தமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழு: ஐவரின் சிறப்புகள் என்ன?
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த 'பொருளாதார ஆலோசனைக் குழு'!
நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில், தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ள நிலையில் அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் உறுப்பினர் தேர்வு தான் தமிழக அரசுக்கு பாராட்டுகளைப் பெறவைத்துள்ளது. நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியருமான எஸ்தர் டஃப்லோ முதல் இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் பொருளாதர நிபுணர்கள்.
இவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து ஒட்டுமொத்த கடன்சுமையை குறைத்து, அதன் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய அரசு உறுதி பூண்டுள்ளது.
இதற்கிடையே, இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்!
ரகுராம் ராஜன்!
இவர் இந்திய பொருளாதாரத்தைக் கவனிக்கும் ஒவ்வொருவருக்கும் பரிட்சியமான முகம். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்த ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற மிகப்பெரிய பொறுப்பை திறம்பட கவனித்தவர். பொருளாதார வளர்ச்சி, சரிவுகளைக் கணிக்கும் திறன்கொண்டவர்.
அதற்கு ஒரு உதாரணம், 2008-09 காலகட்டங்களில் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அதனை முன்கூட்டியே கணித்து அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில், அவரின் முதன்மை பொருளாதார ஆலோசகர், பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்று பல்வேறு பதவிகளில் திறம்பட பணியாற்றிருக்கிறார்.
அரவிந்த் சுப்பிரமணியன்!
இவரும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். உலக வங்கி முதல் பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகித்திருக்கிறார். குறிப்பாக 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்ட பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது, தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்தவர் அரவிந்த் சுப்பிரமணியன். இதற்கடுத்து அமெரிக்காவுக்குச் சென்றவர் தற்போது நாடு திரும்பி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
எஸ்தர் டஃப்லோ!
பிரான்ஸை நாட்டைச் சேர்ந்த எஸ்தர் டஃப்லோ நோபல் பரிசு வெற்றியாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மருமகளும்கூட. ஆம், அவரின் கணவர் அபிஜித் பானர்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.
தற்போது அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ஆய்வுகளை நடத்தி, 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை கணவர் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து வென்றுள்ளார்.
ஏழை, எளியோரின் வறுமையைப் போக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது மட்டுமில்லாமல், 2013ல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் செயல்பட்ட உலகளாவிய பொருளாதார ஆணையத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ஜான் ட்ரீஸ்!
ஜான் ட்ரீஸ்-ன் சொந்த நாடு பெல்ஜியம் ஆக இருந்தாலும் இந்தியாவின் பிரபல திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்து கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்த ஒரு பொருளாதார நிபுணர் இவர்.
பொருளாதார நிபுணர் என்பதைத் தாண்டி இவர் ஒரு சமூக செயற்பாட்டாளரும் கூட. இவரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், பொருளாதார ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்து, இந்தியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பராமரிப்பு போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
எஸ்.நாராயண்!
சென்னையைச் சேர்ந்த இந்த எஸ்.நாராயண் ஒரு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1965 - 2004ம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளில் நிதி, தொழில், வர்த்தகம், எரிபொருள், விவசாயம், கப்பல் போக்குவரத்து, சாலை வசதி என பல்வேறு துறைகளில் தலைமை பதவிகளில் திறம்பட பணியாற்றி இருக்கிறார்.
இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலும், மத்திய அரசின் நிதிச் செயலாளராகவும் பணியாற்றி இருந்துள்ளார். பணி ஒய்வு பெற்ற பிறகு, கார்ப்ரேட் தொழில் நிறுவனங்களுக்கு இன்றும் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.