காமெடியன், நடிகர் டு பஞ்சாப் முதல்வர்: ‘ஆம் ஆத்மி’ பகவந்த் சிங் மானி உயர்ந்த கதை!
ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து இன்று பஞ்சாபின் முதல்வராக பதவியில் அமர இருக்கிறார் நடிகர் பகவந்த் மான். நகைச்சுவை மற்றும் சமூகசேவைகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவரது கதை சுவாரஸ்யமானது.
இந்தியாவைப் பொறுத்தவரை சினிமாவும், அரசியலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது மறுக்கமுடியாத உண்மை. திரையில் ஹீரோவாக ஜொலித்தவர்களை, நிஜத்தில் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள், பார்ப்பவர்கள் நம் மக்கள். அதனால்தான் மற்ற எந்தத் துறையில் இருப்பவர்களைவிடவும், திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியல் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அவர்களது பரிச்சயமான முகமும், பிரபலமும்தான்.
தற்போது பஞ்சாபின் புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அம்மாநிலத் தலைவருமான பகவந்த் மான் அடிப்படையில் திரைத்துறையைச் சேர்ந்தவர் தான். 48 வயதான அவர், 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளராக அறியப்பட்ட அவர், பஞ்சாப் முழுவதிலும் மக்களுக்கு பரிச்சயமானவர். எனவேதான், இவர் பஞ்சாபில் ஆம் ஆத்மியின் பலமாக, வெற்றிக்கு உதவியராக கருதப்படுகிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவின் ஊடக ஆலோசகரும், முன்னாள் பத்திரிகையாளருமான மஞ்சித் சிங் சித்து, பகவந்த் மானின் வகுப்புத் தோழர். அவர் பகவந்த் பற்றி கூறுகையில்,
"பகவந்த் மானின் ஆளுமையின் மிகப்பெரிய நேர்மறையான அம்சம், அவர் தனது வாதத்தை முன்வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஆயிரம் பேரிடம் பேசும் அதே உற்சாகத்துடனும், அழுத்தத்துடனும் நான்கு பேரிடமும் பேசுவார்," என்கிறார்.
இப்படியாக ஆம் ஆத்மி கட்சிக்குள் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைச் சம்பாதித்தவர் பகவந்த். 1994 முதல் 2015 வரை 13 பஞ்சாபி மற்றும் இந்தி படங்களிலும், பல விளம்பரங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். நடிகராக மட்டுமல்லாது பகவந்தை நெருங்கிய நட்பு வட்டாரத்தில் கவிஞராகவும் அறிவர்.
கிராமத்தில் பிறந்தவர்
பகவந்த் மான் 1973ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஷீமா மண்டிக்கு அருகில் உள்ள சதோஜ் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை மகிந்தர் சிங் அரசு ஆசிரியர், தாய் ஹர்பால் கெளர் இல்லத்தரசி ஆவர்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு, நகைச்சுவைத் துறையில் நுழைந்தார் பகவந்த். சங்ரூரில் உள்ள சுனாம் ஷஹீத் உதம் சிங் கல்லூரியில் படிக்கும் போது, நகைச்சுவை மற்றும் கவிதை போட்டிகளில் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பல பெற்றுள்ளார். இதன்மூலம் தொழில்முறை நகைச்சுவை கலைஞரானார் பகவந்த். அவரது முதல் நகைச்சுவை மற்றும் நையாண்டி பாடல்கள் ஒலிநாடா, 1992ம் ஆண்டு, 'கோபி தி ஏ கச்சியே வியாபர்னே' என்ற பெயரில் வெளியானது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் நகைச்சுவை உலகில் பிரபலமானார் பகவந்த்.
