5 ரூபாய்க்கு டிபன்; 30 ரூபாயில் சிகிச்சை: கோவை மக்களின் கண்ணீருடன் விடைபெற்ற சுப்ரமணியம்!
கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் சுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. ‘கியர் மேன்’ என்று எல்லாராலும் பாராட்டப்படக்கூடிய சுப்ரமணியம் அப்படி என்னதான் செய்தார் என்பதை பார்ப்போம்.
யார் இந்த சுப்பிரமணியம்?!
கோவையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பை முடித்தவர். அப்போது அவருக்கு ஒரு கனவு இருந்தது. அது நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பதுதான். அந்த கனவுதான் பின்னாளில், சாந்தி கியர்ஸ் நிறுவனமாக மாறியது. இன்று கோவையின் அடையாங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்த நிறுவனம்.
கடந்த 1972ம் ஆண்டு சாந்தி இன்ஜினீயரிங் அண்டு டிரேடிங் என்ற பெயரில் சிங்காநல்லூரில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார் சுப்பிரமணியம். காலப்போக்கில் 1986ம் ஆண்டு சாந்தி கியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டாக அது மாற்றப்பட்டது.
கியர்ஸ் தயாரிப்பு தான் இந்நிறுவனத்தின் பிரதான பணி. கடும் உழைப்பு, திட்டமிடலால், கியர்ஸ், கியர் பாக்ஸ் தயாரிப்பதில் இந்தியாவிலே முன்னணி நிறுவனமாக தனது நிறுவனத்தை உயர்த்திக்காட்டியவர் சுப்பிரமணியம். இதன் காரணமாக கோவையின் ‘கியர் மேன்’ என்று அழைக்கப்பட்டார் அவர்.
2013ம் ஆண்டு சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வாங்கியது முருகப்பா குழுமம். தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை அக்கறையுடன் பார்த்துக்கொண்டார் சுப்பிரமணியம். அவர்களுக்கான சம்பளமும், போனஸ் இதர படிகள் சரியான முறையில் வழங்கப்பட்டு வந்தன. இதனாலேயே சாந்தி கியர்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர பலரும் முண்டியடித்துக் கொண்டு வந்தனர்.
1996ம் ஆண்டு ‘சாந்தி சமூக சேவை’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கியவர், அதன் அறங்காவலராகவும் இருந்துவந்தார் சுப்ரமணியம். சாந்தி சமூக சேவை நிறுவனம் மூலம் ஏராளமான சமூக சேவைகளை செய்து வந்தார். உணவகம், மருத்துவமனை, மருந்தகம் ஆகியவற்றை லாப நோக்கங்கள் பாராமல் தொடர்ந்து சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.
சிங்காநல்லூரில் உள்ள இந்த அறக்கட்டளையைச் சேர்ந்த உணவகம் வாடிக்கையாளர்களால் பாராட்டப்படக்கூடிய, புகழ்பெற்ற ஒன்று. தரம் மற்றும் சுவையில் உயர்தர சைவ ஹோட்டல்களுக்கு நிகராக இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டார் சுப்பிரமணியம். அதுமட்டுமல்லாமல்,
டிபன் 5 ரூபாய், மதிய சாப்பாடு வெறும் 10 ரூபாய் என்று அவர் நிர்ணயித்திருந்த கட்டணம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏழை மக்கள் பலரும் இந்த உணவகத்தின் மூலம் பலனடைந்தனர்.
குறைந்த விலையில், தினசரி பல எளிய மக்களுக்கு அட்சயப் பாத்திரமாகப் இந்த உணவகம் மூலம் பசியாற்றினார். நாள்தோறும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டது.
உணவு ஒருபுறம் என்றால் இவர் நடத்திய மருத்துவமனையில் சிகிச்சை கட்டணம் எவ்வளவு தெரியுமா? வெறும் 30 ருபாய் தான். மருந்தகங்களில் 30 சதவிகிதம் குறைப்புடன் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.
பெரிய அளவில் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல இயலாத ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் இந்த மருத்துவமனை.
அதேபோல பெட்ரோல் பங்குகள், இலவச மின்மயானம், என பல்வேறு சேவைகளை செய்து வந்தார் சுப்பிரமணியம். சிறிய உதவி செய்பவர்களே விளம்பரம் தேடிக்கொள்ளும் உலகில், கடைசிவரை ஊடகங்களில் தன்னுடைய முகத்தை காட்டாதவர் சுப்பிரமணியம். இவர் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சிகிச்சைப்பெற்று வந்த சுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏழை மக்களின் வாழ்வில் பயன்பெற லாப-நஷ்டங்களையும் பார்க்காமல் சமூக சேவையாற்றிய சுப்பிரமணியத்தின் அறக்கட்டளை வாசகம் இதுதான் ‘மனிதநேயத்துடன் செய்யும் சேவை, கடவுகளுக்கே செய்யும் சேவை’ (Service to Humanity is Service to God)