அவதிப்பட்டு அழிவு நிச்சயம்...” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“இதற்கு முன்பும் சென்னையில் நீர்பற்றாகுறை ஏற்பட்டுள்ளது ஆனால் அப்பொழுது நிலத்தடி நீர் நம்மை காப்பாற்றியது, இப்பொழுது அதுவும் இல்லை. நிலத்தடி நீர்மட்டத்தை உயரத்துவதே ஒரே தீர்வு,” என்றார் சமூக ஆர்வாளர் நக்கீரன் பிபிசிக்கு அளித்தப் பேட்டியில்.
ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி கேப்ரியோவிற்கு தெரிந்ததுகூட தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கும் பலருக்குத் தெரியவில்லை. அவரின் அக்கறைக்கூட இங்கு ஆள்பவர்களுக்கு இல்லை என நெட்டிசன்கள் பகிரத்தொடங்கினர்.
மரங்கள் வளர்ப்பதும் சுற்றுச் சூழலை காப்பாற்றுவதுமே நமக்கு தண்ணீர் கிடைக்க ஒரே தீர்வு. அதற்கான வழியை நாமும் அரசாங்கமும் இணைந்து உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.