நகைச்சுவைத் தொழிலில் பிஸியானதால் படிப்பை பாதியில் கைவிட்டார் அவர். 1992 முதல் 2013 வரை 25 நகைச்சுவை ஆல்பங்களை ரெக்கார்ட் செய்துள்ள பகவந்த், ஐந்து பாடல்களின் டேப்களையும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே சினிமா மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கல்லூரி நண்பரான கரம்ஜித் அன்மோல் பஞ்சாபி திரையுலகில் பிரபல பாடகர் ஆவார். அவர் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பகவந்திற்கு கிடைத்தது. 1994 முதல் 2015 வரை 13 ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
அரசியல் நையாண்டி நகைச்சுவைகள் மூலம் பிரபலமான பகவந்த், பஞ்சாபின் நகைச்சுவை மன்னனாக கொண்டாடப்பட்டார். 'ஜுக்னு', 'ஜண்டா சிங்', 'பீபோ புவா', 'பப்பு பாஸ்' போன்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள் பகவந்த் மான் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது. ஜக்தார் ஜக்கி, ராணா ரன்பீர் ஆகியோருடன் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளார். 'ஜுக்னு மஸ்த் மஸ்த்' போன்ற நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ' நோ லைஃப் வித் வைஃப்' போன்ற மேடை நிகழ்ச்சிகளையும் பகவந்த் செய்துள்ளார்.
அரசியலுக்கு வந்த கதை
பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வந்த பகவந்த், அரசியலுக்கு வந்தது தனிக்கதை. தனது நகைச்சுவை ஒலி நாடாக்கள் மூலம், அரசியல் மற்றும் சமூகத்தின் பிரச்னைகளை நையாண்டி செய்து வந்த அவர், 2009-2010ல் செய்தித்தாள்களுக்கு சிறப்புக் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார்.
அப்போது, ஃபாசில்கா பகுதியில் சிறுமிகளை வினோதமான நோய் தாக்கும் செய்தி அவரது கவனத்திற்கு வந்தது. அடுத்த நாளே நேரடியாக அந்த கிராமங்களுக்குச் சென்றுப் பார்த்தார் பகவந்த். அப்போது, அந்த பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையால் அவதிப்படுவதை தெரிந்து கொண்டார்.
சற்றும் தாமதிக்காமல் தனது வெளிநாட்டு நண்பர்கள் சிலரது உதவியுடன், அப்பகுதியில் ஒரு கிணற்றை உருவாக்கினார். அதோடு விடாமல், சமூக மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த சிலரைக் கொண்டு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து இந்த விசயத்தை நாடறியச் செய்தார். சமூகம் சார்த்த இத்தகைய செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, நல்ல தலைவராகவும் அடையாளம் காணப்பட்டார் பகவந்த்.
இந்த சூழ்நிலையில் ஜலந்தரில் நடந்த பிரபல விவசாய விஞ்ஞானி சர்தார் சிங் ஜோஹல் தலைமையிலான, ‘பஞ்சாபின் பிரச்சனைகள்’ குறித்த மாநாட்டில், பிரகாஷ் சிங் பாதலின் சகோதரர் மகனும், அப்போதைய நிதியமைச்சருமான மன்பிரீத் சிங் பாதலைச் சந்தித்தார் பகவந்த். அப்போது, பகவந்த்தை தீவிர அரசியலில் நுழையுமாறு தூண்டினார் மன்பிரீத்.
அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் குதித்தார் பகவந்த். அரசியலில் குதித்ததுமே தனது நகைச்சுவை நடிகர் என்ற பட்டத்தை துறந்தார். இனி, நடிக்கப் போவதில்லை, முழு நேர அரசியல்தான் என முடிவு செய்தார்.
“எனது நகைச்சுவையின் மூலம் ஒரே ஒரு வகையான அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மட்டுமே சொல்லி வருகிறேன். சேற்றை சுத்தம் செய்ய, சேற்றில் இறங்க வேண்டும் என்று இப்போது உணர்கிறேன். அதனால் தான் இப்போது தீவிர அரசியலுக்கு வந்துள்ளேன். அகாலியும், காங்கிரஸும் இணைந்து அதிகார வட்டத்தை உருவாக்கியுள்ளன. இதில் பஞ்சாப் மக்கள் நசுங்கி வருகின்றனர். பஞ்சாபுக்கு ஒரு மாற்று தேவை. இதைக்கொடுக்க நாங்கள் முயற்சிப்போம்," என தன் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பகவந்த் கூறினார்.
