'நாம் சீனாவை சார்ந்து இருக்கக் கூடாது’ - நிதின் கட்கரி
சீனா-இந்தியா எல்லையில் தற்போதுள்ள பதற்றமான சூழலில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சீனாவை சார்ந்து இருக்காமல், நம்முடைய சொந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
சீனா-இந்தியா எல்லையில் தற்போதுள்ள பதற்றமான சூழலில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். சீனா-இந்தியா எல்லையில் உள்ள கல்வான் பகுதியில், 20 இந்திய ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் இந்த இரு நாடுகளுக்கிடையே கடந்த 50 ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. சைனோ-இந்தியா இருதரப்பிலும் டென்ஷன் அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, சீனா மீதான மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது. அதனால் பலரும் சமூக ஊடகங்களில் #BoycottChina என்று சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே எம்எஸ்எம்இ துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அரசு இறக்குமதி தொடர்பான புதிய கொள்கையை வடிவமைத்து வருவதாகவும் தெரிவித்தார். கோவிட்-19 சமயத்தில், இந்தியாவின் மின்சார வாகனத் துறைக்கான வருங்காலம் என்ற தலைப்பில் வெபினார் ஒன்றில் பேசிய கட்கரி,
“இன்று நான் உங்களிடம் நேரடியாகவே இதை சொல்ல விரும்புகிறேன். இதுவே அதற்கான சமயம் என்று உணர்கிறேன். இனி நாம் சீனாவை எல்லா விஷயத்துக்கும் சார்ந்து இருக்கக்கூடாது,” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், தற்போது சீனப் பொருட்களின் விலை குறைவாக இருப்பதால் மக்களிடையே அதற்கு ஈர்ப்பு இருக்கிறது. மின்சார வாகனத் துறையிலும் பல இந்திய உற்பத்தியாளர் நிறுவனங்கள், வாகனத்துக்கான பாகங்களை குறைந்த விலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து அதை நல்ல லாபத்துக்கு விற்பனை செய்கிறார்கள். இது நாளடைவில் குறைக்கவேண்டும் என்றார்.
“நாம் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்கவேண்டும். உள்ளூர் உற்பத்தி பெருகினால் மட்டுமே நமக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நாம் சீனாவை நம்பி குறைந்த விலையில் பாகங்களை வாங்கினால், தொடக்கத்தில் மலிவான விலையில் விற்றுவிட்டு, பின்னர் உற்பத்தி அதிகரித்ததுடன் அவர்கள் விலையை ஏற்றிவிடுவார்கள்,” என்றார்.
இந்த பிரச்சனையால் தான் நாம் சீனாவை சார்ந்திருப்பது நல்லதல்ல என தான் கருதுவதாக கட்கரி கூறினார். இதனால் நாம் சுயசார்புடன் இருப்பதே நம் தொழில் வெற்றிக்கு வழியாகும், என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நரேந்திர மோடி ‘வோக்கல் ஃபார் லோக்கல்’ என்ற பிரச்சாரத்தை முன்வைத்து, இந்திய மக்கள் சுயசார்புடன் தங்கள் சொந்த உற்பத்தையை பெருக்கவேண்டும் என்று கூறி இருந்தார். இது தற்போது சீனப் பொருட்களை புறக்கணிப்பதற்கான முதல் படியாக பலரால் பார்க்கப்படுகிறது.
கட்டுரை உதவி: பிடிஐ