இணையத்தை நெகிழ வைத்த சீன டாக்டரின் படம்...
சீனாவில், கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட மருத்துவமனையில், நோயாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட பிறகு மருத்துவர் ஒருவர் களைத்து படுத்திருப்பது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர், தற்காலிக மருத்துவமனையில் அனைத்து நோயாளிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிம்மதியில் களைத்துப்படுத்திருக்கும் காட்சி இணையத்தை நெகிழ வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வைரஸ் முதலில் பரவிய சீனாவில் நிலைமை கட்டுக்குள் வந்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக நோயின் மையமாகத் திகழும் வூஹான் நகரில், தீவிரம் குறைந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்துவங்கிய போது, வைரசை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கவும், அரசு பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நாட்டு மருத்துவர்கள் இரவு பகல் பாராமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டன.
தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மூடப்படும் தற்காலிக மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு படம் இணையத்தை நெகிழ வைத்துள்ளது.
அந்த படத்தில், தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அனைத்து நோயாளிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, மருத்துவர் ஷியாங் என்பவர், காலியாக இருக்கும் படுக்கை ஒன்றில், களைத்துப்போய் படுத்திருக்கிறார்.
’ இந்த படம் வலியை உணர்த்துகிறது. டாக்டர்.ஜியாங், கொரோனா நோயாளிகளுக்குச் சிசிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட வூஹான் மருத்துவமனையில் கடைசி நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டப் பிறகு காலி படுக்கையில் படுத்திருக்கும் காட்சி இது,” என்ற குறிப்புடன் ஒருவர் டிவிட்டரில் இந்த படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மருத்துவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் உணர்த்தும் இந்த படம் டிவிட்டரில் பலரை கவர்ந்துள்ளது. பலரும் இந்த படத்தை பார்த்து, கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழில்: சைபர்சிம்மன்