சிறுவயதில் இருந்தே பகவந்திற்கு உள்ளே ஒரு அரசியல்வாதி இருந்துள்ளார். சொற்பொழிவு ஆற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டவரான பகவந்த், ‘இளம் வயதில் வயல்களில் தண்ணீர் பாய்ச்சும்போதும், மரம் வெட்டும்போதும் ஒரு கம்பை மைக் போல வைத்துக்கொண்டு பேசிக் கொண்டே இருப்பார்’, என அவரது நண்பர் மஞ்சித் குறிப்பிடுகிறார்.
கல்லூரி நாட்களில், இடதுசாரிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார் பகவந்த். ஆனால், அப்போதும் அவர் எந்தக் கட்சியிலும் நேரடியாக உறுப்பினராகவில்லை. ஆனால், தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னரே பல அரசியல் கட்சி மேடைகளில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக பல்வந்த் சிங் ராமுவாலியாவின் லோக் பாலாய் கட்சியை பஞ்சாபில் மூன்றாவது பெரிய கட்சியாக்கும் பல நடவடிக்கைகளை அவர் மேர்கொண்டார்.
பின்னர், மன்பிரீத் பாதல் முயற்சியால், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 'மக்கள் கட்சி’யில் இணைந்தார். பஞ்சாப் மக்கள் கட்சியின் (பிபிபி) நிறுவனத் தலைவர்களில் ஒருவரானார். 2012 பிப்ரவரியில், பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் லெஹ்ராகாகா தொகுதியில் பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜீந்தர் கெளரை எதிர்த்து பிபிபி வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.
2012 சட்டப்பேரவைத் தேர்தலில், பிபிபி கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காததால், அகாலி தளம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதையடுத்து, மன்பிரீத் சிங் பாதல் காங்கிரஸில் சேரத் தயாராகிவிட்டார். ஆனால், காங்கிரஸில் சேராமல் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்த பகவந்த் மான், 2014 ஆம் ஆண்டு 'ஆம் ஆத்மி' கட்சியில் இணைந்தார்.
அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து உருவான ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. எனவே, 2014 மக்களவைத் தேர்தலில் மீண்டும் களமிறங்கினார் பகவந்த். அப்போது, சங்ரூர் மக்களவைத் தொகுதியில் 2,11,721 வாக்குகள் வித்தியாசத்தில் அகாலிதள தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சாவை பகவந்த் தோற்கடித்தார். அத்தோடு அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களில் வெற்றி பெற்றது.
அடுத்த சில ஆண்டுகளிலேயே பஞ்சாபின் அரசியல் சூழல் மாறியது. 2017 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி கட்சியும் பிரிந்தது. சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தவிர, மூன்றாவது கட்சியில் இருந்து சங்ரூரில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவைக்கு வந்த ஒரே தலைவர் பகவந்த் மட்டுமே. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணித் தலைவராக பகவந்த் உருவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு மே 8 அன்று, ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவு தலைவராக பகவந்த் மான் நியமிக்கப்பட்டார். ஆனால், சிறிது காலத்திலேயே தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அகாலி தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதால் வருத்தம் அடைந்து இந்த முடிவை அவர் எடுத்தார். ஆனாலும் தொடர்ந்து அக்கட்சியிலேயே செயல்பட்டு வந்தார்.
2017 பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஜலாலாபாத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டார் பகவந்த். ஆனால், 18,500 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். மீண்டும் 2019 மக்களவைத் தேர்தலில், போட்டியிட்ட பகவந்த், இம்முறை வெற்றி பெற்றார்.
