புதிய ஐடியாக்களுடன் தடம் பதித்த தொழில் முனைவோர்களுக்கு ’சின்னி கிருஷ்ணன் விருதுகள்’
8வது ஆண்டாக நடைப்பெறும் இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு இன்னோவேஷன் மற்றும் சிறந்த சிந்தனைக்காக 4 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கவின்கேர் - எம்எம்ஏ இணைந்து ’சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள்’
வழங்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது. 8வது ஆண்டாக
நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு இன்னோவேஷன் மற்றும் சிறந்த சிந்தனைக்காக (Great Ideas) 4 பேருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இந்த பெருமைமிக்க விருது வழங்கும் நிகழ்ச்சியை, FMCG நிறுவனமான கவின் கேருடன் இணைந்து மெட்ராஸ் மேனேஜ்மெண்ட்
அசோசியேஷனான (எம்எம்ஏ) ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல ’Marico’ நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் சி.
மரிவாலா கலந்து கொண்டார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த ஏராளமானோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
சாஷே புரட்சியின் முன்னோடியான மறைந்த ஆர். சின்னிகிருஷ்ணன் நினைவாகவும், அவரது புரட்சிகர கண்டுபிடிப்புகளை கொண்டாடும் விதமாகவும் சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது துவக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 25க்கும் மேற்பட்ட சிறு அளவிலான வணிக நிறுவனங்களால் செய்யப்படும் புதுமை கண்டுபிடிப்புகளை பாராட்டி கவுரவித்துள்ளது.
இதன் 8 ஆண்டு பயணத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பல தொழில் முனைவோர்களின் திறமைகள் இதன் மூலம் வெளி உலகுக்கு வந்துள்ளது.
இவ்விருதுகள் 2 பிரிவுகளில் வழங்கப்பட்டது - புதுமை (Innovation) மற்றும் சிறந்த
சிந்தனைகள் (Great Ideas). புதுமை விருதுகள் பெற்றவர்களுக்கு தொழில் சந்தைப்படுத்துதல், நிதி, வடிவமைப்பு, பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் தேவையான உதவிகளை கவின்கேர் நிறுவனம் அளிக்கும்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சிறந்த சிந்தனைகளுக்கான விருதின் முக்கிய நோக்கமே பெரிய எண்ணங்களை அங்கீகரித்து வளர்ப்பதாகும்.
இந்த நிகழ்ச்சியில் கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சி.கே.ரங்கநாதன் பேசுகையில், ’சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள்’ கடந்து வந்த பாதை மற்றும் வளர்ச்சியை பார்க்கும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விருதுகள் சிறு தொழில்முனைவோர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
2011-ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த விருதுகள், இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்லும் தொழில் முனைவோர்களை அங்கீகரிப்பதற்கான சான்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் இந்த மேடையில் இன்று நாங்கள் நிற்கும்போது அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன், மூத்த துணைத் தலைவர் பி.ரவிச்சந்திரன் பகிர்கையில், ’சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகளுடன் எம்எம்ஏ தொடர்புடையதாகும். இது வணிக தத்துவ சாராம்சத்தை பிரதிபலிக்கும் சிறந்த யோசனைகள் உள்ளிட்ட சிறந்த புதுமையான நடைமுறைகளை அங்கீகரிப்பதாகும். மேலும் சின்னிகிருஷ்ணன் அவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த விருது கவின் கேரால் துவக்கப்பட்டதாகும் என்று தெரிவித்தார்.
இந்த விருதிற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 396 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விருதிற்கு விண்ணப்பித்தவர்களிடம் செயல்முறை ஆலோசகரான E&Y மூலம் நெறிபடுத்தப்பட்டு, விதிமுறைகளின்படி நேர்காணல் நடத்தப்பட்டது. மதிப்புமிக்க நடுவர் குழுவால் விருதுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
8வது ஆண்டு ’சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள் 2019க்கு தேர்வான தொழில் முனைவோர்கள்:
இன்னோவேஷன் (புதுமை) பிரிவு
எஸ்.ராஜரத்னம், ’லீஃப் கல்ச்சர்’ Leaf Culture - இலை பரப்புதல் வழிமுறை மூலம் அதிக மகசூல் தரக்கூடிய தாவர மரக்கன்றுகளை உற்பத்தி செய்து சாதனைப் படைத்துள்ளார். ஈடன் நர்சரி கார்டனை சேர்ந்த எஸ்.ராஜரத்தினம் இயற்கையாக மரக்கன்றுகளை நன்கு ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.
புதிதாக வைக்கப்படும் தாவரங்களின் வேர்களில் இளநீரை ஊற்றும்போது
அது அதிக அளவில் பெருக்கத்தை ஏற்படுத்தி வளர்கிறது என்று கண்டுபிடித்துள்ளார். இந்த
தொழில்நுட்பம் மிகவும் எளிதானது, உற்பத்தி செலவு குறைவாக உள்ளது, மரக்கன்றுகளின் மரபணு தூய்மை உறுதி செய்யப்படுகிறது, இதன் விளைவாக விவசாயிகளின் மகசூல் மற்றும் வருமானம் அதிகரிக்கும்.
