மீண்டு(ம்) வந்தார் ஜாக் மா! – மகிழ்ச்சி கலந்த கலக்கத்தில் ஆதரவாளர்கள்!
கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஜாக் மா எங்கிருந்தார் எனத் தெரியாமல் இருந்தது!
அலிபாபாவின் நிறுவனரும், தொழிலதிபருமான ஜாக் மா கடந்த அக்டோபர் முதல் தலைமறைவாகி இருந்தார். கிட்டத்தட்ட 3 மாதங்கள் எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாமல் இருந்தது.
சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஆசிரியர்களுடனான ஆன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார் ஜாக் மா.
கடந்தாண்டு அரசு வங்கி மற்றும் நிதித் துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால், சீன அரசின் கோபத்திற்கு ஆளானார் ஜாக் மா. இதையடுத்து, சீன அரசு, ஜாக் மாவின், 'ஆன்ட்' நிறுவன பங்கு வெளியீட்டை நிறுத்தியது. ஜாக் மாவின் அலிபாபா குழும நிறுவனங்களில் சட்டமீறல் நடந்ததாகக் கூறி, அபராதம் விதித்து, அவர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது.
சீன அரசின் இந்த நெருக்கடியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த அக்டோபர் மாதம் முதல் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. எங்கே ஜாக் மா எங்கே ஜாக்மா? என அவரை தேடாத ஆட்களே இல்லை. அவர் காணவில்லை என்று அவரது நலம் விரும்பிகள் உள்பட உலகமே அவரைத் தேடிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் ஜாக் மா கலந்து கொண்டு பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
“அவர் ஓடி ஒளியும் ஆளில்லை” என கேப்ஷன் போட்டு சீனப் பத்திரிகையாளர் ட்வீட் செய்துள்ளார்.
சுமார் 36 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜாக் மா சீன மொழியில் ஆசிரியர்களுடன் பேசி உள்ளார். அலிபாபா என்ற சாம்ராஜ்யத்தை நிறுவிய அவருக்கு இந்த நெருக்கடி நிலையை எப்படி கடக்க வேண்டுமென்பதும் தெரியும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
“நானும் எனது நண்பர்களும் கல்வித் தொண்டு செய்வதாக முடிவெடுத்துள்ளோம். கிராமப்புறங்களில் கல்வியை வளர்த்து புத்துயிர் ஊட்டுவது சீனாவிலிருக்கும் ஒவ்வொரு தொழிலதிபர்களின் தலையாயக் கடமை,” என்று பேசியிருக்கிறார்.
அவர் ஏன் பொதுவெளியில் வருவதில்லை என்பதற்கான காரணத்தையும் கூறாததால் அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பழைய ஜாக் மாவாக அவர் பொதுவெளியில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நீண்ட நாட்களுக்குப்பிறகு ஜாக்மாவைக் கண்டதும் அவரது நலம் விரும்பிகள் பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி கலந்த கலக்கத்துடன் உள்ளனர்.
தொகுப்பு: மலையரசு