தொடர் ‘மது’ சர்ச்சை
பிரபலமானவர்கள் சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. பெரும்பாலும் பணமோசடி குற்றச்சாட்டுகளில்தான் அவர்கள் சிக்குவார்கள். ஆனால், ஏறக்குறைய பத்தாண்டு கால அரசியல் வாழ்க்கையில், பகவந்த் மான் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு அவர் மது அருந்தினார் என்பதுதான். தொடர்ந்து சொந்தக் கட்சியினராலேயே பகவந்த், மது அருந்துபவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார்.
இதனால், எதிர்க்கட்சியினரும் அவரை குடிபோதையில் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகக் குற்றம்சாட்டினர். ஒருமுறை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பகவந்த் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பா.ஜ.க எம்.பி., அவரின் அருகில் வந்து, அவர் மீது மது வாடை அடிக்கிறதா என முகர்ந்து பார்த்தார். இதனால் மேடையை விட்டு அவர் வெளியேறினார். இந்த வீடியோ வைரலானது.
ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாக பகவந்த் எடுத்துக் கொள்ளவில்லை. நாடாளுமன்ற சம்பவத்திற்குப் பிறகுகூட, காரில் அமைதியாக அமர்ந்து, ‘தான் எந்தவித சர்ச்சையையும் உருவாக்க விரும்பவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தன்னை களங்கப்படுத்தும் நோக்கத்திலானவை’ என்றும் அமைதியாகக் கூறிவிட்டு அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.
இருந்தபோதும் இந்த மது பிரச்சினை அவரை விடுவதாக இல்லை. 2016 நவம்பரில் ஆஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட பாடகர் மன்மீத் அலிஷேரின் இறுதிச் சடங்கில் பகவந்த் மது அருந்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. பகலில்கூட பகவந்த் போதையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. 2015 ஆம் ஆண்டு குரு கிரந்த் சாஹிப் அவமானப்படுத்தப் பட்டதை எதிர்த்து நடந்த ஆர்பாட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதும் பகவந்த் மான் மது அருந்தியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பஞ்சாபிலும், பகவந்த் மான் குடிபோதையில் இருப்பதாகக் கூறும் பொது நிகழ்ச்சிகளின் பல வீடியோக்கள் வைரலாகின. பகவந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இதை அகாலி தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் சதி என்றார்கள். இந்த சர்ச்சைகள் பகவந்தை மேலும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது என்றுதான் கூற வேண்டும்.
இறுதியாக, 2019 ஜனவரி 1 முதல் மதுவைத் தொடமாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளதாக, 2019 ஜனவரி 20ஆம் தேதி பர்னாலாவில் நடந்த கட்சிப் பேரணியின் போது, தனது தாயார் முன்னிலையில் பகவந்த் மான் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மது தொடர்பான சர்ச்சைகளில் இருந்து அவருக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.
விளையாட்டில் ஆர்வம்
விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவரான பகவந்த்துக்கு, கிரிக்கெட், ஹாக்கி மற்றும் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு. அலாரம் வைத்து எழுந்து, நள்ளிரவு 2-3 மணிக்குக்கூட விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பாராம். வானொலியில் விளையாட்டுப்போட்டிகளின் வர்ணனையைக் கேட்பது அவரது சிறுவயது பழக்கம். இன்றுவரை அதனை அவர் விடவில்லை.
நட்புக்கு மரியாதை
தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு சென்ற போதும், உடன் படித்த நண்பர்களை மறக்காதவர் பகவந்த். நட்புக்கு மரியாதை தரும் விதமாக, தனது கிராமத்தில் உள்ள எல்லா வகுப்பு தோழர்களையும் நண்பர்களையும் விமானத்தில் பயணம் செய்ய வைத்துள்ளார். அதோடு, நிகழ்ச்சிகளுக்காக பஞ்சாபைத் தாண்டி வெளியில் செல்லும்போதெல்லாம், ஏதாவது ஒரு நண்பரை தன்னுடன் அழைத்துச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறார் பகவந்த்.