ஆர்.நிவேதா மற்றும் எஸ்.கவுதம், இயற்கைமுறை சானிட்டரி பேட்கள் தயாரிப்பு - இயற்கை சுகாதார நாப்கின் தயாரிப்பதில் புதிய புரட்சி படைத்துள்ளனர். புளிச்சகீரை நார் மூலம் முற்றிலும் மக்கக்கூடிய இயற்கையான நாப்கின் தயாரித்துள்ளனர். இது 100 சதவீதம் இயற்கையானது. இதில் எந்தவித சிந்தடிக் ரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை. இது செயற்கை நாப்கின்கள் ஏற்படுத்தும் எரிச்சல் மற்றும் அரிப்பை வெகுவாக குறைக்கும்.
புளிச்சக்கீரையின் கிருமி நாசினிகள் பண்பு, தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கிறது. மேலும் இது குறுகிய காலத்தில் மக்கும் தன்மை கொண்டதாகும். இது பெண்களின் நலன் மற்றும் தேசிய சூழலியல் அமைப்புக்கு சிறந்த ஒன்றாகும்.
வி.பிரசன்னா, வி.என்.ரவி மற்றும் கவுதம் ஜெயராம், Coral Safari: கருத்தியலை நோக்கி,
தெற்காசியாவில் செயல்படும் ஒரே ஒரு கண்ணாடி அடிப்பகுதியை கொண்ட பகுதி நீர்மூழ்கி கப்பல் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இருக்கும் எம்வி சீஷைன் ஆகும். ஹெவன் ஆன் ஓஷன்ஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர்களான பிரசன்னா, ரவி மற்றும் கௌதம் ஆகியோர் அந்தமான் தீவுகளில் இந்த பகுதி நீர்மூழ்கி கப்பலை இயக்கி வருகிறார்கள்.
இந்த கப்பலில் பயணிக்கும் மக்கள் கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களை சந்தோஷமாக கண்டுகளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளும் வசதியாக அமர்ந்து பார்க்கும்படி இந்த கப்பல் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி நீர்மூழ்கி கப்பலில் இருந்து கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்கள் மற்றும் கடலின் வண்ணங்கள் ஆகியவற்றை மகிழ்ச்சியாக காணலாம்.
கூடுதலாக இது சுற்றுலாப் பயணிகள் இடையே கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவழப் பாறைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
சிறந்த சிந்தனைகள் விருது (Great Ideas)
ப்ரஜ்வல் கருணா, SID (Smart Intra-venous Dripper): இவர் ட்ரிப்ஸ் மூலம் செலுத்தப்படும் மருந்தின் அளவு, மற்றும் அதை மாற்றவேண்டிய நேரம் என அனைத்துத் தகவலையும் அளிக்கும் 'ஸ்மார்ட் ட்ரிப்பர்' 'SmartDripper' வடிவமைத்துள்ளார். இதை சுகாதார நிபுணர்கள் தொலைதூரத்தில் இருந்தும் கணினி வழியே கண்காணிக்க முடியும். Rekindle Automation நிறுவனத்தைச் சேர்ந்த பிரஜ்வெல் கருணா மற்றும் அவரது குழுவினர் இந்த Smart interavenous dripper–ஐ கண்டுபிடித்துள்ளனர்.
சின்னிகிருஷ்ணன் புதுமை விருதுகள் பற்றி: கனவு காண்பவர், புதுமைப்பித்தன், சிந்தனையாளர், தொழில்முனைவோர் என்ற வார்த்தைகள் மறைந்த திரு. ஆர். சின்னிகிருஷ்ணனை பற்றி விவரிக்கக்
கூடிய சில வார்த்தைகள் ஆகும். அவரது எண்ணங்கள் எளிய தத்துவத்தை அடிப்படையாக
கொண்டவையாகும். ``பணக்காரன் அனுபவிக்கக்கூடியது, ஏழையால் வாங்க முடியும் என்பதாகும்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான ‘மேரிக்கோ’ நிறுவன தலைவர் ஹர்ஷ் சி.
மரிவாலா கூறுகையில், தான் சாதரண அளவில் குடும்பத்தொழிலில் தனது வாழ்க்கையை தொடங்கி இன்று இந்த அளவு இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக வளரக்காரணம் தாங்கள் கொண்டுவந்த புதுமைகள் மற்றும் புதிய தயாரிப்புகள் மட்டுமே என்றார்.
“புதிய ஐடியா உடன் தொழில் தொடங்குங்கள். தொழில் நன்றாக சென்றாலும் மேலும் புதுமைகளை புகுத்திக் கொண்டே போகவேண்டும் இல்லையெனில் போட்டியாளர்களுடன் தோற்றுப்போகும் நிலை ஏற்படும். வெற்றியோ, தோல்வியோ புத்தாக்கத்தை செயல்படுத்திக் கொண்டு இருத்தலே பிசினசுக்கு நல்லது,” என்றார் ஹர்ஷ்.