தொழில் முனைவில் கலக்கும் சிறுவர் - சிறுமியர்கள்!
குழந்தைகள் பல சமயங்களில் நாம் அதிசயித்துப் போகும் வகையில், பெரியவர்களுக்கே பாடம் சொல்லும் பல அசாதாரண செயல்களை செய்து வியக்க வைப்பர். அப்படி இளம் வயதிலேயே தொழில் முனைவோர்களாக மாறி அசர வைக்கும் குழந்தைகள் இதோ!
குழந்தைகள் எப்போதுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான். குழந்தைகளுக்கும் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமான நாட்கள் தான். ஒவ்வொருவரின் வாழ்விலுமே மறக்க முடியாத வசந்தகாலம் அவர்களது குழந்தைப் பருவம் தான். ஆனாலும் குழந்தைகள் மீது தனக்கிருந்த அதீத பாசத்தால் தனது பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு.
அதன்படி ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையென்றாலும்கூட, ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி குழந்தைகளை மகிழ்விப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
குழந்தைகள் என்றாலே மழலை என்ற நிலை மாறி, சமயங்களில் நாம் அவர்களைப் பார்த்து அதிசயித்துப் போகும் வகையில், பெரியவர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் பல அசாதாரண செயல்களை செய்து வியக்க வைத்து விடுகின்றனர்.
ஆண்டுதோறும் வீரதீர செயல்களைச் செய்யும் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது அரசு. ஆனால், வீரதீரச் செயல்கள் மட்டுமின்றி, சமீபகாலமாக இளம் வயதிலேயே தொழில்முனைவோர்களாக மாறி பல குழந்தைகள் அசர வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்களில் தமிழகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்ட சில குழந்தைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
கோழிப் பண்ணை முதலாளி :
இளம் தொழில் முனைவோர் என்றால் அதற்காக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்கள் என்று அர்த்தமில்லை. பகலில் படிப்பு, மாலையில் விளையாட்டு என்பதோடு கொஞ்சம் தொழிலும் கவனம் செலுத்தி இன்று சாதனையாளராக மாறி இருக்கிறார் காங்கேயத்தைச் சேர்ந்த பொன் வெங்கடாஜலபதி.
9ம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன் பள்ளிக்குச் சென்று கொண்டே 10 கோழிக் குஞ்சுகளுடன் தொடங்கிய பண்ணை, ஒரே ஆண்டில் 150 கோழிகளாக பெருக்கியுள்ளார். கடந்த ஆண்டு 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி அனைவரையும் அசத்தியுள்ளார் இந்த 14 வயது சிறுவன்.
பொன் வெங்கடாஜலபதி பற்றி மேலும் தெரிந்து கொள்ள: பகலில் பள்ளிப் படிப்பு; மாலையில் கோழிப் பண்ணை முதலாளி!
இளம் சி இ ஓ:
சில குழந்தைகள் பள்ளிப் படிப்போடு இசைக் கருவிகள் கற்றுக் கொள்ளுதல், நடனம், பாட்டு கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றையும் பகுதி நேரமாக கற்றுக் கொள்வார்கள். அதனை கூடுதல் திறமையாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவற்றிலும் சாதிக்க முடியும் எனக் காட்டி இருக்கிறார் 13 வயதான எஸ்.பி.ஷரண்.
8 வயதில் ட்ரம்ஸ் வாசிக்க கற்றுக் கொண்ட ஷரண், 11 வயதில் அதனையே தனது தொழிலாக மாற்றிக் கொண்டார். இன்று தமிழகத்தின் இளம் சிஇஓ ஆகி அதன்மூலம் பல லட்சங்களில் வருவாயும் ஈட்டி வருகிறார்.
ஷரண் எப்படி இந்த அளவுக்கு உயர்ந்தார் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள: ஆசைக்காக ட்ரம்ஸ் கற்றுக் கொண்டு அதையே தொழில் முனைவாக்கிய இளம் சிஇஓ ஷரண்!
பொம்மை தயாரிக்கும் குட்டிப்பெண்
தொழில் என்பது வெறும் பணம் சம்பாதிப்பதாக மட்டும் இருக்கக்கூடாது. அது மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதாகவும் இருக்க வேண்டும். இதனை இளவயதிலேயே குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் தான் இஷானா. சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமியான இஷானா, ’சூயிங் ஹோப்’ (sewing hope) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அதன் மூலம் வாடிக்கையாளர் விலைக் கொடுத்து ஒரு பொம்மை வாங்கும் போது, அவர் சார்பாக ஒரு பொம்மை புற்றுநோயால் அவதிப்படும் குழந்தைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இஷானாவுக்கு இந்த யோசனை எப்படி வந்தது என்பது பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள: நோயால் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்து தரும் 9 வயது இஷானா!
குட்டி பேக்கர் வினுஷா
இனிப்புகளுக்கு மயங்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். கடைகளுக்குச் சென்றால் அம்மா, அப்பாவிடம் அடம் பிடித்து கேக், சாக்லெட் என ஒரு கை பார்த்து விடுவார்கள். ஆனால், அப்படிப்பட்ட குழந்தைகளில் இருந்து மாறுபட்டு, கேக் சாப்பிடும் வயதில் கேக் தயாரிப்பில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் 9 வயது சிறுமியான வினுஷா.
பேக்கிங் மீது இருக்கும் காதலால் ஒரு மாதம் முறையான பயிற்சியை எடுத்துக் கொண்ட வினுஷா, ஆரம்பத்தில் கப்கேக்களில் புதுப்புது ரகங்களை தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு வீட்டில் இருந்தபடியே டெலிவரி செய்துள்ளார். பின்னர் அதனை விரிவாக்கம் செய்து கடந்த செப்டம்பர் மாதம் வினுஷா தன்னுடைய பிராண்டான 'Four seasons pastry' அறிமுகம் செய்து அதன் நிறுவனர் மற்றம் சிஇஓவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
வினுஷாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: கேக்கை ருசிக்கும் வயதில் பேக்கரியே நடத்தும் லிட்டில் வினுஷா!
வித்தியாசமான முயற்சி
அனுபவங்களே மிகச் சிறந்த ஆசான். இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பொருந்தும். உறவினர் வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்த புத்தகங்களை எடுக்க வேண்டும் என நினைத்த போது, தோன்றிய யோசனை தான் இன்று திலக் மேத்தாவை இன்று இளம் தொழில்முனைவோர் ஆக்கி இருக்கிறது.
மும்பையில் உள்ள கரோடியா சர்வதேச பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் திலக், மும்பையில் மிகவும் நம்பகமான விநியோக சேவை வழங்கும் டப்பாவாலாக்களுடன் இணைந்து, பேப்பர்ஸ் அண்ட் பார்சல்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதற்கென தனியாக மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
திலக் மேத்தாவின் இந்த வித்தியாசமான முயற்சியைப் பற்றித் தெரிந்து கொள்ள: மும்பை டப்பாவாலாக்களுடன் இணைந்து கூரியர் சேவை வழங்கும் 13 வயது சிறுவன்!