விளையாட்டு மட்டுமின்றி நாட்டு நடப்புகள் மீது தனி ஈடுபாடு கொண்டவர் இவர். காலையில் எழுந்ததும் பஞ்சாபின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் என்ன நடந்திருக்கிறது என்ற கள நிலவரத்தை அவர் தெரிந்து கொள்வாராம்.
முதல்வர்
பகவந்த் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கதை சுவாரஸ்யமானது. கடந்த முறை சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்ததே, அக்கட்சிக்கு பெரும் சறுக்கலாக அமைந்தது.
எனவே, இம்முறை போன் மூலம் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் சர்வே ஒன்றை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். வித்தியாசமான இந்த சர்வேயில் சுமார் 2.15 மில்லியன் பேர் கலந்து கொண்டு பதிலளித்தனர். அதில், 93%க்கும் அதிகமான வாக்குகள் பகவந்த் சிங் மானுக்கு கிடைத்தது. இதனால் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் பகவந்த்.
அதோடு, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில்,
"பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரானம் சர்தார் பகவந்த் மானுக்கு என் வாழ்த்துகள். பஞ்சாப் மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கின்றனர். இது ஒரு பெரிய பொறுப்பு. எல்லா பஞ்சாபி மக்களின் முகத்திலும் பகவந்த் மான் மீண்டும் புன்னகையை வரவழைப்பார் என்று நான் நம்புகிறேன்," எனத் தெரிவித்திருந்தார்.
பஞ்சாபில் தனது கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையை “உண்மையான பஞ்சாபை மீட்பதற்கான போர்” என்று ஷாஹீத் பகத்சிங் பெயரில் சத்தியம் செய்து, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் ‘பசந்தி’ (மஞ்சள்) தலைப்பாகை அணிந்து கொண்டு தேர்தல் வேலைகளைத் தொடங்கினார் பகவந்த்.
அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது போலவே, பஞ்சாப் அரசியலில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார் பகவந்த். துரி தொகுதியில் காங்கிரஸின் தல்வீர் சிங் கோல்டியை எதிர்த்து போட்டியிட்ட பகவந்த், சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார்.
“எனக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் எதிராக மற்ற கட்சிகள் பல தந்திரங்களையும் பயன்படுத்தினர். தனிப்பட்ட தாக்குதல்களை செய்தார்கள். கேலி செய்தார்கள். ஆனால் மக்கள் அவற்றையெல்லாம் நிராகரித்து எங்கள் மீது நம்பிக்கை காட்டியுள்ளனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சாமானியரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
படே பாதல் சாஹிப் தோற்றார், சுக்பீர் (பாதால்) ஜலாலாபாத்தில் தோற்றார். கேப்டன் பாட்டியாலாவில் தோற்றார். சித்து, மஜிதியாவும் தோற்றனர். சன்னி இரண்டு இடங்களிலும் தோற்றுவிட்டார். கேஜ்ரிவாலின் கணிப்புகளே இன்று உண்மையாகியுள்ளது, என தனது வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார் பகவந்த்.
ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற அரசியல்வாதிகளின் மொத்த சொத்து மதிப்பு எப்படி அதிகரித்தது, ஆனால் தன்னுடைய சொத்து மதிப்பு எப்படி குறைந்தது என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் பகவந்த் மக்களுக்கு எடுத்துரைத்தார். இதுவும் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை உருவாக பெரும் காரணமாக அமைந்தது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் பகவந்த். நண்பர்களும், எதிரிகளும் அவரை ஒரு சாதுர்யமான அரசியல்வாதி என விமர்சிக்கின்றனர். அதே நேரத்தில் கெஜ்ரிவால் கட்சியை வழிநடத்த நம்பகமானவராகவும், பணிவானவராகவும் பகவந்த் இருப்பதாகவும் அவரைப் பற்றி கருத்து கூறுகின்றனர்.