'ஆசியாவின் சிறந்த இளைஞர் 2019' விருதை வென்ற கோவை இளைஞர்!
கோவையைச் சேர்ந்த சமூக தொழில்முனைவர் பத்மநாபன் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் இளைஞர் விருது விழாவில் ’ஆசியாவின் சிறந்த இளைஞர் 2019’ன் விருதினைப் பெற்று தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். ’நோ ஃபுட் வேஸ்ட்’ தொண்டு நிறுவனம் மூலம் பல ஏழை மக்களின் பசியைப் போக்கும் இவர் மெர்சல் விஜய் பாணியில் நம் கலாச்சாரத்தை ஏற்று வெள்ளை வேட்டிச் சட்டையில் விருதைப் பெற்றுள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,
“கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இப்பொழுது வரை சுமார் 267 டன் உணவுகள் வீணாவதை எங்கள் அமைப்பு தடுத்துள்ளது. இதற்காக வாங்கும் விருதை தமிழகம் சார்பிலும் என் அமைப்பைப் பிரதிபலிக்கும் வகையிலும் வேட்டிச் சட்டை அணிந்தேன்,” என்கிறார் பத்மநாபன்.
இந்த காமன்வெல்த் இளைஞர் விருது, 15–29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை நோக்கி செயல்படும் செயலை அங்கீகரித்து அளிக்கப்படும் விருதாகும். பல வருடங்களாக அரங்கேறி வரும் இந்த விழாவின் 53வது தொகுப்பு கடந்த வாரம் லண்டனில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் நடைப்பெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருக்கும் 45 காமன்வெல்த் நாடுகளில் இருந்து 500 இளைஞர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். அதிலருந்து 16 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதன் அன்று விருது வழங்கப்பட்டது. இதில் ஆசியாவிற்கான சிறந்த இளைஞர் விருதை பத்மநாபன் பெற்றார்.
“இந்த விருதை வாங்குவேன் என எதிர்பார்க்கவில்லை, பசியின் வலியை வெளிப்படுத்த முடியாது. என்னுடன் பணிபுரிந்த அனைத்து தன்னார்வளர்களுக்கும் நன்றி. பசியுள்ள மக்களுக்கு உணவளிக்க வேண்டும் நிலத்திற்கு அல்ல,” என்கிறார்.
28 வயதான பத்மநாபன், 2015 இல் ’நோ ஃபுட்வேஸ்ட்’ என்னும் அமைப்பை தொடக்கினார். வீணாக குப்பைக்குச் செல்லும் உணவுகளை சேகரித்து, இல்லாதவர்களுக்கு இவர்கள் நிறுவனம் அளிக்கிறது. பள்ளிக்கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் ஆண்டுக்கு டன் கணக்கில் உணவுகள் வீணாவதைக் கண்ட பத்மநாபன் ஓர் அவசர எண்ணை அறிவித்தார்.
திருமணத்திலோ அல்லது மற்ற நிகழ்வுகளிலோ உணவு எஞ்சினால் அவசர எண்ணிற்கு அழைக்கலாம். பத்மநாபன் அவருடைய தன்னார்வளர்களுடன் வந்து உணவை எடுத்துச் சென்று இல்லாதோருக்கு பங்கிடுவார். இவரைப்பற்றி பேலும் படிக்க..
கோவையில் மட்டும் துவங்கிய இவரது சேவை இப்பொழுது சென்னை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் தடேபல்லிகூடம் ஆகிய இடங்களுக்கு வளர்ந்துள்ளது.
இந்த விருது விழாவின் போது வேல்ஸ் இளவரசர் உடன் உரையாடும் வாய்ப்பும் பத்மநாபனுக்குக் கிடைத்துள்ளது, அந்த உரையாடலின் பொது,
“தற்போது உள்ளச் சூழலில் உணவு ஒரு பெரிய பிரச்சனையாகும், அப்பிரச்சனைக்கு தீர்வு காண சிறு வயதிலே முன் வந்தது சிறந்த செயல். இன்னும் சில வருடத்தில் நீங்கள் நல்ல வளர்ச்சி அடைவீர்கள் என இளவரசர் பாராட்டினார்,” என தெரிவிக்கிறார் பத்மநாபன்.
எதிர்காலத்தில், ஃபுட் மேப்பிங் மற்றும் உணவுக் கழிவுகளை குறைக்க தனது அமைப்பு செயல்படுமென்றும் உணவு பாதுகாப்பு மேம்படுத்துவதற்கும் புதுமையான தீர்வுகள் தாங்கள் கொண்டுவரப் போவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா